Showing posts with label evr periyar. Show all posts
Showing posts with label evr periyar. Show all posts

Tuesday, December 7, 2010

ராஜாஜியும் மலாயாத் தமிழ்ச் சிறுகதையும் தூக்கில் தொங்கிய கணபதியும்


ராஜகோபாலன் எனும் பெயரை வடநாட்டுப் பாணியில் ராஜாஜி (10.12.1878 – 25.12.1972) என்று அழைத்தவர் காந்திஜி. பாரத ரத்னா ராஜாஜி அபூர்வமான மனிதர். விசித்திரமானவர். பெரும் படிப்பாளி. மகா புத்திசாலி. The wisest man in India என்றும் மூதறிஞர் என்றும் புகழப்பட்டவர். சாமர்த்தியமான வழக்கறிஞர். தந்திரமான அரசியல்வாதி. நிறைவாழ்வு வாழ்ந்தவர். தனக்குப் பிடித்ததை யார் எதிர்த்தாலும் பொருட்படுத்தாமல் செய்யக்கூடியவர். 1938ல் கட்டாய இந்தி நுழைவும் 1952ல் குலக்கல்வித் திட்டமும் அவரால் கொண்டுவரப்பட்டு பெரியாருடைய தீவிர எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டவை. ஒத்துழையாமைக்காக சிறைவாசம் அனுபவித்தவர். சென்னை மாகாணத்தின் முதலமைச்சர். மத்திய அரசாங்க அமைச்சர். கவர்னர் ஜெனரல் நாற்காலியில் அமர்ந்த ஒரே இந்தியர். பிளவுபட்ட வங்காளத்தின் மேற்குப் பகுதிக்கு கவர்னர். இத்தனை பதவிகளையும் வகித்துவிட்டுத்தான் ஓய்வு எடுக்காமல் 1952 தேர்தலில் தோற்றுப்போன காங்கிரஸ் கட்சியைப் பதவியில் அமர்த்த 74ஆம் வயதில் இரண்டாவது தடவையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். மொழிவழி மாநிலக் கோரிக்கை வலுத்தபோது சென்னை மாநகரை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தவர். கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் 58 நாள் உண்ணாவிரதம் இருந்து 16 டிசம்பர் 1952ல் உயிர்விட்டபோதும் கொஞ்சம்கூட மசியவில்லை ராஜாஜி. காங்கிரசின் சோஷலிஸ்டுப் போக்கை எதிர்த்து 1959ல் சுதந்தராக் கட்சியை 81ஆம் வயதில் ஆரம்பித்தவர். திமுக-வோடு சேர்ந்து 1967ல் அண்ணாதுரையை முதலமைச்சராக்கியவர். ‘நான் என் பூணூலைப் பிடித்துக் கொண்டு சொல்கிறேன். நீங்கள் திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று தம் தரப்பை நியாயப்படுத்திச் சொன்னவர் ராஜாஜி. அப்போது அவருக்கு வயது 89.

1962 தேர்தலில்தான் ராஜாஜி திமுக பக்கம் வந்தார். காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அண்ணாதுரையும் அத்தொகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதிக்கு முன்னாள் ஜஸ்டிஸ் கட்சி ஏ ராமசாமி முதலியாரின் மகன் ஏ கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர். கடைசி நாள் பிரச்சாரத்தில் (22.2.1962) காஞ்சிபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ராஜாஜியும் அண்ணாவும் ராமசாமி முதலியாரும் கலந்துகொண்டு பேசினார்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு கூட்டம் அது. அண்ணாவின் தமிழைக் கேட்டு மோகித்துப் போனேன் என்று ராஜாஜி அங்கமெல்லாம் பூரிக்க, ராஜாஜி அவர்களுடன் நாங்கள் ஏற்படுத்திக் கொண்டது கூடா நட்பு அல்ல தேடா நட்பு என்று அண்ணா தம் பாணியில் விவரிக்க பல்லாயிரம் பேர் பார்த்து, கேட்டு மகிழ்ந்து புல்லரித்த மாபெரும் கூட்டம் அது. (நானும் எனது தோழர்கள் இருவரும் அந்த அதிசயக் கூட்டத்தை ரசிக்க புதுச்சேரியிலிருந்து சைக்கிளில் சென்று வந்தது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.)

ராஜாஜிக்கு வயதோ முதுமையோ ஒரு பொருட்டில்லை. விரும்பியதைச் சாதிக்க எதையும் எப்போதும் எப்படியும் செய்யலாம் என்பதில் விடாப்பிடி குணம் வாய்த்தவர். இப்பேர்ப்பட்ட அசகாய சூரர் ஒரு மகத்தான எழுத்தாளராகவும் திகழ்ந்தார் என்பதுதான் நமக்கு வேண்டிய செய்தி. தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் புனைந்துள்ளார். கவிதை, கதை, நாவல், என்று கை வரிசை காட்டினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார். டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதம் சிறையில் அடைப்பட்டுக் கிடந்த ராஜாஜி வெளியே வந்ததும் சிறையில் தவம் எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார். ஐந்து முறை சிறை சென்றவர் அவர்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற ராஜாஜியின் ராகமாலிகைப் பாடல் எம் எஸ் சுப்புலட்சுமியின் மதுர கானத்தில் மேடைகள் தோறும் இடையறாது ஒலித்தது. இரு பெரும்புள்ளிகளின் கூட்டில் விளைந்த பயன் அது. எம் எஸ் அப்பாடலை 1966 அக்டோபர் 23ஆம் தேதி நியூயார்க்கில் ஐக்கியநாட்டுப் பொதுச்சபை மன்றத்தில் பாடினார். மீரா, சகுந்தலை போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் கதாநாயகியும் கர்னாடக இசைக்கலைஞரான மதுரை சுந்தரவடிவு சுப்புலட்சுமியும், அவரது கணவராகிய கல்கி பத்திராதிபர் சதாசிவமும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும் ராஜாஜியை தெய்வமாகவே மதித்து வணங்கியவர்கள். 1933ல் ஆனந்தவிகடனில் புதிதாகத் தொடங்கப்பட்ட விளம்பர இலாக்காவின் நிர்வாகியாக வந்து சேர்ந்தவர் டி சதாசிவம். 1926ல் பூதூர் வைத்தியநாதய்யர் ஆரம்பித்த ஆனந்தவிகடன் இதழை 1928ல் எழுத்துக்கு 25 ரூபாய் வீதம் 200 ரூபாய் கொடுத்து வாங்கிய எஸ் எஸ் வாசனிடம் வேலைக்குப் போனவர் கல்கி எனும் புனைபெயரில் எழுதிய ரா கிருஷ்ணமூர்த்தி. 1. 8. 1941ல் சதாசிவம் கல்கி இதழைத் துவக்கியபோது கல்கி கிருஷ்ணமூர்த்தியும் அதில் போய் இணைந்தார். பத்திரிகையில் 25% பங்கு கல்கிக்கு. மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம். கல்கியைத் தொடங்குவதற்கு எம் எஸ் சுப்புலட்சுமி 1941ல் சாவித்திரி படத்தில் ஆண் வேடத்தில் நாரதராக நடித்துப் பணம் வாங்கிக் கொடுத்தார்.

ராஜாஜி புனைந்த பக்திப் பாட்டின் பின்னணியில் ஒரு சோகமான முரணை உணர்கின்றனர் சிலர். ராஜாஜி தம் 37ஆம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைக் குட்டி லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது மகள் லட்சுமிக்கு 45 வயது. காந்திஜியின் மகன்தான் தேவதாஸ். இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்த வண்ணம் இருந்த அவரால் குறை ஒன்றும் இல்லை என்று எப்படி பாட முடிந்தது என்பதை அதிசயமாகப் பார்த்தவர் பலர்.

தமிழ்ப் பற்றில் கொஞ்சமும் சளைத்தவரல்லர் இளைஞர் ராஜாஜி. சேலம் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்தார். அறிவியல் சொற்களை அழகு தமிழில் சொல்ல 1916ல் தமிழ் அறிவியல் சொற்கழகத்தை நிறுவி பள்ளிகளில் தமிழிலேயே பாடம் சொல்லித்தர வேண்டும் என்று வலியுறுத்தினார். தனித்தமிழ் இயக்கத்தின் எதிரொலியாகக் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்களுக்கு அதிக இடந்தரவேண்டும் என்பதை வற்புறுத்த 1930களில் தமிழிசை இயக்கம் தொடங்கியபோது ஆரம்பத்திலேயே அதனை ஆதரித்துத் தமிழ் இசைச் சங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டவர் ராஜாஜி. அவருடைய ஈடுபாட்டினால் கல்கியும் சதாசிவமும் எம் எஸ்ஸூம் தமிழிசை வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர். தமிழிசைச் சங்கம் என்ற பெயர் சூட்டக் காரணமாயிருந்தவரும் ராஜாஜிதான்.

ஒரு பெரிய சீர்திருத்தவாதி ராஜாஜி. மகளின் கலப்பு மணத்தை ஆதரித்து காந்திஜியின் சம்பந்தி ஆனவர். 1939ல் முதல் தடவை முதலமைச்சராக இருந்தபோது தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுக்கு வகை செய்யும் மசோதாவைக் கொண்டுவந்தவர். பொதுக்கிணறு, குளங்களில் தலித்துகள் தண்ணீர் எடுக்கவும், தலித்துகளும் மற்றவர்களும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பிரவேசிப்பதற்கும் பாடுபட்டவர். 1925ல் பஞ்சமன் (கீழ்ச்சாதி) ஒருவன் பக்திப் பரவசத்தில் தன்னையும் மறந்து ஏனைய பக்தர்களோடு திருச்சானூர் கோயிலுக்குள் நுழைந்த குற்றத்திற்காக திருப்பதி நீதிமன்றம் தண்டனை வழங்கியதைப் பத்திரிகையில் படித்துவிட்டுக் குமுறினார் ராஜாஜி. காந்திஜியின் அன்புக் கட்டளைக்கிணங்கி வக்கீல் தொழிலைப் புறக்கணித்து ஏழாண்டு ஆனபோதிலும் மறுபடியும் நீதிமன்றம் ஏறி அந்த ஏழை பஞ்சமனுக்காக வாதிட்டு அவனுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்து சமூக அநீதியை உடைத்தெறிந்தார்.

1954ல் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது ராஜாஜிக்கு வயது 76. அதன்பிறகு ராமாயணத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். கல்கி வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை சக்கரவர்த்தித் திருமகன் எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைச் சுவையாக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே சக்கரவர்த்தித் திருமகன் எனுந்தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான். அத்தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று. அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958ல் கிடைத்தது. ஒரு பழைய இதிகாசத்தைச் சுருக்கி எழுதியதற்குப் பரிசா என்று சிலர் வெகுண்டனர். அகாடமியின் போக்கைக் கண்டித்து சரஸ்வதி இதழில் க நா சுப்பிரமணியம், தொ மு சி ரகுநாதன், டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் முதலானோர் கண்டித்து எழுதியதை சுந்தர ராமசாமி ஏழாண்டுக்குமுன் நினைவுகூர்ந்தார். சாகித்திய அகாடமியின் விருது வரிசையில் மூன்றாவதாகப் பரிசு வாங்கியவர் ராஜாஜி. முதல் விருது 1955ல் ரா பி சேதுப்பிள்ளையின் தமிழின்பம் கட்டுரைத் தொகுப்புக்குக் கிடைத்தபோதே சலசலப்பு எழுந்தது. இரண்டாவது விருது ராஜாஜியின் சீடர் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு 1956ல் அலை ஓசை நாவலுக்காக வழங்கப்பட்டது. ராஜாஜியை மையமாக வைத்து எழுந்த சர்ச்சை ஓய்ந்தபிறகு மூன்றாண்டு கழித்தே நான்காவது விருது 1961ல் டாக்டர் மு வரதராசனின் அகல் விளக்கு நாவலுக்குக் கிடைத்தது.

ராமாயணத்தை ஏன் ராஜாஜி தேர்ந்தெடுத்தார்? 1951ல் மகாபாரதச் சுருக்கத்தையும் ராமாயணச் சுருக்கத்தையும் பாரதிய வித்யா பவனுக்காக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டபோதே தமிழிலும் அவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கலாம். பத்தாண்டுக்கு முன்பே ஆங்கில மகாபாரதம் 40 பதிப்புகளும் ராமாயணம் 34 பதிப்புகளும் போடப்பட்டு ஒவ்வொன்றும் பத்து லட்சம் பிரதிகளைத் தாண்டியது.

ஈ வே ராமசாமிப் பெரியார் (17.9.1879 – 24.12.1973) கூறுவதைக் கேளுங்கள். ‘ நான் இராமயணப் பாத்திரங்கள் (1930) என்று புத்தகம் போட்டு அதில் இராமன் அயோக்கியன், பித்தலாட்டக்காரன், வீரமில்லாதவன் என்று ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறேன். இதை மாற்றித் திருப்பவேண்டும் என்பதற்காக இராசகோபாலாச்சாரியார் சக்கரவர்த்தித் திருமகன் என்று 300 பக்கத்தில் ஒரு புத்தகம் போட்டு ஒரு ரூபாய் விலையில் விற்றார்கள். அரசு என்னடா என்றால் சக்கரவர்த்தித் திருமகன் எழுதியதற்காக சிறந்த நூல் என்று ஐயாயிரம் ரூபாய் பரிசு தருகிறார்கள்.’ மாயவரத்தில் 31.3.1959ல் பெரியார் பேசியது இது. ராமாயணத்தின் 13 கதாபாத்திரங்கள் மீது பெரியார் வீசும் குற்றச்சாட்டுகளின் பட்டியல்தான் அவருடைய நூல். சீதையை ராமன் கொடுமைப் படுத்தினான், சீதை கற்புள்ள பெண் அல்லள், ராவணன் மீது அவள் விருப்பம் கொண்டிருந்தாள், ராமன் மீட்டபோது சீதை மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தாள் என்றெல்லாம் பெரியார் எழுதியிருந்தார்.

பெரியார் 1919 முதல் 1925 வரை தமிழ்நாட்டுக் காங்கிரசில் இருந்தபோது செயலாளர், தலைவர் பதவிகளை வகித்தவர். 1922ல் திருப்பூர்க் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மனுதர்மத்தையும் ராமாயணத்தையும் எரிக்கவேண்டும் என்று யோசனை சொன்னார். ராமாயணத்தை எரித்ததாகக்கூட ஒரு தகவல். பெரியாரின் ஆப்த நண்பரான ராஜாஜி, பெரியார் மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால் கட்சித் தேர்தலில் அவருக்கு இன்னும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.

தமிழகத்தின் இருபெரும் துருவங்களான பெரியார், ராஜாஜி ஆகியோரின் மூலம் ராமாயணம் தமிழ்நாட்டு அரசியலிலும் தமிழர்களின் வாழ்க்கையிலும் பிரச்னைக்குரிய ஒரு புத்தகமாகிப் போனது. மகாபாரதச் சுருக்கம் வியாசர் விருந்து எனும் பெயரில் புத்தகமாக வந்தது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதே தாம் இந்திய மக்களுக்குச் செய்த தலையாய தொண்டு என்று அழுத்தமாக வருணித்தார் ராஜாஜி. கிருஷ்ணன் மகிமையைச் சொல்லும் பாகவதம் கதையை அடுத்தபடியாகக் கல்கியில் எழுதலாம் என்று சதாசிவம் சொன்னபோது அதில் பகவானின் லீலைகளும் அற்புதங்களும் மிகுதியாக இருப்பதால் அதைச் சுருக்கிச் சொல்வதில் நாட்டமில்லை என்று கருத்துரைத்தார் ராஜாஜி.

பாரதியாரை 1909ல் சந்தித்த ராஜாஜி வ உ சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பரும்கூட. 1919 ஏப்ரல் 13ஆம் தேதி அமிர்தசரஸ் நகரில் பொற்கோயிலுக்கு அருகில் ஜாலியன்வாலாபாக் பூங்காவில் Rowlatt சட்டத்தின் கெடுபிடியை எதிர்த்து மக்கள் அமைதியாகக் கூடிக் கண்டனம் தெரிவித்தபோது, ராணுவம் அப்பாவி மக்களைத் தாக்கி சுமார் ஆயிரம் பேரைக் கொன்ற படுகொலையைக் கண்டித்து ராஜாஜி சேலம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதேபோல பெரியாரும் ஈரோட்டு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தார். ரவீந்திரநாத் தாகூர்கூட சர் பட்டத்தைத் திருப்பியனுப்பிவிட்டார். காங்கிரஸ்வாதி எஸ் ஸ்ரீனிவாச ஐயங்கார் சென்னை மாகாணத்தின் Advocate General பதவியைத் தூக்கியெறிந்தார்.

திக்கற்ற பார்வதி எனும் ராஜாஜியின் நாவல் 14 ஜுன் 1974ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் திரைப்படமாக வந்து மத்திய அரசாங்க விருதையும் Filmfare விருதையும் வாங்கியது. லட்சுமி, ஸ்ரீகாந்த் நடித்தனர். மதுவின் தீமைகளை விளக்கும் அந்தப் படம் ராஜாஜி நடத்திய ஒரு வழக்கின் உண்மைக் கதை என்று ஸ்ரீகாந்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய ராஜாஜி அதற்காகவே 1929 ஆகஸ்ட் 29ல் விமோசனம் மாத சஞ்சிகையை திருச்செங்கோடு ஆசிரமத்திலிருந்து நடத்தினார். மதுவிலக்குக் கதைகள் நிறைய எழுதினார். கல்கி அப்பத்திரிகையின் உதவி ஆசிரியர். அவரும் குடியின் கொடுமையைச் சித்திரிக்கும் எட்டுக் கதைகளை எழுதினார். மொத்தம் 21 மதுவிலக்குக் கதைகள் விமோசனத்தில் வந்தன. 1930ல் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு ராஜாஜி ஒன்பது மாதச் சிறைத்தண்டனை பெற்றபோது மேலும் ஓர் இதழை மட்டும் கொண்டுவந்து பத்தாவது இதழுடன் (மே 1930) பத்திரிகையை முடித்துக்கொண்டார் கல்கி. முதல் இதழ் ஆயிரம் பிரதிகள் போனது. ஒன்பதாவது பத்தாவது இதழ்கள் நாலாயிரம் விற்றன.

1940ல் ராஜாஜியின் பரிந்துரையின் பேரில் ஆயிரம் தமிழ் நூல்களை தாகூர் நடத்திய சாந்தி நிகேதன் கல்வி நிலையத்துக்குக் கொண்டுபோய் வழங்கினார் கல்கி. ரசிகமணி டி கே சியும் உடன் சென்று வந்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்குக் கதைக் கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்து வைத்திருந்தார். வளர்ந்து வரும் சிறுகதையின் உத்தி முறைகளை அவர் ஒரு கட்டுரையில் மிக அழகாக விவரித்தார். அந்த அற்புதமான கட்டுரை எந்தத் தமிழ்நாட்டு சஞ்சிகையில் வந்தது என்று தெரியவில்லை. 1948ல் கோலாலம்பூரிலிருந்து தலைகாட்டிய தமிழ்ச்சுடர் மாத இதழ் அதன் முதல் ஜனவரி இதழிலேயே (பக்கம் 41-45) அக்கட்டுரையை எடுத்துப் போட்டு அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டது. தமிழ்ச்சுடரில் காணப்படும் தலைப்பு சிறுகதைப் பண்பு. ராஜாஜி சூட்டிய தலைப்பும் அதுதானா என்பது தெரியவில்லை. நவீன இலக்கிய வடிவம் ஒன்றை உள்வாங்கி அதனைப் புரிந்துகொண்ட விதம் வியப்பாக இருக்கிறது. தமிழ்ச் சிறுகதை பற்றிய விமர்சனக் கட்டுரைகளில் மிகச் சிறந்த ஒன்றாக இதனைக் கருதலாம்.

சிறுகதைப் பண்பு (ராஜாஜி)

(மலாயா எழுத்தாளர்கள் சிறுகதைத் துறையில் கவனம் செலுத்தவில்லை. பத்திரிகை வசதி இல்லாததையும் காரணமாகக் கூறலாம். ‘தமிழ்ச்சுடர்’ சிறுகதைத் துறையில் மலாயாவில் எழுச்சியை உண்டுபண்ணி விரைவில் சிறுகதைப் போட்டி ஒன்றும் ஆரம்பிக்கவிருப்பதால் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ராஜாஜியின் இச்சிறுகதை இலக்கணம் மிக உதவியாகவிருக்கும்.)

நீண்ட கதை எழுதுவதற்கு வேண்டிய பொறுமையும் அவகாசமுமில்லாமல் சுருக்கமாக எழுதப்பட்ட கதை சிறுகதை ஆகும் என்று யாராவது எண்ணினால் அது தவறாகும். சிறுகதை வேறு, பெருங்கதை வேறு. அளவு வித்தியாசம் மட்டுமல்ல; வகையே வேறு. ஆலமரம், புளியமரம் முதலிய மரங்கள் ஒரு ஜாதி, கிளைகளின்றி ஒரே தண்டாக வளரும் தென்னை, பனை, கமுகு முதலிய மரங்கள் வேறு ஜாதி, அதைப்போல் சிறுகதை வேறு, பெருங்கதை வேறு.

சிறுகதை நெடுங்கதையைப் போல் ஒரு நீடித்த காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்தரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்தரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்படமாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால் கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்சென்று தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும்.

சிறுகதையில் பிரதான பாத்திரங்கள் என்றும் பிரதானமல்லாத பாத்திரங்கள் என்றும் இரு வகையாக இருக்காது. எல்லாருமே முக்கியமாக இருக்கவேண்டும். எல்லாருடைய லட்சணங்களும் தூக்கிக் காட்டி நிற்கவேண்டும். கதையும் இரண்டு மூன்று கிளைகளாக வளர்ந்து ஆங்காங்கே பிணைவதும் பிரிவதும் நெடுங்கதைகளில் இருப்பதுபோல் சிறுகதைக்குப் பொருந்தாது.

சிறுகதையில் நிகழ்ச்சி அமைப்பு பல்வேறு இடங்களிலும் பல்வேறு காலங்களிலும் பரவிச் செல்லாமல் அனேகமாக நின்ற இடத்தில் நின்று முடியும். கதைப்போக்கும் விசையோடு செல்லும். பல விஷயங்கள் கதையில் அமைந்து நின்றாலும் கிளைப் பொருள்கள் சுருக்கமாகவும் சூசனை முறையிலும்தான் காணப்படும். நிகழ்ச்சியின் நடுப்பகுதியானது சிறுகதையில் சிறியதாகவே இருக்கும்.

சிறுகதையின் உயிர் அதில் விளங்கும் கருத்து. பல கருத்துக்கள் காடுபட்டுக் கிடக்காது. நெடுங்கதையில் அனேக கருத்துக்கள் தாண்டவமாடலாம். சிறுகதையில் திட்டவட்டமான ஒரு மனோவேகம் அல்லது கருத்தே இடம்பெற்றிருக்கும். மொத்தத்தில் சிறுகதை நாடகத்தையடுத்த கலைவகை என்று சொல்லலாம். சிறுகதையானது வாமனாவதாரத்தைப் போன்ற கலையுருவும் மனதைக்கவரும் அழகும் அவயவ அந்தமும் பெற்றிருக்கும். குறளுருவமானாலும் எதையும் மூன்றடிகளில் தாவியளக்கும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.

சிறுகதை எழுதுவது எப்படி? வாழ்க்கையில் நாம் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ சந்தர்ப்பங்களில் புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறோம். மனதை ஆட்டிக் குலைக்கும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அவற்றை உட்கொள்ளவேண்டும். உண்ட உணவானது செரித்து எவ்வாறு தசையும் ரத்தமும் நரம்புமாகிறதோ அவ்வாறு அந்த நிகழ்ச்சியை நம்முடைய உணர்ச்சியில் உருவு கொள்ளச் செய்ய வேண்டும். அது பிறகு சிறுகதை இலக்கணத்துடன் வெளியாகவேண்டும். கற்பனா சக்தி ஒரு பிறவிச் செல்வமா அல்லது பயிற்சிப் பொருளா என்ற கேள்வி உண்டு. எவ்வாறாயினும் எல்லாரும் ஓரளவு கற்பனா சக்தி படைத்திருக்கிறோம். அதற்குப் பயிற்சி தந்தால் வளரும். தராமல் போனால் அழிந்துபோகும். நன்றாக கண்ணையும் காதையும் செலுத்தி உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் கவனித்து வரவேண்டும். இதுவே கற்பனாசக்திக்குத் தரவேண்டிய உரம். கண்ணும் காதும் திறந்திருந்தால் மட்டும் போதாது. உணர்ச்சி பாய்ந்த முழு கவனம் செலுத்தவேண்டும். அன்பு வேண்டும். இரக்கம் வேண்டும். புஸ்தகங்களைப் படிப்பது போதாது என்று சொல்ல வேண்டியதில்லை.

சிறுகதையில் ஏதேனும் ஒரு கருத்து அல்லது மனோவேகம் பாய்ந்து ஓடாமல் வெறும் கதைக்கட்டு மட்டும் சாமர்த்தியமாக அமைந்துவிட்டால் போதாது. கருத்து என்றால் பிரசாரமல்ல. ஆத்திசூடியல்ல. அழகு, பெருந்தன்மை, அன்பு, இரக்கம், ஆனந்தம், வெறுப்பு, வருத்தம், கோபம், தாபம், ஆசை, கவலை முதலியவற்றுள் ஏதேனும் ஒரு வேகமோ வாழ்க்கைத் தத்துவமோ கதையில் பாய்ந்து வேலை செய்யவேண்டும். இதுவன்றி வெறும் நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் நிகழ்ச்சி நிரவல் ஜீவன் கொண்ட கதையாகாது. பல கருத்துக்கள் இங்குமங்கும் சிதறிக்கிடக்காமல் கதைக்கட்டுடன் கருத்துக்கட்டும் சிதைவின்றி அழகுடன் அமைந்து விளங்கவேண்டும். வியப்பு தரும் நிகழ்ச்சியமைப்பு இல்லாமலும் முதல் தரமான சிறுகதைகள் உண்டு. வியப்புச் சம்பவங்களில் கவர்ச்சி சக்தி உண்டு. ஆனால் அதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. வாழ்க்கை முறைக்கும் அனுபவத்திற்கும் விரோதமாக நிகழ்ச்சிகள் வெகுதூரம் சென்றால் படிப்பவர்களுடைய மனம் கதையில் படியாது. கதையின் கவர்ச்சி வேகம் வரவரப் பெருகிக் கொண்டு போகவேண்டும். தாழ்ச்சி கூடாது. இது சிறுகதைக்கு இன்றியமையாத இலக்கணம். ஆரம்பத்தில் நன்றாக அமைந்து பிறகு காரசாரமில்லாமலோ, அசம்பாவித முறையிலோ, அல்லது அர்த்தம் குறைந்தோ முடிவதை அனேக சிறுகதைகளில் பார்க்கிறோம். கவர்ச்சி வேகம் பெருகிக்கொண்டே போகவேண்டும்.

இறங்கு கதி கூடாது என்பது வெகு முக்கிய அம்சம். திடீர் திடீர் என்று எதிர்பாராத உண்மை நிகழ்ச்சிகள் தோன்றவேண்டுமென்பது தேவையில்லை. நன்றாக ஓடும் வண்டியின் வேகத்தைப்போல் தூக்கிவாரிப் போடாமலேயே கவர்ச்சிவேகம் விருத்தியடைந்து கொண்டு போகலாம். சிறுகதையில் அதிகச் சிக்கலான கதைக்கட்டு வேண்டியதில்லை. கூடாதென்றே சொல்லலாம். கதை எவ்வளவுக்கெவ்வளவு சரளமாகப் போகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது உண்மைத் தோற்றம் பெற்று வாழ்க்கைச் சித்திரமாக விளங்கும். கதையில் உள்ள சம்பாஷணையானது சம்பாஷணையாகவே இருக்க வேண்டும். சின்ன கட்டுரைகளாகவோ பிரசங்கங்களாகவோ இருக்கக்கூடாது. சந்தர்ப்பத்தை ஒட்டியும் பாத்திரத்தை ஒட்டியும் பேச்சு இருக்க வேண்டும். ஒரு உணர்ச்சிக் கொதிப்பால் எவ்வாறு பேச்சு வருமோ அதுதான் சிறுகதையில் அமையக்கூடிய சம்பாஷணை. நீண்ட சம்பாஷணையில் ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதைக் குறிப்பாக ஆசிரியரின் பேச்சாகவே சொல்லி விடுவது சிறுகதை முறை. பேச்சு பேச்சாகவே இருக்கவேண்டும். உண்மை என்றால் சுருக்கெழுத்து ‘ரிப்போர்ட்’ அல்ல. எழுத்து வேறு. பேசும்போது கேட்கமுடியும். அதையே எழுத்தில் பதிவு செய்தால் படிக்க முடியாது. கொச்சையும் ஆபாச மொழிகளும் ஓரளவு கலந்து பேச்சுக்கு உயிர் தருவது உண்டு. ஆனால் இது அளவுக்கு மிஞ்சிப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

வாழ்க்கையில் உள்ளதை உள்ளபடி சித்தரிப்பதுதான் இலக்கிய முறை. ஆனாலும் வாழ்க்கையில் மேன்மையும் உண்டு. பயன் படுவதுமுண்டு. பயனற்றதுமுண்டு. பொறுக்கி எடுத்துக் கொள்வதில்தான் எழுத்தாளர்களின் கலைத்திறமை நிற்கிறது. கலையில் உண்மை இருக்கவேண்டும். உண்மையின்றிக் கலை இல்லை. ஆனால் உண்மையெல்லாம் கலை ஆகிவிடாது. நிகழ்ச்சிகளையே பதிவு செய்துவிட்டால் இலக்கியமாகிவிடாது. எது கலைக்கு உதவும் என்பதைக்கண்டு அதைத் தனிப்படுத்தி இலக்கிய உருவத்தைத் தந்தால் அது கலையாகும்.

இதுவரையில் எழுத்தில் பதிவுபெறாத குடும்ப விஷயங்களை அச்செழுத்தில் பதிவு செய்தாலே படிப்போருக்கு வேடிக்கையாக இருக்கும். பல்வேறு பழக்க வழக்கங்களும் ஜாதிபேதங்களும் மலிந்து கிடக்கும் நாட்டில் எதுவும் வேடிக்கையாக இருக்கும். சில காலத்திற்கு இவை இலக்கியத் தோற்றம் காட்டும். பிறகு இவை பயனற்ற பேச்சாய்ப் போகும். கருத்தும் அழகும் பொருந்தி நின்றால்தான் உண்மையான இலக்கிமாகும்.

நல்ல கதை என்பதற்கு அடையாளம் அதில் யாரேனும் மனதைச் செலுத்திப்படித்தால் உள்ளத்தில் ஒரு அதிர்சிசி உண்டாகும். இதயத்தைக் கலக்கவோ ஆட்டவோ செய்யும். இது உண்மையேயாயினும், கலைஞானமும் பயிற்சியும் அடையாமல் கண்ணீர்ப் பெருக்க உண்டாகக்வே எத்தனித்தால், நல்ல கதை உண்டாகாது. நிகழ்ச்சிகள் முதிர்ந்து உருப்பெறாமல் உணர்ச்சி வேகத்தை உண்டாக்க முயன்றால் எழுததாளர் தோல்வி அடைவார். அது புகை போட்டுக் காயைப் பழுக்க வைப்பது போலாகும். எளிதில் ஒழுகும் கண்ணீர் கலைக்கு உதவாது. கலையில் காணவேண்டிய உணர்ச்சி, கம்பீரம், இயற்கை, உண்மை, மனித வாழ்க்கைக்குப் பயன்படும் தன்மை இவை இருக்கவேண்டும். எவ்வித்திலாவது தனிப்பண்பு பெற்றதாயும் இருக்கவேண்டும். பண்பில்லாத பொருளுக்கு இலக்கியத்தில் இடமில்லை.

ஒரு சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் அல்லது ஒரு கதையைப் படித்துக் கொண்டிருந்தால் வேறு யாராவது கண்டால் சிரிப்பார்கள் என்று வெட்கப்பட்டு மறைத்துக் கொள்ளவும் பார்க்கிறோம். நல்ல பொருளுக்கும் பயனற்றதற்கும் உள்ள பேதம் இதுவே. தனிப் பண்பு, கம்பீரம், பயன்படும் தன்மையும் இல்லாத பொருளைக் கொண்டு இன்பம் பெறுவதைப் பற்றி வெட்கப்படுகிறோம். இது நியாயமே.

காதல் கதைகள் எத்தகையவாயினும், வளரும் வயதில் உள்ள வாலிபர்கள் மனதைப் பற்றும். இந்தக் கதைகளைத்தான் விரும்புவார்கள் என்று அதற்காக எழுத்தைக் கெடுத்துக் கொண்டே போனால் இலக்கியம் சரியான முறையில் வளர்ச்ச அடையாது. கம்பீரமும் அழகும் பொருந்திய காதல் கதைகள் எழுதவேண்டும். ஆனால், வெறும் காமவிகாரங்களெல்லாம் நூலுக்குப் பொருளாகமாட்டாது. தமிழ் எழுத்தில் பதிவு பெறவேண்டிய விஷயங்கள் பெருந்தன்மை பெற்ற விஷயங்களாக இருக்க வேண்டும்.

பெருந்தன்மை பொருந்திய காதல் கதைகள் தோன்றவேண்டியதே. ஆனால் காதலின்றிக் கதையில்லை என்று எண்ணக்கூடாது. மனிதனுடைய சரீர தருமத்தில் வேண்டிய அளவுக்கு மேலேயே அமைந்திருக்கிற ஒரு வேகத்தை இலக்கியமாகக் கொண்டு பெருக்க வேண்டிய அவசியமில்லை. உலகத்திற்கு வேண்டியனவும், மலிந்து கிடக்காதனவுமான பண்புகள் பல இருக்கின்றன. அவற்றைக் கண்டெடுத்து இலக்கியத்தில் புகுத்தி மக்களிடையே பரப்ப வேண்டும். ஈரம், இரக்கம், தியாகம், அன்பு தைரியம் முதலிய பண்புகள் உலகத்தில் வேண்டிய அளவில் காணப்படவில்லை. அவற்றை வளர்க்க இலக்கியம் வேண்டும். வேண்டியதற்கு நூறு மடங்கு அதிகமாகக் காமவேகம் பிறவியுடன் பெற்றிருக்கிறோம். அதற்கு இலக்கிய விவசாயம் வேறு வேண்டியதில்லை.

முறை தவறிய காதலை எடுத்துக்கொண்டு சித்தரிப்பது எளிது. கதையும் கவர்ச்சியாக அமையும். ஆனால் அது மக்களுக்குப் பயன்படாது. காரண காரிய விதி வாழ்க்கையில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குவதற்காக நெறிதவறிய காதலைப்பற்றிக் கதைகள் எழுதப்பெறலாம். ஆனால் விஷம் கலந்து மருந்துகளைப்போல அது மிக்க ஜாக்கிரதையாகவே கையாளப்படவேண்டும்.

இப்பொழுது சில சிறுகதைகளைப் பார்த்தால் நண்பர்கள் தங்கள் மனைவிமார்களை கோஷாவில் வைத்துக் காப்பாற்ற வேண்டும்போல் இருக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசுவதே அபாயம் என்று இப்போது வெளியாகிவரும் கதைகளினால் ஏற்படும்போலிருக்கிறது. கதையில் ஒருத்தியை ஒருவன் சந்தித்ததுமே தருமத்திற்கு அபாயம் நேரிட்டுவிடுகிறது. இத்தகைய இலக்கியத்தை உண்டாக்குவது எளிது. விற்பதும் எளிது. கள்ளிப் பலகையில் தச்சு வேலை செய்வது எளிது. ஆனால் அப்படி செய்த சாமானில் உறுதி இல்லை. பயனும் இல்லை. வழி புரண்ட காதலைக் கொண்டு அவசரமாகத் தோற்றுவிக்கும் சிறுகதையிலும் இவ்வாறே பயனற்றவை என்பதோடு நிற்பதில்லை. இலக்கியம் என்று ஏமாற்றிச் சமூகத்திற்கு விஷம் ஊட்டுவது போலாகும்.

சிறுகதையின் லட்சணங்களைப் பற்றி எழுத ஆரம்பித்ததில் எங்கேயோ போய் முடிந்தது. ஆராய்ச்சியும் விமர்சனமும் செய்வது எளிது. கலைப்பொருள் ஒன்றை உண்டாக்குவது அரிது. எல்லா இலக்கண விதிகளையும் புறக்கணித்து அற்புதமான இலக்கியப் பொருள் தோன்றுவதுண்டு. வரப்பிரசாதத்தில் தோன்றிய இலக்கியம் அல்லது வேறு கலைப்பொருளை விமர்சனக்காரர்கள் அடக்கியாள முடியாது.

நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப்படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும்.

ஆங்கிலத்தில் உள்ள விமர்சனங்களைப் பழுதறப் படித்துவிட்டுத்தான் இந்தக் கட்டுரையைப் புனைந்திருக்கிறார் ராஜாஜி என்பதில் ஐயமில்லை. சிறுகதைக்குத் தேவையான தனி உணர்ச்சிக்கோலம், ஒருமை, செறிவு, திட்டமான ஒரு மனோவேகம், உண்மையனுபவம், மேன்மையான பெருந்தன்மையான கற்பனை, பிரசாரமற்ற தொனி, கவர்ச்சி வேகம், தெளிவான கதைப் பின்னல், பிரசங்கம் இல்லாத உரையாடல், குறிப்பால் உணர்த்தும் பாங்கு, ஓரளவு கொச்சை நடை, சம்பவத் தேர்வு, காதல் காமம் கண்ணீர் தவிர்த்த அம்சம் ஆகியவற்றை இக்கட்டுரை விளக்கியது.

ஆனால் ராஜாஜி எப்போதுமே ஒரு moralist. ஆகவே சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு moral இருக்கவேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். இந்தப் போக்கு ஆங்கிலக் கதைகளுக்குப் பொருந்தாது. அதனால் அவருடைய கதைகளில் பிரச்சார தொனி சற்றுத் தூக்கி நிற்கிறது என்று சொல்லிக் குறை காணும் விமர்சகர்கள் உண்டு.

தமிழ்ச்சுடர் மாதப் பத்திரிகை 1948ல் தை மாதம் தொடங்கியது. தமிழரசுப் பிரசுராலயம் 163 பத்து ரோடிலிருந்து இதனை வெளியிட்டது. நிர்வாக ஆசிரியர் வி மாணிக்கம். 83 கேம்பல் ரோடிலிருந்த மலாயன் பிரிண்டர்சில் இதழ் அச்சடிக்கப்பட்டது. ஒவ்வோர் இதழும் புத்தக அளவில் ஐம்பது அறுபது பக்கமாவது வந்திருக்கலாம். ஒரு தரமான பத்திரிகை வழக்கமாக எல்லாப் பத்திரிகைகளையும் போலவே அற்பாயுளில் மடிந்து போனது. தமிழ்ச்சுடர் வெளியாகப் போவதை அறிந்த ஓர் இலக்கிய ஆர்வலர் அதை மனப்பூர்வமாக வரவேற்றுச் செய்தி அனுப்பினார். ‘மக்களின் கொள்கைகளுக்கு மெருகிட்டு, நல்வழிப்படுத்தும் சக்தி உடையது சஞ்சிகைதான் என்ற அறிஞர் வாக்கை தமிழ்ச்சுடர் மெய்ப்பிக்கும் என விரும்புகிறேன். மலாய் நாட்டின் மணிக்கொடியாக ஒளிவீசி இங்கே புதுமைப்பித்தன்களையும், வ.ரா-க்களையும், கல்கிகளையும், குமுதினிகளையும் உற்பத்தி செய்ய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன். இலக்கியப் பைத்தியங்களின் ஆர்வத்தால் தமிழ்ச்சுடர் வார ஏடாக மலரும் நாளையும் எதிர்பார்க்கிறேன்.’ இந்தச் செய்தியை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெரும்பாலும் பைரோஜி நாராயணன் என்றே நினைக்கிறேன். மலாயாவின் மணிக்கொடி என்று தமிழ்ச்சுடரை வருணித்தவர் பைரோஜி என்பது எனக்குத் தெரியும்.

இதழாசிரியர் தி சு சண்முகம் போருக்கு முன்பு மலாயா வந்தவர். ஜப்பானியர் காலத்தில் கோலாலம்பூரில் ஜப்பானிய வானொலியின் தமிழ்ப் பகுதிக்குப் பொறுப்பாயிருந்து செய்திகளை ஒலிபரப்பியவர். போர் முடிந்த கையோடு 1945ல் இந்திய தேசிய ராணுவ வழக்கு எனும் 42 பக்க நூலை 1945ல் கொண்டு வந்தார். போர் ஓய்ந்த பிறகு, நேதாஜி நடத்திய இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்ற அதிகாரிகளையும் வீரர்களையும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் தேச விரோதிகளாகக் கருதி புதுடில்லியில் அவர்கள் மீது வழக்குப் போட்டு விசாரணை செய்து அலைக்கழித்த விவகாரம்தான் அது. இந்தியத் தலைவர்களின் இடையறாத நெருக்கடியால் அந்த வழக்கு பிறகு கைவிடப்பட்டது. அதன் விவரத்தையே தி சு ச சுருக்கமாக எழுதியிருந்தார். கோலாலம்பூர் எஸ் லாசர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் அடிக்கப்பட்ட புத்தகம் அது. ஸ்காட் ரோடில் உள்ள இந்த அச்சுக்கூடத்தைப் பின்னர் தமிழ் நேசன் வாங்கியது.

1948ல் தமிழ்ச்சுடர் சஞ்சிகையில் தி சு சண்முகத்தைக் காண்கிறோம். அது ஒரு வருஷத்தைத் தாண்டியிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் 1949ல் ஏ ஆறுமுகனார் வெளியிட்ட கப்பலோட்டி மாத இதழில் தி சு ச ஆசிரியர் பணி ஏற்றிருக்கிறார். பைரோஜி நாராயணன் இதில் கட்டுரை, சினிமா பகுதிகளைக் கவனித்துக்கொண்டார். கப்பலோட்டி வி கனகசபை என்பவரின் பொறுப்பிலும் இருந்திருக்கிறது. பிறகு 1952ல் வெளிவந்த சோலை இதழில் தி சு சண்முகத்தின் கைவண்ணம் தெரிகிறது. 1950-51ல் மலாயா இந்தியர் காங்கிரசின் மூன்றாவது தலைவராகப் பொறுப்பேற்ற சைவப் பெரியார் கா ராமனாதன் சோலையை 1952 ஜனவரியில் ஆரம்பித்துவிட்டு ஊருக்குப் போன சமயம் தி சு ச அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பைரோஜி நாராயணனும் இதில் இருந்திருக்கிறார். எட்டு மாதத்தோடு சோலை முடிந்தது. தமிழ் நேசன் நடத்திய கதை வகுப்பு பாணியில் விமர்சனம் எழுதி சிறுகதையைப் போட்ட பத்திரிகை சோலை என்று பைரோஜி சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தப் பாணி தமிழ்நாட்டில் வந்த சக்தி இதழில் முனைப்பாக இருந்தது. அதில் கடைசிக் கட்டத்தில் பணியாற்றிவிட்டுக் கோலாலம்பூர் வந்த சுப நாராயணன் கதை வகுப்பில் அறிமுகம் செய்த பாணிதான் அது. கதைகள் எல்லாம் இந்நாட்டுச் சரக்காய் இருக்க வேண்டும் என்பதைக் கதை வகுப்பு வலியுறுத்தியதைப் போலவே சோலை பத்திரிகையும் வற்புறுத்தியது.

தி சு ச மலாய் பேசுவது எப்படி எனுந்தலைப்பில் 36 பக்கத்தில் ஒரு சிறு நூலை 1953ல் வெளியிட்டார். கோலாலம்பூர் பத்து ரோடில் இருந்த மனோன்மணி விலாச புத்தகசாலை அதை வெளியிட்டது. பல பதிப்புகள் கண்ட அந்த நூல் அப்படியே இன்னமும் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருவது ஆச்சரியந்தான். தமிழ்-மலாய் அகராதி நூலையும் அவர் வெளியிட்டார். தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் நடத்திய சங்கமணி வார ஏட்டுக்கும் ஆசிரியராகப் போனார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். நான் 1963 ஜனவரியில் மலாயா / மலேசிய வானொலியில் சேர்ந்தபோது தி சு ச அங்கே தமிழ்ச் செய்திக்குப் பொறுப்பாயிருந்தார். அந்தப் பணியில்தான் அவர் ஓய்வு பெற்றார்.

ஓரளவு ஆங்கிலமும் அதைவிடக் கொஞ்சம் கூடுதலாகத் தமிழும் தெரிந்த குடியேறிகள் ஜப்பானிய ஆதிக்கத்திற்கு முன்னும் பின்னும் மலேசிய, சிங்கப்பூர்ப் பத்திரிகை உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம் அது. உள்ளூர் ஆசாமிகள் மிகவும் அரிது.

(சி வீ குப்புசாமி மட்டும் ஒரு விதிவிலக்கு. கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் 1915ல் பிறந்த அவர் தம்புசாமி தமிழ்ப் பள்ளியில் மூன்றாண்டு படித்துவிட்டு விக்டோரியா இன்ஸ்டிட்யூஷனில் 1932ல் சீனியர் கேம்பிரிட்ஜ் முதல் கிரேடில் தேர்ச்சி பெற்றுப் பெரியாரின் சுயமரியாதைக் கருத்தில் திளைத்துக் கடைசிவரை பகுத்தறிவாளராகத் திகழ்ந்தவர். முப்பதுக்கும் அதிகமான பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டவர். கடைசியாக நாற்பது வயதில் தகவல் இலாகாவில் Division One அதிகாரியாகச் சேர்ந்து 55 வயதில் ஓய்வு பெற்றார். அந்தக் காலத்திலேயே சீனியர் கேம்பிரிட்ஜ் Grade One வைத்துக்கொண்டு ஆர்வ மிகுதியால் தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றிய ஒரே நபர் இவராகத்தான் இருக்கக்கூடும். மற்றொரு சந்தர்ப்பத்தில் சி வீ கு-வைப் பற்றி விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.)

சிறுகதை பற்றிய சிந்தனைகள் ராஜாஜிக்கு முன்னதாகவே இங்குள்ள பத்திரிகைகளில் வந்ததுண்டு. 21.5.1947ல் தாமதமாக வெளிவந்த மூன்றாம் தமிழ் முரசு ஆண்டு மலர் முன்னுரையில் ஆசிரியர் கோ சாரங்கபாணி இளம் எழுத்தாளர்களின் போக்கைக் குறிப்பிட நேர்ந்தது. அந்தக் குறிப்பே ஒருவகையில் சிறுகதை விமர்சனந்தான். ‘மலாயாவில் உள்ள ஆரம்ப எழுத்தாளர்களுக்குத் தமிழ் முரசு ஆண்டு மலர் எப்போதும் ஒரு களமாக இருந்துவரும். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தூரம் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள் என்பதைத் தமிழ் முரசு ஆண்டு மலர் பிரதிபலித்துக் காட்டும். ஆரம்ப எழுத்தாளர்கள் காதல் கதைகள் எழுதுவதில் அடங்காத ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். கதை எழுத விரும்புகிறவர்கள் பார்த்த சினிமாக்களையும், படித்த கதைகளையும் கருத்தில்லாமல் கொட்டி அளக்கக்கூடாது. கதைகளில் கருத்துகள் இருக்கவேண்டும். கதாபாத்திரங்களின் வாயிலாக மக்கள் மனதைத் தொடக்கூடிய அறிவுரைகள் வெளிப்பட வேண்டும். எழுத்து நடையில் அழகு மிளிர வேண்டும். சொற்றொடர்கள் சுவைக்கச் சுவைக்க இனிக்க வேண்டும். இந்தப் பரீட்சையில் தேறமுடியாத பல கதைகளை ஒதுக்கிவிட்டோம். எழுத்தாளர்கள் மன்னிப்பார்களாக’ என்று அன்றைய நிலவரத்தை ஒளிவு மறைவின்றி சுட்டிக் காட்டினார். ஆனால் பகுத்தறிவுக் கதைகளை மனத்திற்கொண்டு அறிவுரைகள் வெளிப்படவேண்டும் என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டு மலரில் 13 சிறுகதைகள் இடம்பெற்றன. கவிஞர் பாரதிதாசனின் முதற் சிறுகதையான எது வேண்டும் இந்தத் தமிழ் முரசு ஆண்டு மலரில்தான் வந்தது.

தமிழ் முரசு இதற்கு முன்னரேகூட சிறுகதை பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. சிறுகதை எழுத்தாளர் தி ஜ ர எழுதிய ‘வளரும் தமிழ் நடை: இந்தச் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ் முரசில் 5. 9. 1940ல் இடம்பெற்றது. முரசுக்காக எழுதிய எழுத்து என்று இதனைச் சொல்ல முடியாது. ஏனெனில் 4. 9. 1940ல் முரசில் வளரும் தமிழ் நடை: காந்தியும் மனித வாழ்க்கையும் எனும் தலைப்பில் வ. ரா. எழுதிய குறுங்கட்டுரை பிரசுரமானது. கீழே ஹனுமான் என்றுள்ளது. அக்கால எழுத்தாளர்களுக்கு நிறைய வாய்ப்பளித்த ஹனுமான் 1938 ஜனவரியில் பழுத்த பத்திரிகையாளர் எம் எஸ் காமத் என்பவரால் தொடங்கப்பட்ட வார இதழ். பத்திரிகை நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவர் 191 நூல்களை வெளியிட்ட பதிப்புலகின் தந்தை என்று போற்றப்படும் சக்தி வை. கோவிந்தன் (1912 - 1966). அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி.

இந்தச் சிறுகதைகள் (தி. ஜ. ர.)

சிறுகதைகள் ஏராளமாய் மலிந்துவிட்ட ஆங்கிலத்தில்கூட, திட்டமாக சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்படவில்லை. விதவிதமான ரூபத்தில் சிறுகதைகள் பிறந்திருக்கின்றன; பிறந்தும் வருகின்றன. சில சமயம் ஒரு வியாசத்தின் தன்மையைக்கூடச் சிறுகதைகள் அடைந்துவிடுகின்றன. நடைச் சித்திரமாகவும், பாத்திர வர்ணனையாகவும், விசித்திரக் கற்பனையாகவும் பல்வேறு ரூபம் பெற்ற சிறுகதைகள் உண்டு. ராஜா, மந்திரி, ஜமீந்தார் அவசியமில்லை. ராஜாக்களைவிட ஏழை எளிய ஜனங்கள்தான் மிக அதிகம். இரவு பகல் 24 மணி நேரமும் மனிதன் காதலையே சிந்தித்துக் கொண்டிருக்கவுமில்லை. மனிதனுக்குக் காதலைத் தவிர வேறு உணர்ச்சிகளே கிடையாவா? கோபமும் ரோஷமும் தீரமும் அச்சமும் மகிழ்ச்சியும் சோகமும் வியப்பும் ஆனந்தமும் எத்தனை எத்தனையோ விஷயங்களில் ஏற்படுகின்றனவே – அவற்றையெல்லாம் காட்டக்கூடிய கதைகளை எழுதக்கூடாதா என்ன? நவரச பரிதமான பலவிதக் கதைகளையும் நாம் எழுதவேண்டும்; படிக்கவும் வேண்டும். ஆற்றங்கரை, நீலக்கடல், மஞ்சள் வெயில், செவ்வானம், பசுஞ்சோலை, இளந்தென்றல் போன்ற இடம், போதுகளுக்கே திரும்பத் திரும்ப தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், போரடி, நடவு வயல், உலைக்களம் இவை போன்ற கால தேசங்களை நாம் பயன்படுத்தலாகாதா? நமது கதையில் நமது பழக்க வழக்கங்கள் நிறைந்திருக்க வேண்டும்; நமது நடையுடை பாவனைகள் நிரவியிருக்க வேண்டும். தேசீய மணம் கமழவேண்டும். இதைவிட்டு அன்னிய நாட்டுப் பழக்க வழக்கங்களைப் புகுத்தி எழுதுவது அசம்பாவிதமாகும்! அதனால் பயனுமில்லை. இப்படிச் செய்வதைவிட அயல்நாட்டுச் சிறந்த கதைகளை மொழிபெயர்ப்பதே மேலாயிருக்கும். கதைகள் ஒவ்வொன்றிலும் தெள்ளத் தெளியப் பிரச்சாரம் இருக்க வேண்டுமென்று எண்ணுவதும் தவறு. தற்காலத்தில் பிரச்சாரத்திற்கும் தேவை இருக்கிறது என்பது வாஸ்தவந்தான். ஆனால் என்றும் மங்காப் புகழுடன் பொலியக்கூடிய கலைச்சுவை நிரம்பிய சௌந்தர்யமான கதைகளும் வேண்டும். அவைதான் திரும்பத் திரும்ப எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத தெள்ளமுதாயிருக்கும்.

ராஜாஜியின் சிந்தனையும் எழுத்து நடையும் தி ஜ ர-வின் நடையிலிருந்தும் விஷயத்திலிருந்தும் எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டு உணரலாம்.

வை கோவிந்தன் ஆரம்பித்த சக்தி இதழுக்கு ஆசிரியராக வந்தவர் தி ஜ ரங்கனாதன். தி ஜ ர 1948ல் மஞ்சரி–க்கு ஆசிரியராகப் போய் 25 ஆண்டுகள் அங்கிருந்தார். சுப நாராயணன், ரகுனாதன், கு அழகிரிசாமி ஆகியோர் பிறகு சக்தியை நடத்தினர். சக்தி 1939 ஆகஸ்ட் முதல் 1954 தொடக்கம் வரை வெளிவந்த மிகத் தரமான மாத இதழ். வை கோவிந்தன் சக்தி தவிர மங்கை, அணில், பாப்பா, கதைக்கடல் போன்ற இதழ்களையும் நடத்தினார். அணிலுக்கு ஆசிரியராக இருந்தவர் தமிழ்வாணன்.

சக்தி மாத இதழின் தீவிர தமிழுணர்வுக்கு உதாரணமாக, மலாயா சம்பந்தப்பட்ட அதன் 1949 மே மாதத் தலையங்கத்தைக் கூறலாம். மலாயாத் தொழிலாளர் தலைவர் எஸ் ஏ கணபதி கம்யூனிஸ்டுத் தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பேரில் கோலாலம்பூர் புடு சிறையில் 1949 மே 4ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24. உணர்ச்சிமயமான அந்தத் தலையங்கம் இதோ.

‘சமீபத்தில் மலேயா தொழிலாளர் தலைவர் ஸ்ரீ கணபதி தூக்கிலிடப்பட்ட செய்தி இந்தியாவுக்கே அவமானம் தருவதாகும். ஒரு இந்தியப் பிரஜையை, தஞ்சாவூர்க்காரனை ஒரு தமிழனை சிலாங்கூர் சுல்தான் என்னும் ஒரு சிறிய நாட்டுச் சுல்தான் தூக்கேற்றுவதைத் தடுக்காமல் இந்தியா வாளாவிருந்துவிட்டது. இது விஷயத்தில் இந்தியா தலையிட்டு தண்டனையைக் குறைத்திருக்கலாம். 1916ம் வருஷம் நடந்த (அயர்லந்து) ஈஸ்டர் கலகத்தின்போது கைதியான டிவேலராவுக்கு (Eamon de Valera) பிரிட்டிஷ் சர்க்கார் தூக்குத் தண்டனை விதித்தது. அவர் ஒரு அமெரிக்க பிரஜை என்று கூறி அமெரிக்க சர்க்கார் குறுக்கிட்டதால் டிவேலராவின் தண்டனை தீவாந்தர தண்டனையாக மாறிற்று. சிலாங்கூர் சுல்தானுக்குப் பின்னிருந்து திரை மறைவில் வேலை செய்வது மலேயா ரப்பர் தோட்டத்து வெள்ளை முதலாளிகள்தான். வெள்ளையர்களின் துணையிருக்கிறது என்ற தைரியத்தில்தான் சிலாங்கூர் சுல்தான் இந்தியா போன்ற மகத்தான தேசத்தையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீ கணபதியைக் கொன்று விட்டார். பிரிட்டிஷார் நம்முடன் உறவு கொண்டாடி இந்தியாவைக் காமன்வெல்த்தில் சேர்க்கும் அதே வேளையில், இன்னொருபுறம் ஒரு இந்தியரின் உயிர் பலியாகிப் போனது வெள்ளையர்களின் பரம்பரைக் குணத்துக்கு அத்தாட்சியாகும். ஸ்ரீ கணபதியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இந்தியாவின் மலேயா ஸ்தானிகர் ஸ்ரீ திவி முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும் அதையும் மீறி, தூக்குத் தண்டனையை நிறைவேற்றிவிட்டார் சிலாங்கூர் சுல்தான். ஆகவே, இந்தியா இது விஷயத்தில் பலமான முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்றே ஆகிறது. இதனால் இந்தியாவுக்கு அன்னிய நாடுகளில் ஸ்தானிகர் காரியாலயங்கள் நியமிப்பதிலும் அர்த்தமில்லை. ஸ்ரீ கணபதியின் தண்டனையைக் கண்டித்து உலகத் தொழிலாளர் சங்கங்களும் இந்தியத் தலைவர்களில் சிலரும் கண்டித்திருக்கிறார்கள். ஸ்ரீ கணபதிக்கு நேர்ந்த கதி, அவரைப்போன்ற இன்னொரு தொழிலாளர் தலைவரான ஸ்ரீ சாம்பசிவத்துக்கும் காத்திருக்கிறது. இந்திய சர்க்கார் கணபதி விஷயத்தில் அசிரத்தையாயிருந்ததுபோல சாம்பசிவம் விஷயத்திலும் அசிரத்தை காட்டாமல் உடனே தலையிட்டு இந்தியரின் மானத்தையும் பிரஜா உரிமையையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறோம்.’

சிலாங்கூர் மன்னிப்பு வாரியத்தின் தலைவர் எனும் முறையில் சிலாங்கூர் சுல்தான் மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டதையே சக்தி தலையங்கம் சாடுகிறது. கணபதி தூக்குமேடை ஏறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அவருடைய தம்பி எஸ் ஏ சற்குணம் சிங்கப்பூரிலிருந்து வந்து புடு சிறையில் அண்ணனைப் பார்த்துப் பேசினார். செம்பருத்தி ஜனவரி 2010 இதழில் தஞ்சாவூர் பரக்கல் கோட்டை கிராமத்தில் சற்குணத்துடன் நிகழ்த்திய சந்திப்பின் விவரங்கள் வெளியாகியுள்ளன. ‘நான் செய்த தொண்டிற்குத் தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது’ என்று அண்ணன் தம்பியிடம் சொன்னதாகத் தெரிகிறது. 1947ல் புதுடில்லியில் நடைபெற்ற ஆசியத் தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் கணபதி கலந்துகொண்டார். இந்தியப் பிரதமர் நேருவும் லண்டனில் இந்தியத் தூதராகவிருந்த வி கே கிருஷ்ணமேனனும் கணபதி விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட்டுத் தண்டனையைக் குறைக்குமாறு கேட்டிருந்தனர். அது பலிக்கவில்லை.

தமிழ் முரசின் ஆதரவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு நிதி திரட்டும் முயற்சி தொடங்கியது. ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பதவிக்குப் போட்டி கடுமையாக இருந்தது. கணபதி போட்டியிட்டார். அவரை எதிர்த்தவர் எழுத்தாளர் ந பழனிவேலு. கணபதி தோற்றுப்போனார்.

கணபதி தூக்கில் தொங்கிய தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக (3. 5. 1949) செல்வாக்கு பெற்ற மற்றொரு தொழிற்சங்கத் தலைவர் பி வீரசேனன் என்பவரை நெகிரிசெம்பிலானின் ஜெலுபு மாவட்டத்தில் Pertang இடத்திற்கு அருகில் கூர்காப் படை மறைந்திருந்து தாக்கி சுட்டுக் கொன்றது. உயிர் பிரிந்தபோது முப்பது வயதுகூட நிரம்பவில்லை அந்தத் தொண்டருக்கு.

சாம்பசிவம் என்ற 25 வயது தொழிற்சங்கவாதி 1948 செப்டம்பர் மாதம் ஜோகூரில் ஒரு கைத்துப்பாக்கியும் பத்து தோட்டாக்களும் வைத்திருந்த குற்றத்திற்காகக் கைதானார். விசாரணையின்போது தோட்டாக்கள் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்படாமல் போனது. துப்பாக்கி வைத்திருந்த குற்றத்தின் பேரில் அவர் மறுபடியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். மலாயாவிலிருந்து கிரிமினல் வழக்குகளை லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால் மலாயா சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜான் ஏ திவி அவசரம் அவசரமாக சிங்கப்பூருக்கு வந்து சாம்பசிவத்துக்காக மேல் முறையீடு செய்தார். பிரிவி கவுன்சிலும் வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்குக்கு ஆன செலவை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 1950 மார்ச் 30ஆம் தேதி சாம்பசிவம் குற்றவாளி அல்ல என்று பிரிவி கவுன்சில் தீர்ப்பளித்தது. பலவித சோதனைகளைக் கடந்து சாம்பசிவம் விடுதலை ஆனார். இந்த வழக்கு ஒரு விசித்திரமான வழக்கு என்ற முத்திரையைப் பெற்று மற்ற பல வழக்குகளில் உதாரணமாகக் கையாளப்பட்டு வருகிறது.

சாம்பசிவம் விவகாரத்தால் தமிழ்நேசன் 1949ல் நீதிமன்ற அவதூறு வழக்கில் சிக்கி அபராதம் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. தொழிற்சங்கவாதிகளான கணபதியையும் வீரசேனனையும் பலிகொடுத்த தமிழ்ச் சமுதாயம் சாம்பசிவம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து அவருடைய விடுதலைக்கு பாடுபட்டது. சக்தி இதழைப் போலவே தினமணி நாளேடும் சாம்பசிவத்தின் விடுதலைக்காகப் பரிந்து பேசும் எண்ணத்தில் 3 ஜுன் 1949ல் ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை எடுத்துப்போட்டுத் தமிழ்நேசன் 9 ஜுன் 1949ல் ஒரு கட்டுரை பிரசுரித்தது. ‘சாம்பசிவத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற அக்கட்டுரை, 5 மே 1949ல் தூக்கிலிடப்பட்ட கணபதியின் விவகாரத்தையும் குறிப்பிட்டு, அவருக்கு நியாயமான முறையில் நீதி கிடைக்கவில்லை என்ற தொனியில் எழுதியது. அரசாங்கம் அதைக் கடுமையாகக் கருதியது. நீதிமன்ற அவமதிப்புக்கு அக்கட்டுரை இடந்தருவதாகக் குற்றஞ்சாட்டி தமிழ்நேசனின் கூட்டு உரிமையாளர் எம் மலையாண்டி செட்டியார், ஆசிரியர்-பிரசுரகர்த்தா-வெளியிடுவோர் ஆகிய ஆதி நாகப்பன் இருவர் மீதும் 2 ஜுலை 1949ல் வழக்கு தொடுத்தது அரசாங்கம். மற்றொரு கூட்டு உரிமையாளர் எஸ் ஆர் என் பழநியப்பன் இந்தியாவுக்குப் போயிருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பவில்லை.

கோலாலம்பூரின் புகழ்பெற்ற வழக்குரைஞர் ஆர் ரமணி அவர்களுக்காக வாதாடினார். உண்மையில் செட்டியாரும் நாகப்பனும் அந்தக் கட்டுரைக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதாக ரமணி தெரிவித்தார். அதே நேரத்தில் அந்தக் கட்டுரையை அதுவரை நிகழ்ந்திருக்கும் சம்பவங்களின் ஒட்டுமொத்தமான பின்னணியில் படித்தால் அதில் அவதூறுக்கு இடமிருக்காது என்று அவர் எடுத்துரைத்தார். இருப்பினும் கணபதியின் வழக்கு முறையாக நடைபெற்று, தண்டனை முறையீடு செய்யப்பட்டு, மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு, சிலாங்கூர் சுல்தானின் மன்னிப்பும் மறுக்கப்பட்டு எல்லா வழிகளும் அடைபட்ட பின்னரே கணபதி தூக்கு மேடை ஏறியதாக அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் S Foster-Sutton வாதித்தார். நீதிபதி Spenser Wilkinson பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அபராதம் மட்டும் விதித்தார். மலையாண்டி செட்டியாருக்கு 750 வெள்ளியும் ஆதி நாகப்பனுக்கு 1,000 வெள்ளியும் அபராதம். செலவுத்தொகையாக அவர்கள் 250 வெள்ளி தரவேண்டும் என்றும் 20 ஆகஸ்ட் 1949ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

அமைச்சர் பதவி வரை உயர்ந்த ஆதி நாகப்பன் ஒன்பது வயதில் ஒரு வார்த்தை ஆங்கிலம் அறியாமல் 1935ல் பினாங்கு வந்தார். புக்கிட் மெர்டாஜம் High School-ல் பயின்றார். ஜப்பானிய ஆதிக்கம் கல்விக்குத் தடையானது. சில பத்திரிகைகளில் பணியாற்றினார். சண்டை முடிந்து 1947ல் 22ஆம் வயதில் கோலாலம்பூருக்கு வந்து செட்டியார் இருவரும் நடத்திய தமிழ்நேசனின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1948ல் தமிழ்ச்சுடர் ஏட்டில் கற்பழிக்கப்பட்ட மனைவி எனும் கதையை ஆதிநாகப்பன் எழுதியிருந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த அவலத்தையும் மனைவியின் கற்பு இக்கட்டான சூழ்நிலையில் பங்கமடைந்தால் கணவன் அவளை மீண்டும் ஏற்று வாழ்வளிக்க வேண்டும் என்ற காந்திஜியின் தத்துவத்தையும் புலப்படுத்திய கதை அது.

1948 ஏப்ரல் மாதம் ஏழு பத்திரிகையாளரில் ஒருவராக மலாயாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று ஒரு மாதம் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்தார் நாகப்பன். அவருடன் சென்ற எழுவரில் ஒருவர் உத்துசான் மெலாயுவைப் பிரதிநிதித்த சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் யுசுப் பின் இஷாக். பத்திரிகைத்துறை டிப்லோமா பயிற்சி பெற மீண்டும் 1950ல் லண்டன் சென்றார்.

கதை வகுப்பு நேசனில் தொடங்குவதற்கு ஒருவகையில் ஆதிநாகப்பனே காரணம் எனலாம். ‘மலாயாவில் தமிழ் எழுத்தாளர் இல்லையென்ற கருத்துப்பட முன்னாள் தமிழ்நேசன் ஆசிரியர் ஆதி நாகப்பன் 1949 வாக்கில் தலையங்கம் எழுதினார். அவர் லண்டன் சென்றபிறகு நானும் வானம்பாடியுஞ் சேர்ந்து 1950-51ல் எழுத்தாளர் வகுப்பு நடத்தி மணியான எழுத்தாளர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். வகுப்புத் தொடங்கியபொழுது தமிழ் முரசு தலையங்கமெழுதி, மலாயாவில் எழுத்தாளர் இல்லை என்ற கருத்துப்பட நையாண்டி செய்தது’ என்று கதைவகுப்பின் ரிஷி மூலத்தைக் கந்தசாமி வாத்தியாராகிய சுப நாராயணன் 1956ல் மலாயாத் தமிழ் எழுத்தாளர் என்ற சங்கமணி மே தின மலர்க் கட்டுரையில் அம்பலப்படுத்தினார். வானம்பாடியாக வலம் வந்தவர் பைரோஜி நாராயணன்.

1952 வரை நேசனில் பணியாற்றிவிட்டு மறுபடியும் லண்டனுக்குப் போய் சட்டம் பயின்று திரும்பி வந்து டத்தோ சர் Clough துரைசிங்கம் நிறுவனத்தில் பங்காளியாக இருந்துவிட்டு 1957ல் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலந்தொட்டே மலாயா இந்தியர் காங்கிரசில் முனைப்பாக இருந்து 1949ல் 24 வயதில் சிலாங்கூர் மாநிலத்தின் மஇகா தலைவர் ஆனார். 1959ல் மிக இளம் வயதில் (35) செனட்டர் பதவியில் அமர்ந்து மிகச் சிறப்பான பணிகள் ஆற்றி மஇகா-வின் துணைத் தலைவர் ஆகி, துணை சட்ட அமைச்சராக உயர்ந்து முழு அமைச்சராகவும் முன்னேறிய தருணத்தில் 1976 மே 9ல், 52ஆம் வயதில் காலமானார். முழு அமைச்சராகி இரண்டு மாதமே ஆனது. பாராட்டுக் கூட்டங்கள் முடிந்தபாடில்லை. அத்தகைய கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுத் திடீரென்று உயிர் பிரிந்தது. மஇகா-வுக்கே காலமெல்லாம் உழைத்தவர் ஜானகி தேவரைக் கலப்பு மணம் புரிந்துகொண்ட ஆதி நாகப்பன் செட்டியார். அவர் புதல்வர் ஈஸ்வர் நாகப்பனோ 2008ல் ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார். அறுபது வயதைக் கடந்த வழக்கறிஞரும் கலைப்பிரியருமான ஈஸ்வர் சிங்கப்பூரில் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஈஸ்வரின் மனைவி குமாரி நாகப்பன் ஓவியக்கலையில் முதுநிலைப் பட்டதாரி. அழகான சித்திரங்களை வரைந்துகொண்டு அவனி முழுதும் சுற்றி வரும் அற்புதக் கலைஞர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உளர். #

Saturday, September 12, 2009

சந்திப்பு 2: வி. டி. அரசு (V. T. Arasu)



V T Arasu passed away on 5 Nov 2008 at the age of 82. He was born on 11 January 1926. He came to Singapore to work for Tamil Murasu in 1951. He stayed on. In 1958 he joined the Ministry of Culture as Press Liaison Officer. After retirement he returned to Tamil Murasu in 1989 when the only Tamil paper here was in a state of misery without a direction. Arasu managed to bring Murasu into the stable of Singapore Press Holdings, the last paper to do so.
I met him on 3 May 1982 at his office and the meeting lasted between 9 and 11 am. He expressed himself mostly in English.


தமிழ் முரசோடு நினைத்துப் பார்க்கப்படும் வி டி அரசு 82 வயதில் சென்ற ஆண்டு காலமானார். அவரை நான் 1982ல் சந்தித்தபோது அரசாங்கத்தில் பத்திரிகைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அவர் பேசினார்.


. Tamil papers haven't moved with time. English papers were willing to do so. No people to contribute to the weekly bilingual (of Murasu). It did not go as we intended. Tried for 3 months asking all possible writers. No response. One man is running who is not well equipped with all aspects of Indian culture and literature.

. Tamil stream schools would be extinct by 1983/84. With it the successful teaching of Tamil type schools for the past 150 years would come to an end. Before the War there were about 35 Tamil schools. They survived thanks to the compulsion of trade unions.

. Second language is compulsory now. 16 000 students are learning Tamil in primary and secondary schools, with 3000 in secondary alone. 50-60% of the Tamils offer Tamil as a second language. Chinese is not popular. The current trend is more for Tamil although Malay is a keen competitor. Parental attitude towards Tamil is very important. In this sense they are quite ignorant.

. More Malayalees are taking Tamil and excel in the language.

. Image of Tamil teacher... lazy, never improves, never interested.

. Tamil was also taught in a monolingual system. Those who went to Umar Pulavar Tamil School had to be given employment. When they passed out most of them taken as teachers.

. When all are Tamils there is no competition and the standard is not good. For example during the competitions held in conjunction with Tamil festivities Umar Pulavar students do not do well.

. There is no place for Tamil monolingual stream in Singapore.

. Middle 1950s was Secretary of Tamil Education Society. All Tamil stream education government aided. Before (Malayan) Emergency Tamil schools were run by trade unions. When the unions went underground the government stepped in.

. (Tamil Murasu editor) G Sarangapany helped. He persuaded for the schools to be amalgamated. Tamil Education Society (தமிழ்க் கல்விக் கழகம்) was initiated by him. Efforts were taken for the grouping of schools. Tried to introduce English as a language in Tamil schools.

. And the capitation grant not to be changed from one school to another.

. 110 primary schools are offering Tamil as a second language. There are 300 teachers for Tamil.

. As for the societies many of the old ones are now defunct. There are 2 organisations that are active. One is the Tamils Representative Council (TRC). TRC has taken a different character now. G. Kandasamy, Gen Secretary of AUPE, is the President. TRC is basically a confederation of many societies. It has direct membership too.

. The second is the Tamil Language and Cultural Society (TLCS). Formed only 2 years ago (1980). It was fathered by Devan Nair.(First Chairman was Arasu). It is a high powered society. The Board of Trustees is headed by Prof Jayakumar. Among the trustees are Dhanabalan, Justice Choor Singh and Bishop Duraisamy. The management council is headed by Bishop Duraisamy.

. The function of TLCS is to preserve Tamil as a living language i.e. it should be used by all. It works closely with the Ministry of Eduction to upgrade teaching of Tamil in schools. It also functions to promote Indian culture not Tamil culture. But Tamil should be the basis of Indian culture as the Tamils are 65% of the Indian community.

. But so far we haven't achieved much. organised a cultural show.

. Working on a project Tirukkural (திருக்குறள்) having in mind the need of upper secondary students. First part is to bring the message of Tirukkural through stories. It will be done in English. Second part is to select relevant Tirukkural couplets and pulish them in both Tamil and English.

As for the literary activities:
. We have Tamil Murasu, Indian Movie News and one more cinema monthly. Also the Association of Singapore Tamil Writers.

. For cultural needs there is the Singapore Indian Fine Arts Society. It is in existence for well over 20 years. The president is a North Indian merchant. The Society teaches music, dance etc. Instructors are from Kalakshetra of Madras.

. We have the Singapore Indian Artistes' Association and Tamizhavel Drama Society (தமிழவேள் நாடக மன்றம்).

. As for the National Library the Tamil members and their reading habits are not advanced. Tamil books need to be rebound in Tamilnadu. Half the money for the allocation of Tamil books has to be set aside for this rebinding work.

. On Tamil Murasu:
I was with the paper between 1951 and September 1958. 4 page paper. 6 pages on Sundays. சங்கங்களும் அவற்றின் செய்திகளும் முக்கியமாக இடம்பிடித்தன. அது ஒரு செய்திப் பத்திரிகையைப் போல நடக்கவில்லை. முரசை ஒரு முழுமையான பததிரிகை என்று சொல்ல முடியாது. Not a full fledged paper. பத்திரிகையின் போக்கை மாற்ற முயன்றேன். கோ. சா இதில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். கட்டுரை பேர் போடாமல் எழுதுவேன். கோ சா மெஷினை நிறுத்தி பேர் போடுவார். தமிழ் நேசன் அதிகமாக விற்ற காலம் அது. பிறகுதான் 1952/53/54ல் முரசின் விற்பனை கூடியது.

என்னுடன் தேவராஜன், சி. வீ. குப்புசாமி, ரெ. சீனிவாசன் முதலானோர் இருந்தனர். மலாயா நண்பனில் வேலை செய்த மெ. சிதம்பரத்தை நான் முரசுக்குக் கொண்டு வந்தேன். பின்னர் அ. முருகையன், முருகு சுப்பிரமணியன் வந்து சேர்ந்தனர்.

Indian Daily Mail பத்திரிகையும் நடந்து கொண்டிருந்தது.

எல்லாம் team work. பத்திரிகையை நன்றாக நடத்த பெருமுயற்சி எடுத்துக்கொண்டோம். மலாயா இந்தியர் காங்கிரசின் (மஇகா) செய்தியை கோ. சா போடமாட்டார். நாங்கள் அந்தச் செய்தியைப் போட்டோம். மஇகாவின் தலைவர் தேவாசரைசத் திட்டி கோ. சா தலையங்கம் எழுதினார்.

ரசனை வகுப்பு எழுத்தாளர் பேரவையாக முகிழ்த்தது. வரும் கதைகளை எல்லாம் திறனாய்வு முறையில் விமர்சனம் செய்தோம்.

தலையங்கம் எழுதியிருக்கிறேன் நான். எதிரொலி பகுதி என்னால் ஆரம்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையில் பூந்தோட்டம் என்ற பகுதியை ஆரம்பித்து தும்பி எனும் புனைபெயரில் எழுதினேன்.

அ. முருகையன் சிறுகதைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். முருகு என்ற பெயரில் வாரந்தோறும் கதை எழுதியவர் முருகையன்தான். (பலர் முருகு சுப்பிரமணியன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது.)

பத்திரிகையில் தலைப்புகள் கவர்ச்சியாக இருக்கவேண்டும்.

1955ல் தேர்தல் வருவதை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்னதாகவே இந்தியர்கள் அதிக அளவில் குடியுரிமை பெறவேண்டும் என்று கோ. சா விரும்பினார். முரசு பெரும்பாடுபட்டது. தனியாக ஓர் அலுவலகம் திறந்தது. விளம்பரம் செய்தோம். கூட்டம் நடத்தினோம். முரசு தலையங்கம் எழுதியது. மக்கள் வந்து அடையாளக் கார்டைக் காட்டினால் போதும். மற்ற வேலைகளை அலுவலகம் பார்த்துக்கொண்டது. கூட்டம் கூட்டமாக வந்து குடியரிமைக்கு மனு செய்தார்கள் இந்தியர்கள்.

அத்தகைய ஒரு குடிமையுணர்வு இன்றைய தமிழ் முரசிடம் இல்லை. அன்று ஒவ்வொருவரும சமுதாய உணர்வோடு செயல்பட்டனர். திருவிழாக்களுக்கும் கலியாணம் முதலான நிகழ்ச்சிகளுக்கும் முரசு ஆசிரியர்கள் சென்று வருவார்கள். அவற்றில் பேசுவார்கள். மக்களோடு கலந்து உறவாடுவார்கள்.

குடிநுழைவு 1953 வரை தொடர்ந்தது.

1954ல் தமிழ் முரசில் இந்தியா செய்திகள் மிகமிகக் குறைவு. இலக்கிய பண்பாட்டுச் செய்திகள்தான் அதிகம். அரசியல் விவகாரங்களில் சிக்கிக் கொள்வது கிடையாது. இதனால் வாசகர்களின் நம்பிக்கை முரசுக்கு முழுமையாகக் கிடைத்தது. அதிலும் அண்மைக் குடிநுழைவாளர்கள் எல்லாம் இளையர். நன்கு படித்தவர்கள். தமிழ் உணரச்சி அதிகம் கொண்டவர்கள். உள்நாட்டு இளையரும் முரசைத் தீவிரமாக ஆதரித்தர்கள்.

தமிழ் எங்கள் உயிர் நிதி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய நூலக அமைப்பு, தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் இளையர் கூட்டத்தை முரசின் பக்கம் ஈர்த்தன.

If we look back Tamil Murasu was charismatic.

கோ. சாவுக்கு தலைமைத்துவம் வாய்த்தது. நம் தமிழ் கூலிக்காரன் தமிழா இருக்கக்கூடாது என்பார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வேலை செய்யவேண்டும் என்பார். குடியும் குடித்தனமுமாக செழுமையா வாழவேண்டும் என்பார். முழுக்க முழுக்க ஒரு சிங்கப்பூர் தேசியவாதி போல கோ சா செயல்பட்டார்.

தமிழ் நேசன் எப்போதுமே தமிழ் முரசுக்குப் போட்டியாக இருந்தது கிடையாது. நேசனின் போக்கிற்கு முரசு என்றுமே ஆட்பட்டது இல்லை.

இந்து திருமணச் சட்டத்தை முரசு ஆதரித்தது. சீர்திருத்த மணத்தையும் அது வரவேற்றது. பிரிட்டிஷ் ஆட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சி. ஆர். தசரதராஜ் மசோதா கொண்டு வந்தார். வேண்டாத அம்சங்களை முரசு எதிர்த்துப் போராடியது.

1947ல் பூந்தோட்டம் என்ற இதழை சேலத்தில் நடத்திக் கொண்டிருந்தேன் நான். பத்து இதழ்கள் வரை இழுத்தேன். மாத இதழ். சமூக இலக்கிய அரசியல் விஷயங்கள் எல்லாம் உண்டு. தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆயிரம் படிகள் முதலில் போனது. கடைசியில் ஐயாயிரம் படிகள் வரை சென்றது. அச்சடிப்பு அனுமதியில் கட்டுப்பாடு வந்ததால் நிறுத்த வேண்டியதாயிற்று.

தமிழக மாநில திராவிட மாணவர் கழகத்திற்குத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தலைவர் ஈ வே கி சம்பத்.

சேலத்தில் சி பா ஆதித்தன் நடத்தி வந்த தினத்தாள் நாளிதழில் சேர்ந்தேன். உதவி ஆசிரியர் வேலை. பிறகு செய்தி ஆசிரியராக உயர்ந்தேன். மூன்றே மாதத்தில் பொறுப்பு ஆசிரியர் ஆனேன். அங்கு 13 உதவி ஆசிரியர்கள் இருந்தார்கள். என்னைத் தவிர எல்லாரும் பிராமணர்கள். ஒரு நாள் செய்தி ஆசிரியர் வேலையைப் பார்த்தபோது ஆதித்தன் என்னை செய்தி ஆசிரியராகவே பணியாற்றும்படி கூறிவிட்டார்.

1948ல் மகாத்மா காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒரு வட்டார நாளிதழில் காந்தியைப் பற்றி உடனே தலையங்கம் எழுதியது நான்தான். காந்தியை யார் சுட்டது என்று உடனே தெளிவாகவில்லை. அதனால் சமூகக் கலவரம் தலைதூக்கியது. சேலத்திலும் கலகம். முஸ்லிம்கள் மீது இந்துக்களின் கோபம் பாய்ந்தது. ஆனால் உண்மை நிலவரம் தெரிந்ததும் காந்தியைக் கொன்றவன் கொழுத்த பார்ப்பான் என்று தலைப்புச் செய்தி போட்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்தேன். இனக் கலவரத்தை நிறுத்த வேண்டும் என்பதே என் முதல் நோக்கம்.

இரண்டு வருஷம் ஓடியது. 10 முதல் 12 ஆயிரம் பிரதிகள் விற்றது தினத்தாள். அங்கே உதவி ஆசிரியருக்கு மாத சம்பளம் 60 ரூபாய். செய்தி ஆசிரியருக்கு 80 ரூபாய் சம்பளம். ஒரு நல்ல பள்ளி ஆசிரியர் 45 ரூபாய்தான் சம்பளம் வாங்கிய காலம் அது.

என்னை திருச்சிக்குப் பத்திரிகை நிர்வாகியாக அனுப்பி வைத்தார்கள். 150 ரூபாய் சம்பளம் கேட்டேன். ஆதித்தன் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஒரு நாள் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களைப் பார்க்கப் போனேன். (அவர் திராவிட இயக்கம் சார்ந்த கல்வியாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி வரை உயர்ந்தவர்.) ஐயா (பெரியார் ஈ வே ரா) என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னார் அவர்.

என்னைப் பார்த்துப் பேச குத்தூசி குருசாமியை பெரியார் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
நான் விடுதலை -க்குப் போனேன். உதவி ஆசிரியராக வேலை செய்தேன். 4 பக்க பத்திரிகை விடுதலை.

ஒரு நாள் குருசாமி என்னிடம் சிங்கப்பூருக்குப் போகிறாயா என்று கேட்டார். கோ சா நடத்தும் தமிழ் முரசுக்கு ஆள் தேவை என்றார். நானும் துணிந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டு விட்டேன்.
(கோ சா முரசுக்கு வருமாறு குருசாமியைத்தான் கேட்டார் என்றும் குருசாமிக்கு வர விருப்பம் இல்லாததால் அவர் அரசுவை அனுப்பி வைத்தார் என்றும் ஒரு தகவல்.)

Wednesday, May 21, 2008

மலாயா-சிங்கப்பூர் ஆரம்ப காலக் கதைகளும் நாவல்களும் அல்லது பினாங்கில் போட்ட பிள்ளையார் சுழி



பாலபாஸ்கரன்


நம்மில் பலருக்கு இதுவரை தெரியாத கதை இலக்கிய வரலாறு இது. சரியாக 95 ஆண்டுகளுக்கு முன் பினாங்கில் ஒரு பத்திரிகை தோன்றியது. பெயர் பினாங்கு ஞானாச்சாரியன். முதலில் வாரம் இருமுறையாக வந்து நான்கு மாதம் கழித்து தினசரியாக மாறியது. அந்த நான்கு பக்கப் பத்திரிகையை வெளியிட்டவர் சம்சுகனி ராவுத்தர். பத்துக் கையொப்பம் வாங்கி அனுப்புகிறவர்களுக்கு ஒரு பத்திரிகை இனாமாய் தரப்படும் என்ற அறிவிப்பு முதல் பக்கத்திலேயே விடாமல் வந்தது. அந்தக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில், ஆங்கில ஏடு உட்பட எந்தப் பத்திரிகையும் வராது. அதனால் கதை கட்டுரை எல்லாமே வாரப் பத்திரிகையில்தான் இடம்பிடிக்கும். பேசும் சினிமா இன்னும் தலைகாட்டவில்லை.

1912 மார்ச் 15ல் உதயமான ஞானாச்சாரியன் தட்டுத்தடுமாறி ஒன்றரை ஆண்டு உயிர்பிழைத்தது. சென்னையிலிருந்து வித்வான் எஸ். எல். மாதவராவ் முதலியார் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வந்தார்கள். அவர் நல்ல படிப்பாளி. ஆங்கிலம் தமிழ் அறிந்தவர். நாவல் புனைவதில் கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர். அவர் எழுதிய சிவசாமி அல்லது நாட்டுப்புறத்தான் எனும் 64 பக்க நாவலின் நான்காம் பதிப்பு 1922ல் சென்னையில் வந்தது. முதற்பதிப்பின் விவரம் தெரியவில்லை.

மாதவராவ் முதலியார் பத்திரிகை ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் தாம் ஏற்கனவே எழுதி அச்சிடாமல் வைத்திருந்த ஒரு நாவலை ஞானாச்சாரியனில் தொடராய் வெளியிடுவதாக அறிவித்தார். முதல் இதழிலேயே முதல் பக்கத்தில் அந்த அறிவிப்பு இடம்பெற்றது.
இரத்தினமாலை அல்லது காணாமற்போன இராஜகுமாரத்தி
“இஃது எம்மால் புதிதாய் செய்யப்பெற்ற ஓர் அரிய நாவல்! தற்காலத்தில் நாவல்கள் என்று கூறப்படும் கதைகளில் இது வெகு சிறந்ததென்று இதை வாசித்த வித்வான்களால் நற்சாட்சி தரப்பெற்றது. பல கிளைக்கதைகள் ஒன்றாய்ச்சேர்ந்த ஓர் பெருங்கதை. இது வாசிக்க வாசிக்க இன்பம் தரும். இப்புத்தகம் முழுவதும் பல படிப்பினைகள் அடங்கியது. சிறுகச் சிறுகத் தொடர்ச்சியாய் சிறிது தூரம் வெளிப்படுத்துவோம். இதை வாசித்துத் திருப்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர் விலாசம் முதலியவைகளையும் எத்தனை புத்தகம் வேணுமென்பதையும் தெளிவாய் எழுதி எமக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

25, பீச் ஸ்திரீட், பினாங்கு எனும் முகவரி தரப்பட்டுள்ளது. இந்த நாவல் இரண்டு, மூன்று வாரம் வந்தது. பிறகு நின்றுவிட்டது. ஆசிரியரை மாற்றி விட்டார்கள். நம்முடைய முதல் தமிழ் நாவலின் கதை இப்படித்தான் முளையிலேயே கருகிப்போனது. இதை நம் முதல் தமிழ் நாவல் எனக் கொள்ள முடியுமா என்றும் சிலர் வினவலாம்!

நாவலை அறிமுகப்படுத்திய ஞானாச்சாரியன் புரிந்த வேறு சில முயற்சிகள் மிக முக்கியமானவை. 1913 ஜுன் 24ல் கனகாம்புஜத்திற்கும் கனகரத்தினத்திற்கும் நடந்த சம்பாஷணை எனும் உரையாடல் இடம்பெற்றது. எழுதியவர் பாஸ்கரன். இது ஒரு கற்பனைச் சம்பவம். ஆனாலும் கிட்டத்தட்ட ஒரு கதையைப் போன்றது. இத்தகைய உரையாடல்கள் அந்தக் காலத்து இதழ்களில் நிறைய வந்தன.

1913 செப்டம்பர் 2ல் ‘ஓர் கட்டுக் கதை’ என்று தலைப்பிட்டு மகோஷதன் மனைவியைத் தேர்ந்தெடுத்தல் என்ற கதை வெளியானது. பௌத்தர்களின் ஜாதகக் கதைகளை ஒட்டியது என்ற குறிப்பும், மானசி பங்காளிப் பத்திரிகையின் ஆனி மாச சஞ்சிகையிலிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலும் இருந்தன. இந்தக் கதையை எழுதியவர் பாபு வியோமகேச முஸ்தாபி. மகோஷத ராஜகுமாரனுக்கு வயது பதினாறுதான்.... எனக் கதை ஆரம்பிக்கிறது.

1913 செப்டம்பர் 10ல் தாராபாய் கதை பிரசுரமானது. தொடர் கதை என்று போடாமலேயே சில வாரங்களுக்கு இது நீடித்தது. எழுதியவர் MVS என்று ஆங்கிலத்தில் இருந்தது. எம். வி. சுந்தரேச ஐயர் என்பவரே இவர். இதே கதையை தாராபாய் (A Tale) என்ற தலைப்பில் இவர் 1917ஆம் ஆண்டில் ஈப்போவில் ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டார். 22 பக்கக் கதை அது.
தாராபாய் ஒரு புகழ்பெற்ற கதையாகத் தெரிகிறது. 1903ல் தமிழ்நாட்டின் சக்கரவர்த்தினி சஞ்சிகையில் மாணிக்ககசாமி முதலியார் என்பவர் தாராபாய் என்ற பெயரிலேயே ஒரு தொடர்கதையைப் படைத்தார். (சக்கரவர்த்தினி மகாகவி பாரதியார் நடத்திய பத்திரிக்கை அல்ல. பாரதியாரின் சக்கரவர்த்தினி 1905 ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெளியானது.) எம். வி. சுந்தரேச ஐயர் பிரிட்டிஷ் மலாயா பூகோள புஸ்தகம் என்ற 173 பக்கப் பாட நூலையும் 1926ல் கோலாலம்பூரில் வெளியிட்டார்.

1913 அக்டோபர் 29ல் மாலதி 'ஒரு அருமையான நாவல், முன் தொடர்ச்சி' என்று வந்தது. முந்தைய இதழில் இது தொடங்கியிருக¢க வேண்டும். அந்த இதழ் காணக் கிடைக்கவில்லை. இந்த நாவல் முறையாக வந்ததாகத் தெரியவில்லை. சில இதழ்கள் கழித்து இது நின்றுவிட்டது. எழுதியவர் பெயரில்லை.

1915ஆம் ஆண்டில்தான் வ. வே. சு. ஐயர் இலக்கியத் தரம் வாய்ந்த முதல் தமிழ்ச் சிறுகதை என்று கருதப்படும் குளத்தங்கரை அரசமரம் கதையை விவேகபோதினி சஞ்சிகையில் இரண்டு பாகங்களாக எழுதினார். அவர் புதுச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்ததால் மனைவி சு. பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அக்கதை பிரசுரமானது. அதன் பிறகு 1917ல் வ. வே. சு. ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பைப் புதுச்சேரியில் தாம் நிறுவிய கம்ப நிலையம் சார்பில் வெளியிட்டார். ஐந்து கதைகள் அதில் இடம்பெற்றன. 1925ல் ஐயர் காலமானார். மேலும் மூன்று கதைகளைச் சேர்த்து மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற அதே தலைப்பில் மற்றொரு தொகுப்பு 1927ல் கொண்டுவரப்பட்டது.
கதைகளைவிட ஐயர் எழுதிய முன்னுரை வரலாற்றுச் சிறப்பபானது. ‘ரீதி புதிது’ என்று, அவர் தாம் எழுதிய புதிய ரகச் சிறுகதையை வருணித்த பாங்கு அழகானது, அர்த்தமானது.

1912ல் புனைகதைத் துறைக்கு வித்வான் மாதவராவ் முதலியார் பினாங்கில் போட்ட பிள்ளையார் சுழி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

இஸ்லாமிய சாயலுடன் தொடங்கிய பினாங்கு ஞானாச்சாரியன் பதினாறு மாதம் கழித்து ஆர்வமும் துடிப்பும் மிக்க என். ஆர். பார்த்தா என்பவரின் கைக்கு மாறியது. அவர் பத்திரிகையை சுதேசமித்திரன் அளவில் மாற்றி இந்திய தேசிய உணர்வுகளுக்கு இடங்கொடுத்து, உள்ளூர் விவகாரங்களை முடுக்கிவிட்டார். ஆங்கிலத்தில் தலையங்கம் எழுதினார். அரசாங்கத்துடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டார்.

இருப்பினும் கைமுதல் இன்றி எத்தனை காலம் பத்திரிகையை நடத்த முடியும்? ஐந்து மாதத்தில் பத்திரிகை நின்றது. அச்சகத்தை ஏலத்தில் எடுத்த மற்றொரு தரப்பினர் ஞானாச்சாரியன் பெயரை ஜனோபகாரி என்று மாற்றி 1914 பிப்ரவரி மாதத்திலிருந்து பத்திரிகையை நடத்தினர். அதுவும் ஓராண்டில் நின்றது.

என். ஆர். பார்த்தாவின் முழுப்பெயர் நிர்மலானந்த ராஜா பார்த்தசாரதி நாயுடு. தஞ்சாவூர் பகுதியிலிருந்து புறப்பட்டுப் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் வழியில் 1905ம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் தமிழர்களின் அவல நிலையைக் கண்டு அவர்களுக்கு உதவவேண்டும் என்று உறுதி பூண்டு ஒரு கல்வி நிலையத்தை நிறுவினார். 1907ல் The Orient என்ற பெயரில் ஒரு காசு விலையில் நான்கு பக்க ஆங்கில தினசரியும், விஜயன் என்ற பெயரில் தமிழ்ப் பத்திரிகையும் நடத்தினார். எதுவும் நிலையாக நீடிக்கவில்லை. அதன்பிறகே அவர் சிங்கப்பூரைவிட்டுப் பினாங்கு சென்றார்.

ஆரம்ப காலத்தில் நூல்கள் தனியாக, சொந்தமாக அச்சடிக்கப்பட்டாலும் சிறுகதை பத்திரிகைகளையே சார்ந்து வளர்ந்தது எனலாம்.

(மலாயா - சிங்கப்பூர் வட்டாரத்தின் முதல் நூல் சிங்கப்பூர் சித்திரகவி நாவலர் வெ. நாராயணசாமி நாயகர் புனைந்த நன்னெறித் தங்கம் பாட்டு என்பதாகும். இங்குத் தமிழ் அச்சகம் இல்லாத காரணத்தால் 1868ம் ஆண்டில் அந்த 27 பக்கக் கவிதை நூல் சென்னை வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடத்தில் அடிக்கப்பட்டது. நாராயணசாமி நாயகர் இசைப்புலவர். சித்திரகவிகள் பாடுவதில் வல்லவர். 1866 மே 28ல் தத்துவபோதினி இதழில் இருந்தும் பலனென்ன ஐயையோ இறந்தும் பலனென்ன என்று தொடங்கும் அவருடைய இருபது வரிப் பாடல் பிரசுரமானதை முரசு நெடுமாறன் (மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் 1997) குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி நாயகரின் தந்தை வெள்ளையப்பு நாயகரும் ஒரு புலவர்.)

பினாங்கிலிருந்து சத்தியவான் என்று ஒரு பத்திரிகை 1919 ஏப்ரல் 7ல் உதயமானது. வாரத்திற்கு இரண்டு இதழ்கள். நான்கு பக்க ஏடு. சமயச் சொற்பொழிவு செய்யத் தமிழ்நாட்டிலிருந்து வந்த பாலகந்தகசிவம் என்பவர் இங்கேயே தங்கிச் சொந்தமாக நடத்திய பத்திரிகை அது. 1918ஆம் ஆண்டிலிருந்து வந்து கொண்டிருந்த பாதுகாவலன் என்ற மற்றொரு பினாங்கு பத்திரிகையுடன் சிவம் மற்போர் நடத்தாத குறைதான். இரண்டு பத்திரிகைகளும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டு விரைவிலேயே மடிந்து போயின.

இதில் நமக்கு வேண்டிய தகவல் என்னவெனில், சத்தியவான், 1919 மே 26லிருந்து வஸந்தசேனா எனும் ஓர் இனிய செந்தமிழ் நாவல் தொடரை வெளியிட்டது. இதை எழுதியவர் கே. லெட்சுமணப் பிள்ளை. நாவலைப் பிரசுரிப்பதில் ஒழுங்கு தென்படவில்லை. நாவல் முற்றுப்பெறாமலே நின்றுவிட்டது.

சர்வஜனமித்திரன் 1920 ஜுன் 2ல் பினாங்கில் தோன்றிய மற்றொரு பத்திரிகை. அதனை அச்சடித்து வெளியிட்டவர் ஈ. ஏ. மரைக்கான். இதில் புனைகதை எதுவும் தென்படவில்லை என்றாலும் ‘கடிதம்’ பகுதியில் மா. மலையப்பன் நாயகனை வஞ்சித்த நாரி எனும் தலைப்பில் ஒரு தொடர் எழுதினார். பத்மாபுரி எனும் நகரில் சம்பவம் நடக்கிறது. அறுபது வயது கிழவனை 19 வயது குமரி ஏமாற்றிய கதை அது. சிறுகதை போலத் தோன்றினாலும் சிறுகதைக்குரிய விறுவிறுப்பான கதைப்பின்னலோ அழுத்தமான கதைமாந்தர் விளக்கமோ கிடையாது.

இதன்பிறகுதான் சிங்கப்பூரின் பொதுஜனமித்திரன் ஏட்டில் சில கதைகளைப் பார்க்க முடிகிறது. 1923 செப்டம்பர் 15 முதல் 1925 ஏப்ரல் 4 வரை சுமார் இருபது மாதம் நடைபெற்ற ஒரு முக்கியப் பத்திரிகை அது. தமிழ் நேசனை ஒரு கட்டத்தில் சீனர்கள் வாங்கிக் கொஞ்ச காலம் நடத்தியது வரலாறு. ஆனால் பொதுஜனமித்திரனை ஆரம்பத்தில் சீனர்களின் Jitts & Co நடத்திக் கடைசிக் கட்டத்தில் தமிழர்களிடம் ஒப்படைத்தது.

அச்சுத்துறையில் கொஞ்சம் வசதியான ஒரு கங்காணியாக (foreman) இருந்த எம். பி. கிருஷ்ணசாமி நாயுடு என்பவர் சிங்கப்பூரில் அப்போது தமிழ்ப் பத்திரிகை இல்லாத குறையைப் போக்க, நட்பின் காரணமாக சீனர்களை அணுகி உருவாக்கிய பத்திரிகைதான் பொதுஜனமித்திரன். வார இருமுறை ஏடு. எட்டுப் பக்கம். ஐந்து காசு விலை. நிறைய விளம்பரங்கள் இடம்பெற்றன. ஆசிரியர், துணையாசிரியர், அச்சுக்கோப்பாளர் பற்றாக்குறை. இருபது மாதத்தில் நான்கு ஆசிரியர்கள் மாறி மாறி வந்தனர். முதலில் வந்த ஜே. பெர்னாண்டஸ் கடைசியில் பொறுப்பேற்க வந்தபோது பத்திரிகையை மூடவேண்டியதாயிற்று.

முதல் இதழிலேயே (1923 செப்டம்பர் 15) காணாமற்போன ஞானவல்லி எனும் துப்பறியும் தொடர்கதை ஆரம்பமாகியது. கே. எக்ஸ் எழுதிய அக்கதை நான்கு இதழ்களில் முடிவுற்றது.

பின்னர் 1923 செப்டம்பர் 29ல் ஊதாரி ‘ஓர் துப்பறியும் இனிய தமிழ் நாவல்’ தொடராக ஆரம்பித்தது. இதை எழுதியவரும் கே. எக்ஸ். சில வாரங்களே இது நீடித்தது.

1924 மே 28ல் ‘நமது கதைப்பக்கம்’ என்ற பொதுத்தலைப்பில் பாவத்தின் சம்பளம் மரணம் எனும் கதை வெளியானது. சிறுகதை என்று இதற்குக் குறிப்பு இல்லையென்றாலும் கட்டுக்கோப்பான ஒரு சிறுகதையாக இதனை நிச்சயம் கருத முடியும். நீளம் அதிகமில்லை. சுமார் 400 சொற்கள். பத்மாவதி ஒரு சீர்திருத்தப் பெண். பெற்றோர் அதிக சுதந்தரம் கொடுக்கின்றனர். கல்லூரிப் படிப்பின்போது ஒருவனைக் காதலிக்கிறாள். முற்போக்குச் சிந்தனையில் கற்பைப் பறிகொடுக்கிறாள். காதல் கைகூடவில்லை. பெற்றோர் ஏற்பாடு செய்து அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி வைக்கின்றனர். கார்த்திகேய முதலியார் கணவராக வருகிறார். கற்பை இழந்துவிட்டுக் கலியாணம் புரிந்துகொண்டது தவறில்லையா, இது கணவருக்குச் செய்த துரோகம் இல்லையா என்ற சிந்தனையில் குழம்பி நிற்கிறாள். மனப்போராட்டம் முற்றுகிறது. கடைசியாகத் தற்கொலையில் பத்மாவதியின் வாழ்க்கை முடிகிறது. வளவளவென்று ஓட்டாமல் கதைநாயகியின் உள்ளப் போராட்டத்தை மட்டுமே மையமாக வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது.

‘பத்மாவதி படுத்திருந்தவள் திடீரென்று விழித்துப் பார்த்தாள். அவள் மனம் ஒருவகைக் கலக்கமடைந்தது.’ என நட்ட நடுவிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.
கதையின் முடிவு: "படுக்கையிலிருந்து ஒரு துண்டுக் கடிதத்தை எடுத்து வாசித்தார். அதில் ‘ நான் செய்த பாவத்திற்கு என்னை ஈடுகொடுத்துவிட்டேன். நீங்கள் வருந்தாமல் வேறு கலியாணஞ் செய்துகொண்டு இன்புற்றிருங்கள்’ " என்று எழுதப்பட்டிருந்தது.
திடுதிப்பென்று கதை முடிவதைக் காணலாம். அநாவசியமான வார்த்தையோ புலம்பலோ இல்லை.

அந்தக் காலக்கட்டத்தில் அரும்பிய சீர்திருத்தப் போக்கு வாழ்க்கைக்கு உதவாது என்பதை எழுத்தாளர் தெளிவாகச் சொல்கிறார். எழுதியவர் பெயர் இல்லை. எனினும் பத்திரிகையின் மூன்றாவது ஆசிரியராக அப்போது பணியாற்றிய டி. என். நடேச முதலியார் இதனை எழுதியிருக்கலாம். இவர் 1919ல் விவேகபுர வேதியர் எனும் நாவலை சென்னையில் வெளியிட்டவர். ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய The Vicar of Wakefield கதையின் தழுவல் அது. கோலாலம்பூரில் கி. நரசிம்ம ஐயங்கார் நடத்திய தமிழகம் சஞ்சிகையில் துணையாசிரியராகவும் இருந்திருக்கிறார் நடேச முதலியார்.
தமிழகம் சஞ்சிகையை நிறுவுவதில் ஐயங்காருக்கு அரும்பாடுபட்டு உதவியதாகக் கூறிக்கொள்ளும் உடுவில் வேதாரணியன் வீரகுமார் சிங்கன் என்பவர் நடேச முதலியாருக்கு முன்னதாக பொதுஜனமித்திரனின் இரண்டாவது ஆசிரியராகப் பணியாற்றி விலகிக் கொண்டவர்.
1924 மே 31ல் ‘நமது கதைப்பக்கம் பகுதியில் இடம்பெற்ற ஒரு தொடர்கதை பரோபகார அர்த்தம் இதம் சரீரம் என்பதாகும். இதற்கும் எழுதியவர் பேரில்லை. நடேச முதலியாராக இருக்கலாம். பிரெஞ்ச் எழுத்தாளர் Victor Hugo 1862ல் எழுதிய உலகப் புகழ்பெற்ற Les Miserables நாவலின் தழுவல்தான் அது. ஏழை படும் பாடு என்ற பெயரில் சுத்தானந்த பாரதியார் இதனைத் தமிழில் மொழிபெயர்த்து பர்மா சஞ்சிகை ஒன்றில் தொடராகப் படைத்தார். அது பிறகு நாவலாகவும் நூலுருப்பெற்றது. ஏழை படும் பாடு 1950ல் தமிழில் திரைப்படமாகவும் வந்தது.

1924 ஜுலை 19ல் ‘நமது கதைப்பக்கம் பகுதியில் அம்பலவாணன் எனும் தலைப்பில் ஒரு சமூகத் தொடர்கதை ஆரம்பமாகியது. உரிமை ஆசிரியருக்கே என்று போடப்பட்டிருந்தது. எழுதியவர் பெயர் இல்லையாயினும் அவர் நடேச முதலியார் என்பதில் ஐயமில்லை. அவருக்குக் கைவந்த ஒரு கலைதானே இது. நடேச முதலியார் 1924ஆம் ஆண்டில் மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் வரை ஆசிரியராக இருந்திருக்கிறார்.

அக்காலத்தில் தோன்றிய கிறித்துவ இதழ்களும் கதையைப் பயன்படுத்தியுள்ளன என்பது ஒரு சுவையான தகவல். உதய தாரகை சிங்கப்பூரில் 1923 டிசம்பர் 8ல் உதித்த ரோமன் கத்தோலிக்க மாத சஞ்சிகை. முதல் இதழில் பாலசாமியின் பணப்பை எனும் சிறுகதை கத்தோலிக்கச் சிறுவனின் நேர்மையைச் சித்திரிக்கிறது.

1924 ஜனவரி இதழில் சுமத்ரா தீவின் சூரன் அல்லது ராஜசேகரன் எனும் அருமையான தமிழ் நாவலை ‘எதிர்பாருங்கள்’ என்று அறிவித்தனர். ‘இதில் மிக்க ஆச்சரியமும் நெஞ்சு திடுக்கிடக்கூடியனவும், ஆதி முதல் அந்தம் வரையில் மனதைக் கவரக் கூடியவைகளுமான சம்பவங்கள் நிறைந்துள்ளன. பலவித நடவடிக்கைகளையுடைய பாத்திரங்களுமிருப்பதால், அநேக நீதிகளும் புத்திமதிகளும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.’ என்ற பீடிகையுடன் அது ஒரு தொடராக வந்தது.

1928 ஏப்ரல் மாதம் சிங்கப்பூரிலிருந்து வந்த மலேயா கிறீஸ்த்துவ மித்திரன் மாத சஞ்சிகையும் முதல் இதழிலிருந்தே ஒரு தொடர்கதையை ஆரம்பித்தது. ஞானபூஷணம் அல்லது தாய்சொற் தவிரா தையாநிதி அதன் தலைப்பு. ‘இச்சரித்திரம் ஞானபூஷணத்தின் பக்தியையும் நற்புத்தியையும் காட்டுகின்றன. பெரியோர் தங்கள் பிள்ளைகளை அதன் பால்யத்தில் பெரியோர் நிந்தனை, சோரம், அசத்தியம், தற்புகழ்ச்சி, கடவுள் துரோகம் என்ற பாவக் காரியங்கலில் பிரவேசிக்கா வண்ணம் நற்புத்திப் புகட்ட வேண்டும்’ என முதல் அத்தியாயம் தொடங்குகிறது.

முன்னேற்றம் வார இதழ் 1929 ஜனவரி 10ல் வி. எஸ். நாராயணசாமியை ஆசிரியராகவும் கோ. சாரங்கபாணியைத் துணையாசிரியராகவும் கொண்டு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது. இருபது பக்க இதழ். விலை ஐந்து காசு. வார இதழுக்கு வேண்டிய எல்லா அம்சங்களையும் தாங்கி முழுக்க முழுக்க சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து செல்வாக்குடன் விளங்கிய சஞ்சிகை அது. பலர் அதில் எழுதினர். அ. சி. சுப்பையா தமிழ் வரி வடிவ ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடரை 1933ல் முன்னேற்றத்தில்தான் முதலில் எழுதினார். பின்னர் அத்தொடர் ஈரோட்டில் 1935ல் பெரியார் ஆதரவுடன் நூலாக அச்சிடப்பட்டது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு அ. சி. சுப்பையாவின் நூலும் ஒரு தூண்டுகோல் என்பது உண்மை.

1929 டிசம்பர் 21, 22ல் ஈப்போவில் நடைபெற்ற அகில பிரிட்டிஷ் மலாயா தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு, டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று சிங்கப்பூர் வந்த பெரியார் ஈ. வே. ரா, ‘நான் இந்நாட்டிற்கு வந்து போனதற்கு ஓர் ஞாபகம் இருக்க வேண்டுமேயானால் முன்னேற்றம் சிரஞ்சீவியாய் வாழவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். 1955 வரை முன்னேற்றம் நடைபெற்றதாக ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
1929 நவம்பரிலிருந்து அ. லெட்சுமணன் ‎புனைந்த சாந்திபுரக் கொலை எனும் தொடர்கதையை முன்னேற்றம் பிரசுரித்தது. பின்னர் 1931ல் அது நூலாகவும் வெளிவந்தது.

இவ்வேளையில், தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகியவற்றின் ஆரம்பக் கதைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

1924 செப்டம¢பர் 10ல் தமிழ் நேசன் வார ஏடாகத் தொடங்கிய காலத்தில் சிறுகதைகளும் நாவல்களும் தமிழ்நாட்டில் ஏராளமாகக் குவிந்தன. ஆனால் நேசனை ஆரம்பித்து நடத்திய கி. நரசிம்ம ஐயங்கார் அவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்¢லை. எட்டு ஆண்டுகள் கழித்து 1932 மே மாதம் ‘தமிழ்நேசன் கதைப்பகுதி’ என்று ஒரு பகுதி ஆரம்பமானது. அதில்தான் முதல் தடவையாக கோ. பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய தோட்டக் கொலை மர்மம் அல்லது பத்துமலைக் கள்வன் என்ற தொடர்கதை வந்தது. 1932 கடைசியிலேயே அந்தத் தொடர்கதை 87 பக்க நூலாகவும் வந்துவிட்டது.

தமிழ்நேசனின் முதல் சிறுகதை 1933 ஆகஸ்ட் 2ல் வெளியானது. ‘ஒரு வேடிக்கைக் கதை என்று சொல்லி, ஆசிரியர் நரசிம்ம ஐயங்காரே கிராமபோன் சந்தியாவந்தனம் அல்லது சுருக்கு வழி ஜெபம் எனும் கதையை வெளியிட்டார். ‘Prayer Made Easy - A Humorous Story by K. N.’ என்று ஆங்கிலத்திலும் துணைத் தலைப்பு கொடுக்கப்பட்டது. MAHA எனப்படும் மலாயாத் தோட்ட விவசாயக் கண்காட்சியை ஒட்டி தமிழ்நேசன் வெளியிட்ட சிறப்பு இதழில் அக்கதை இடம்பெற்றது. வேலையின்போது ஜெபம் செய்ய முடியமல் தவிக்கும் தாசில்தார் வேம்பு ஐயருக்கு அவருடைய நண்பர் கிராமபோன் ஒலிப்பதிவுப் பெட்டியைக் கல்கத்தாவிலிருந்து தருவித்துக் கொடுப்பதே கதையின் சாரம்.

அதே மாஹா இதழில் மூக்கந்துரையைப் பாம்பு கடித்தது - Mr Morgan Bitten by Snake எனும் கதையும் உள்ளது. ரப்பர் விலை வீழ்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருந்த காலத்தில் மூக்கந்துரை பாம்புகள் மலிந்த ஜோகூர் தோட்டத்திற்குப் போகிறார். போய் ஐந்து பாம்புகளை அடித்துவிட்டார். இரவுத் தூக்கத்தில் புரண்டு படுத்தபோது கட்டிலில் கிடந்த இடைவாரின் கொக்கி உறுத்தவே ‘பாம்பு பாம்பு’ என்று பயத்தில் அலறி ஓடுகிறார். நிலைமையறிந்து, மூக்கந்துரையை ஊருக்கு அனுப்பிவைக்கிகிறார் நண்பர்.

1935 ஜுலை 6ல் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் அதிகாரபூர்வ பிரச்சார ஏடாக மலர்ந்த தமிழ் முரசு ஓராண்டு கழித்துச் சிறுகதைகளை ஏராளமாக வெளியிடத் தொடங்கியது. முரசின் முதல் கதையை எழுதியவர் ந. பழனிவேலு. 1936 ஜுலை 16ல் இடம்பெற்ற கதை செல்லம் அல்லது சிட்டு. முரசில் எல்லாமே சீர்திருத்த வாடைதான். தஞ்சாவூர்க் கதை அது. சிட்டு அரிஜனப் பெண். பக்தவத்சல நாயுடு வீட்டில் வேலை செய்கிறாள். நாயுடுவின் மகன் தீனதயாளுவும் சிட்டுவும் காதலிக்கின்றனர். தந்தைக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மகன் காதலியுடன் ஓட்டம் பிடிக்கிறான். நாயுடு மனம் மாறுகிறார். சீர்திருத்தத் தொண்டில் இறங்கிவிடுகிறார்.

ந.பழனிவேலுவை நன்கு அறிமுகப்படுத்தும் கதையான காதற்கிளியும் தியாகக் குயிலும் 1936 அக்டோபர் 31 தொடங்கி, நவம்பர் 17 வரை நான்கு வாரம் நீடித்தது. கதை பத்து அத்தியாயங்கள் ஓடியது. ஐந்து நீண்ட பாடல்களையும் கதையில் செருகிவிட்டார் ஆசிரியர். இவையும் போதாவென்று 24 வரிக் கவிதையுடன் கதை முடிகிறது. கதைக்கு ஆசிரியர் வரைந்துள்ள முகவுரை: ‘வலிமை பொருந்திய இரண்டு காதல்கள் ஒன்றோடொன்று மோதி, ஒளிவிடுவதை இக்கதையில் காணுங்கள். சமூக நலனுக்காகவும், தன் காதலனின் சுயநலத்துக்காகவும் தன் காதலையும் உயிரையும் அர்ப்பணம் செய்த உத்தமி விசாலாட்சியின் அற்புதத்தை இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.’

ந. பழனிவேலு, எம். ஆறுமுகம், மிஸ் த. இராஜம்மா, பி. எம். கண்ணன் முதலானோர் ஆரம்ப காலத்தில் முரசில் நிறைய கதை எழுதியவர்கள்.

இத்தருணத்தில், நூலுருப் பெற்ற முதல் நாவல், முதல் கதைத் தொகுதி எது என்பதை அறிந்துகொள்ள ஆவல் எழுவது இயல்பே.

சிறுகதையைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் வல்வை வே. சின்னையா பிள்ளை சிங்கப்பூரில் 1930ல் வெளியிட்ட நவரசகக் கதா மஞ்சரி : இவை இனிய கற்பிதக் கதைகள் என்ற தொகுதியே முதன்முதலில் வந்தது என்பதை என்னுடைய கட்டுரைகளிலும் மலேசியத் தமிழ்ச் சிறுகதை (1995) எனும் நூலிலும் ஏற்கனவே தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். ஐந்து கதைகள் அடங்கிய அந்தத் தொகுதிக்கு மதிப்புரை வழங்கியவர் முன்னேற்றம் பத்திராதிபர் கோ. சாரங்கபாணி. ‘....அன்பின் பெருமையையும், வீரத்தின் மாண்பையும், மெய்மையின் உயர்வையும், ஒழுக்கத்தின் சிறப்பையும், பொய்மையின் இழிவையும் மக்கட்குத் தெள்ளென உணர்த்தும் ஐந்து கதைகளை’ ஆசிரியர் இயற்றியிருப்பதாக மதிப்புரை தெரிவிக்கிறது. பலவகையான நீதிநெறிச் செய்யுள்கள் கதைகளின் இடையே தாராளமாகப் புகுத்தப்பட்டுள்ளன. அந்தத் தொகுப்பைப் பின்தள்ளக் கூடிய எதனையும் இதுவரை நான் காணவில்லை.

வே. சின்னையா 1936ல் தமிழணங்கு அல்லது இளநகைச் சிறுமி எனும் 40 பக்க நாவலையும் சிங்கப்பூரில் வெளியிட்டார். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னே கலிங்க தேசத்தை அரசாண்டு வந்த பிள்ளைப் பேறு இல்லாத மன்னன் வில்லவராயன் பற்றிய கதை அது என்கிறார். முழுதும் கற்பனைதான். நாவல்களில் நிறைய செய்யுள்கள் இடம்பெறுகின்றன. ஏற்கனவே நவரச கதா மஞ்சரியில் இடம்பெற்ற இரண்டு சிறுகதைகளையும் இந்த நாவல் நூலில் சேர்த்திருக்கிறார் சின்னையா.

நாவலைப் பொறுத்தவரை அநேக புதிய தகவல்களை அண்மையில் கண்டெடுத்தேன். ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
1904ல் நாகூர் தளவாய் சின்னவாப்பு மரைக்காயர் ஹுர்முஸ் கதை எனும் பெயரில் ஒரு வரலாற்று நெடுங்கதையை சிங்கப்பூரில் வெளியிட்டார். அலெக்சாண்டர் பேரரசரின் புதல்வர் ‎ ஹுர்முஸ் இளவரசர் கூஜான் தேசத்து அரசரின்‎ தவப்புத்திரி குல் இளவரசியைக் காதலித்து மணம் ‎புரிந்துகொள்வதற்குள் படும் துன்பங்களையும் சமாளிக்கும் சூழ்ச்சிகளையும் வீர தீர சாகசங்களையும் விவரிக்கும் கதை இது. 279 பக்கம் நீள்கிறது. இந்துஸ்தானியிலிருந்து மொழி பெயர்த்ததாக சின்னவாப்பு மரைக்காயர் தெரிவிக்கிறார். மொழிபெயர்ப்பு என்றாலும் தமிழ் இலக்கிய மணம் அற்புதமாகக் கமழ்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு என்பதால் இதனை இவ்வட்டாரத்தின் முதல் நாவல் எனக் கொள்ளமுடியாது.

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் 1879ல் வந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜி. ஸி. பெடால் எழுதிய Basket of Flowers என்ற ஜெர்மன் கதை புஷ்பக்கூடை எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. வேறு சில ஆங்கில நாவல்களும் இப்படி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றையெல்லாம் தமிழின் முதல் நாவலாகக் கருத இயலாது என்று சிட்டியும் சிவபாதசுந்தரமும் (தமிழ் நாவல் 1977) கூறுகின்றனர்.
நாகூர் சின்னவாப்பு மரைக்காயர் 1908 பிப்ரவரி மாதம் அற்புதவல்லி கதை நூலையும், மார்ச் மாதம் கஸ்ஸான் கன்னிகைச் சரித்திரம் எனும் நூலையும் வெளியிட்டார். தழுவல், மொழிபெயர்ப்பு வகையாதலால் இவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாமற் போகிறது.

சின்னவாப்பு மரைக்காயர் ஒரு சுறுசுறுப்பான எழுத்தாளர். மூன்று கதை நூல்களைப் படைத்ததுடன் இரண்டு பத்திரிகைகளையும் அவர் சிங்கப்பூரில் நடத்தியிருக்கிறார். 1904 அக்டோபர் 7ல் உதயமானது நூருல் இஸ்லாம் எனும் தினசரி. 1905 ஆகஸ்ட் 14ல் தோன்றியது றபீக்குல் இஸ்லாம் எனும் வார இதழ். இவை தவிர வெள்ளைக்காரக் கணவன் மனைவி இருவர் இஸ்லாமிய சமயத்துக்கு மாறியதை வருணிக்கும் பிஷாரத் பாத்திமா நூலை 1912 ஆகஸ்ட்டில் பினாங்கில் வெளியிட்டார். 64 பக்கப் புத்தகம் அது.

இவற்றைத் தாண்டி வந்தால் அசல் உள்ளூர்த் தமிழ் நாவலாக வருகிறது மீனாட்சி அல்லது மலாய்நாட்டு மங்கை. 1916ல் கிளாங்கில் பிரசுரமானது. இதனை எழுதியவர் பிரபல புத்தக வணிகரும் பத்திரிக்கை ஆசிரியரும் இலக்கியவாதியுமான கா. கந்தையா பிள்ளை. 312 பக்க நாவல் அது. அக்காலத்தில் அனைவரையும் கிறங்க வைத்துக் கொண்டிருந்த கிராமபோன் இசைத்தட்டுகளை 38, ரெம்பாவ் ஸ்திரீட், கிளாங் கடையில் விற்றவர் அவர். சொந்தப் பெயரையே கடைக்கும் வைத்துக்கொண்டார்.

1915 முதல் 1921 வரை வந்த இசைத்தட்டுப் பாடல்களைத் தொகுத்து நான்கு பகுதிகளாக சங்கீதத் திரட்டு எனும் தலைப்பில் வெளியிட்டார். மூன்று பாகங்கள் கிளங்கிலும் ஒரு பாகம் கோலாலம்பூரிலும் பிரசுரம் கண்டன. 245 பக்க மலாயாச் சரித்திரம் எனும் பாட நூலையும் 1937ல் வெளியிட்டார் கந்தையா பிள்ளை.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கிளாங்கிலிருந்து வெளியான சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன் எனும் பத்திரிகைக்குக் கடைசிக் கட்டத்தில் ஆசிரியராகவும் திகழ்ந்தார் எனத் தெரிகிறது. அப்பத்திரிகை 1907 வாக்கில் தொடங்கி, குறைந்த பட்சம் 1914 வரை நடந்திருக்கிறது.

ஆகவே, தற்போதைக்கு நமது நாவல் வரலாற்றைத் தொடங்கி வைப்பவள் மீனாட்சி அல்லது மலாய் நாட்டு மங்கை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 1916லிருந்து 1938 வரை, மலாயா சிங்கப்பூர் தொடர்பாக, குறைந்தது 25 நாவல்களாவது நூலுருவில் நம் கண்ணில் படுகின்றன. இவற்றை ஒழுங்காக ஆராய்வது மிகமிக அவசியம். ஏனெனில் நம்முடைய வாழ்வும் வரலாறும் பரம்பரையும் பாரம்பரியமும் அவற்றுள் ஒளிந்து கிடக்கின்றன.


(தமிழ் நேசன் சுதந்திரப் பொன் விழா மலர் 31 ஆகஸ்ட் 2007)