Showing posts with label g sarangapany. Show all posts
Showing posts with label g sarangapany. Show all posts

Wednesday, December 15, 2010

முருகு சுப்பிரமணியனும் தமிழ் முரசும் மலாயாச் சிறுகதை மன்னர்களும்



தமிழ் முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி மலாயாவில் தரமான சிறுகதை எழுத ஆளில்லை என்று நினைத்ததுடன் தரமான பத்திரிகை ஆசிரியர்கள் இல்லை என்றும் கருதியவர். 1940களிலும் 50களிலும் எல்லாப் பத்திரிகைகளும் தமிழ்நாட்டிலிருந்து ஓரளவு படித்துவிட்டுக் கப்பலேறிய இளைஞர்களையே ஆசிரிய, துணையாசிரியப் பொறுப்பில் அமர்த்தின. இங்கே வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்களைப் பத்திரிகைகள் இழுத்துக் கொண்டாலும் பத்திரிகைக்காகவே துணையாசிரியர்களை முதன்முறையாய் விசேஷமாகக் கொண்டுவந்தவர் தமிழ் நேசன் பத்திராதிபர் கே நரசிம்ம ஐயங்கார். 1936ல் சென்னையின் The Hindu நாளிதழில் தமிழ்நேசனுக்கு உதவியாசிரியர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து பை கி ஸ்ரீநிவாச ஐயங்காரையும் சா சுப்ரமணிய ஐயரையும் கொண்டு வந்தார்.

( நரசிம்ம ஐயங்கார் 4 பிப்ரவரி 1938ல் காலமான பிறகு நேசன் திசை தடுமாறியது. 1940ல் ஒரு வேலை நிறுத்தம். கே பி சுப்பையா, சா சுப்பிரமணிய ஐயர் போன்ற உதவியாசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்ததால் இருவரும் வெளியேற்றப்பட்டனர். அவ்விருவரும் தனியாகப் போய் 2 டிசம்பர் 1940ல் ஜனநாயகம் பத்திரிகையை ஆரம்பித்தனர். நேசனுக்கு ஒரு சரியான போட்டி அது. ஐயர்தான் ஆசிரியர். சண்டைக்குப் பிறகு ஜனநாயகம் மறுபடியும் வந்தது. அதனால் ஐயர் ஜெயமணி சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார். சோஷலிஸ்டுப் பாதையில் ஆர்வங் காட்டிய சுப்பிரமணியம் ஜப்பானியர் ஆட்சியின்போது 1942ல் ஹிட்லரின் சுயசரிதையான வீரன் ஹிட்லர் மேன் காம்ப் நூலைத் தமிழாக்கம் செய்தார். காகிதப் பஞ்ச காலத்தில் 272 பக்கங்களில் வெளியான நூல் அது. விழி பிதுங்கும் மொழிபெயர்ப்பு அது என்று ஜெர்மனி தமிழரசன் இனி இணைய இதழில் (டிசம்பர் 2005) ஈவிரக்கமின்றி சாடினார். ஆங்கிலேயரின் அலங்கோல ஆட்சி எனும் 84 பக்க நூலையும் ஜெயமணி சுப்பிரமணியம் 1942ல் கொண்டுவந்தார். அந்த நேரத்தில் ஜப்பானியர் மெச்சும் வகையில் ஆங்கிலேயரை வசைபாடிய சில நூல்களுள் அதுவும் ஒன்று. சண்டை முடிந்தபின் சா சுப்பிரமணியம் தமிழ்நாட்டுக்குத் திரும்பி கல்கியில் சேர்ந்துகொண்டார். கே பி சுப்பையா 1946ல் யுத்தத்தால் வந்த யுத்தம் எனும் நூலை வெளியிட்டார். முதலாம் உலகப் போரே இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்பது நூலின் சாரம். சண்டைக்கு முன் நடைபெற்ற ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும் அவர்களின் கோரிக்கைகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறையும் தொழிலாளர் மரணங்களும் சற்று விரிவாகத் தமிழில் இடம்பெறும் நூல் இது.)

ஸ்ரீநிவாச ஐயங்கார் சுதேசமித்திரன் ஏட்டில் பணியாற்றிவிட்டு சென்னையில் நடந்து கொண்டிருந்த டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்தார். கருமமே கண்ணாயினார் என்பதற்கு அவரைவிடச் சிறந்த உதாரண புருஷரைக் காட்ட முடியாது. (பைரோஜி நாராயணன், நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரின் தந்தையே அவர்.) பாரதி பிறந்த தினமான செப்டம்பர் 11ல் 1934ஆம் வருஷம், தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பதற்காகப் பத்திரிகை ஜாம்பவான் எஸ் சதானந்த் தொடங்கியது தினமணி நாளிதழ். தேசத் தியாகி தி சு சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியக் குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் சுப்பிரமணிய ஐயர். தமிழ் நேசன் 1937 பிப்ரவரி 20ல் நாளிதழாக வரவிருந்ததால் அனுபவம் மிக்க புதிய இளைஞர்களை இறக்குமதி செய்தார் நரசிம்ம ஐயங்கார்.

1951ல் கோ. சா முரசுக்காகக் கொண்டு வந்த வை திருநாவுக்கரசு திராவிடர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பூந்தோட்டம் என்ற மாத இதழை 1947ல் சொந்தமாக நடத்திவிட்டுப் பெரியாரின் விடுதலை பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்தபோதுதான் வி திருநாவுக்கரசு முரசுக்குக் கப்பலேறினார். அரசுக்குப் பிறகு ஒரு பெரிய அணி முரசுக்குப் படையெடுத்து முரசையும் வளர்த்து சிங்கப்பூர், மலாயா/மலேசியத் தமிழர் சமூக வாழ்க்கையில் அழுத்தமான முத்திரையும் பதித்தது. அப்படி முரசுக்கு வந்தவர்களுள் தி செல்வகணபதி, அ முருகையன், முருகு சுப்பிரமணியன் ஆகியோர் முக்கியமானவர்கள். கொஞ்ச காலம் சென்றபின் வி டி அரசு அரசாங்கத் தகவல் துறைக்கு மாறிவிட்டார். அ முருகையன் ரேடியோ சிங்கப்பூரின் தமிழ்ப் பகுதித் தலைவர் பணியை ஏற்றார். (சிங்கப்பூரில் 1949ல் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகத்தில், எட்டு ஆண்டு கழித்து 1957ல் இந்திய இயல் துறை அமைந்தபோது அதற்கு முதல் தலைவராக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட திராவிடப் பற்றாளர் இராசாக்கண்ணனாரின் மைத்துனர்தாம் முருகையன். வழக்கமாகத் துறைத் தலைவர் பதவிக்கு இன்றியமையாத Ph D பட்டம் இல்லாமல் M.A மட்டுமே வைத்திருந்தவர் இரசாக்கண்ணனார். அ. முருகையன் 1952 அல்லது 1953ல் முரசுக்கு வந்திருக்க வேண்டும்.)

1955ல் முரசுக்கு வந்தவர் முருகு சுப்பிரமணியன். அவரும் திராவிட இயக்கத்தில் ஊறிய இலக்கியவாதியே. 1924ல் செட்டி நாட்டுக் கோனாப்பட்டில் பிறந்தவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1940களில் செட்டிநாட்டுப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவுகள் ஆற்றி சுயமரியாதைக் கொள்கையையும் திராவிட உணர்வையும் பரப்பினார். அப்பகுதி இளைஞர்கள் மாதக் கணக்கில் அவரைத் தங்க வைத்தனர். பாரதிதாசன் நூல்களை அச்சிடவும் அவருடைய நாடகங்களை நடத்தவும் முத்தமிழ் நிலையம் எனும் அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். இதற்கு உந்துதலாகத் திகழ்ந்தவர் செட்டிக்குல இளங்குருதி முருகு சுப்பிரமணியன். இளந்தமிழன் கையெழுத்து இதழை நடத்தியதோடு தமிழ் இளைஞர் கழகம் என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார்.

பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பான பாரதிதாசன் கவிதைகள் முதற் தொகுதி புதுக்கோட்டை, இராமச்சந்திரபுரம், செந்தமிழ் நிலையத்தால் 1938ல் அச்சிடப்பட்டது. பாரதிதாசனின் வேறு சில நூல்களையும் செட்டிநாட்டு அன்பர்கள் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

(கானாடுகாத்தான் வை சு சண்முகம் செட்டியார் மகாகவி பாரதியாரை செட்டிநாட்டுக்கு அழைத்துவந்த செய்தி பலரும் அறிந்ததே. 1919 அக்டோபர் 28 முதல் ஒன்பது நாளும், 1920 ஜனவரி 6 முதல் 10 வரை நான்கு நாளும் பாரதியார் செட்டியார் மாளிகையில் தங்கியிருந்தார். கையில் தடியுடன் பாரதியாரைக் காட்டும் ஒரு படம் அப்போது எடுத்ததுதான். செட்டிநாட்டிலேயே தங்கிவிடும்படி சண்முகம் செட்டியார் மன்றாடியபோதும் பாரதியாரின் சூழ்நிலை அவரைத் தங்கவொட்டாமற் செய்துவிட்டது.)

(1952ல் தமிழ் நேசன் மலையாண்டி செட்டியார் வசம் இருந்தபோது புகழ்பெற்ற இரு பத்திரிகையாளர்களை அவர் கோலாலம்பூருக்குக் கொண்டு வந்தார். தமிழ்நாடு, தினமணி ஆகியவற்றில் பணிபுரிந்த ரா வேங்கடராஜுலு நாயுடு, படைப்பிலக்கிய எழுத்தாளர் கு அழகிரிசாமி ஆகியோரே அவர்கள். 1953 ஜுன் 2ல் நிகழ்ந்த எலிசபெத் அரசியாரின் முடிசூட்டு வைபவத்தில் கலந்துகொள்ள மலாயாப் பத்திரிகையாளர் அணியில் ஒருவராக லண்டனுக்குச் சென்று வந்தவர் நாயுடு. அழகிரிசாமி தம் ஐந்தாண்டு மலாயாப் பயணத்தில், சீதாலட்சுமி எனும் பிராமண மங்கையைக் குடும்ப எதிர்ப்பையும் மீறி நண்பர்களின் அயராத உதவியால் 1955ல் மணம் செய்துகொண்டவர்.)

தமிழ்ப் பத்திரிகை உலகில் முருகு சுப்பிரமணியனுக்கும் அவருடைய நெருங்கிய உறவினர் அரு பெரியண்ணனுக்கும் நிலையான இடம் உண்டு. பொன்னி ஆரம்பித்தபோது முருகுவுக்கு வயது 24. இருவரும் சேர்ந்து 1947 முதல் 1953 வரை நடத்திய பொன்னி மாத இதழ் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. புதுக்கோட்டையில் தொடங்கிய இதழ் சென்னைக்கு இடம் மாறிப் பிரகாசமாக நடைபெற்று ஓய்வு எடுத்துக்கொண்டது. அதன்பிறகே முருகு சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார். பெரியண்ணன் திராவிடப் பற்றில் கைக்காசை எல்லாம் இழந்து மு கருணாநிதி நடத்திய முரசொலியின் நிர்வாகத்தில் பங்கேற்றார்.

பொன்னி அன்று இளைஞரிடம் கொடிகட்டிப் பறந்த திராவிடவேட்கைக்கு வடிகால் அமைத்துக் கொடுத்த சஞ்சிகை. திராவிட இயக்கத்துக்கென ஒரு தரமான இதழ் இல்லாதிருந்த குறையைப் பொன்னி நீக்கியது. திராவிடத் தலைவர்களும் தொண்டர்களும் கதை, கட்டுரை, கவிதை என்று அதில் நிறைய எழுதினர். இயக்கத்தைச் சாராதவர்களும்கூட பொன்னிக்கு ஆதரவு தெரிவித்தனர். வண்ணமயமான அட்டைப்படத்துடன் வந்து அனைவரையும் கவர்ந்தது பொன்னி. முதல் இதழில் எங்கெங்கோ ஊறிச் செழிக்கும் கருத்துகளை அவை தமிழர்க்கும் ஆக்கம் தருபவையானால் தேடிக்கொணர்ந்து தமிழர்க்குப் படைப்பாள் பொன்னி. தமிழ் நெஞ்சம் வளமாகும் வகையில் அவள் எண்ண ஓடை பாயும் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு வெளிவந்தது பொன்னி.

பொன்னியின் மிகச் சிறந்த இலக்கியப் பணியாக அமைந்தது பாரதிதாசன் பரம்பரை என்ற கவிஞர் அறிமுக வரிசை. 1947 பிப்ரவரி முதல் 1949 அக்டோபர் வரை நீடித்தது அந்தத் தொடர். மு. அண்ணாமலை தொடங்கி நாரா நாச்சியப்பன், சுரதா, முடியரசன், வாணிதாசன், கோவை இளஞ்சேரன், புத்தனேரி சுப்பிரமணியன், குலோத்துங்கன் (வா. செ. குழந்தைசாமி), நாஞ்சில் மனோகரன், பெரி சிவனடியான், சுப்பு ஆறுமுகம் போன்ற 48 கவிஞர்களை அப்புதுமைத் தொடர் அடையாளம் காட்டியது.

பொன்னி : பாரதிதாசன் பரம்பரை எனும் தலைப்பில் 48 கவிஞர்களின் பாடல்களையும் அவர்களின் திறனையும் வாழ்க்கைக் குறிப்புகளையும் சேர்த்து ஆய்வு நூலாக்கியுள்ளார் மு இளங்கோவன். 2003ல் வந்ததது அந்நூல். மணிக்கொடி எழுத்தாளர்கள் போல பொன்னிக் கவிஞர்கள் என்ற அடைமொழி பிறந்தது.

2004ல் பொன்னி ஆசிரிய உரைகள் நூலையும் வெளியிட்டார் மு இளங்கோவன். இந்தி எதிர்ப்பு, வடநாட்டு ஆதிக்கம், பெரியார் மணியம்மை திருமணம், திமுக தொடக்கம் போன்ற 98 தலையங்கங்ளைக் கொண்டு திராவிட இயக்கத்தின் ஆவணமாகப் பரிணமித்தது இந்நூல். முருகு, பெரியண்ணன் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

சென்னையில் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பெ. தூரன் தலைமையில் பேசிய அண்ணாதுரையின் பேச்சைப் புதுக்கோட்டை தாய்நாடு ஜனவரி, பிப்ரவரி 1947 இதழ்களில் பாராட்டி எழுதினார் அப்பத்திரிகையில் பணியாற்றிய கண்ணதாசன்.

அண்ணாதுரையின் பேச்சை வெளியிட்ட பிறகு ‘அவனுக்கு (கண்ணதாசனுக்கு) புதுக்கோட்டையில் சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அப்போது ‘பொன்னி’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த தோழர் முருகு சுப்பிரமணியன் அவர்களும் தோழர் பெரியண்ணன் அவர்களும் அவனுக்கு வாய்த்த இனிய நண்பர்களாவார்கள். பெரியாரை அவர்கள் கடவுளாகக் கொண்டாடியவர்கள். அண்ணாதுரையை உயிருக்குயிராய் நேசித்தவர்கள். திராவிடர் கழகத்தை ஆதரிக்கும் ஏடுகள் மிகக் குறைவாக இருந்த காலம். அவையும் அழகில்லாமல் அச்சுப்பிழை மிகுந்து வெளிவந்தன. அந்த நேரத்தில் வண்ண முகப்பு அட்டை போட்டு அழகாக நடந்த இதழ் ‘பொன்னி’ ஒன்றுதான். பத்திரிகைத் துறையில் மற்றவர்கள் செய்து காட்டாத புதுமை எல்லாம் அவர்கள் செய்து காட்டினார்கள். இன்றும் தமிழகத்தில் சிலரை அச்சுக்கலை நிபுணர்கள் என்று தேர்ந்தெடுத்தால் அவர்களில் பெரியண்ணன் மிக முக்கியமாக இருப்பார். ‘பொன்னி’யின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் குழந்தை உள்ளமும் குளிர்ந்த சுபாவமும் கொண்டவர். ‘தாய்நாடு’ இதழ் கட்டுரையைப் பற்றி அவனிடம் வெகுவாகப் பாராட்டினார். …. அப்போது ‘பொன்னி’ இதழில் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற பெயரில் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தினார். அந்தப் பகுதிக்கு அவனும் ஒரு கவிதை எழுதினான். நான்காவது நாள் அந்தக் கவிதை அவனுக்கே திரும்பி வந்தது. கூடவே கீழ்க்கண்டவாறு ஓர் இணைப்புக் கடிதமும் இருந்தது. “அன்புள்ள நண்பருக்கு, கதையனுப்பும்படி கேட்டிருந்தேன். கவிதை அனுப்பியுள்ளீர்கள். தயவு செய்து கதையே அனுப்பினால் நலம். அன்பன் முருகு சுப்பிரமணியன் தன் கவிதைக்குக் கிடைத்த மரியாதை அவனை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த அதிர்ச்சிதான் கவிதை எழுதுவதில் அதிக ஆசையை அவனுக்கு உண்டாக்கிற்று. அதற்குப் பிறகு அவன் எவ்வளவோ கவிதைகள் எழுதினான். ஆனால் ‘பொன்னி’ மட்டும் ஒரு கவிதையைக் கூட வெளியிடவில்லை.’

(கண்ணதாசன். வனவாசம். 1965 பக் 72)

பொன்னிக்கு முன் குமரன் இதழில் முருகு ஆசிரியராய் இருந்தபோது கண்ணதாசனின் இரண்டு கதைகளை வெளியிட்டார். தாய்நாடு இதழில் அண்ணாவின் பேச்சை எழுதியபோது கண்ணதாசனுக்கு வயது 19. முருகுவைவிட மூன்று வயது இளையவர் கண்ணதாசன். மலாயாவுக்கு வந்து சேர்ந்த கந்தசாமி வாத்தியார் ஆகிய சுப நாராயணனும் சென்னை எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டோரில் ஒருவர். எருமைக்கடா வாகனக் கதையை அண்ணா சொன்னது இந்த மாநாட்டில்தான். அந்தப் பகுதியைக் கண்ணதாசன் எனும் நிருபர் இப்படித்தான் report பண்ணியிருந்தார்.

“அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே (அன்னிய நாட்டிலே). கம்பராமாயணமும் கந்தபுராணமும் இங்கே. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை. (கைத்தட்டல்). ஆக்கவும் அழிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்திருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல. இவை இரண்டும் வேண்டுமா வேண்டாமா என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுப்புறத்தான் ஒருவனை கூப்பிட்டுக் கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? தெரியாது. நமது பிரதம மந்திரி யார்? தெரியாது. இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது? தெரியாது. முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்? தெரியாது. எமனுக்கு வாகனம் என்ன? எருமைக்கடா! (பலத்த கைத்தட்டல்) இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம். கர்னாடிக் மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள். அயோத்தியில் தசரதன் மாளிகையைப் பற்றி அல்ல, ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள். அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள். (கைத்தட்டல்).

31 வயதில் சிங்கப்பூருக்குக் கப்பலேறிய முருகு சுப்பிரமணியன் இங்கு செல்வாக்குடன் இருந்தார். 1950களில் கதைப்போட்டிகளின் மூலம் இளையரிடத்திலும், தமிழர் திருநாள் மூலம் பொதுமக்களிடமும், தமிழர் சீர்திருத்த சங்க நடவடிக்கைகள் மூலம் பகுத்தறிவாதிகளிடமும் முரசு புகழோடும் பெருமையோடும் இருந்த காலம் அது. சீர்திருத்த சங்கத்தின் செயலாளராகவும் முருகு இருந்திருக்கிறார். வானொலியில் இலக்கிய உரைகள் ஆற்றினார். அவை பிறகு நூலுருவம் பெற்றன.

முருகு முரசுக்கு வந்த கையோடு 1955ல் நான்கு சிறுகதைகள் எழுதினார். அக்டோபர் 23ல் அன்னையின் சோகம்.

‘கணவனை இழந்த தங்கம்மாள் தன் மகனை மிகவும் செல்லமாக வளர்க்கிறாள். ஒரு நாள் அவனுக்கு வயிற்றில் வலி ஏற்படவே தங்கம்மாள் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லாமல் அவன் இறந்து விடுகிறான். தன்னுடைய மகனைப் பறிகொடுத்த அந்த அன்னையின் சோகம் அங்கிருக்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.’

நவம்பர் 20ல் சின்னப்பயல்.

‘பேரன் சின்னப்பயல் பாண்டியனைக் காணவில்லை என்று குருசாமியிடம் மீனாட்சி கூறுகிறாள். உடனே, அவனைத் தேடிச் செல்லும் குருசாமி, கையில் மிட்டாயுடன் ஓடிவந்து தன் அண்ணன் செல்வத்துடன் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கிறான். முன்பு ஒருமுறை அவனுடைய அன்பு, தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இருந்த மனக்கசப்பைப் போக்கியதை நினைத்துக் கொள்கிறான். சின்னப்பயல் பாண்டியனின் பெரிய மனத்தை நினைத்துக் குருசாமிக்கு அவன் மீது அளவற்ற கருணை பிறக்கிறது.’

நவம்பர் 27ல் காதல் கதை.

‘கல்யாணமான புதிதில் சரோஜா தன் கணவனிடம் அவன் முன்னாள் காதலைப் பற்றிக் கேட்கிறாள். அப்படி எதுவும் நடக்காததால் அவன் கதையொன்றைக் கூறுகிறான். தன்னுடன் படித்த சக மாணவி அறிவில் சிறந்தவள் என்றும் இருவரும் அவ்வப்போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறும் அவன், ஒரு முறை அவள் மீது அவன் கரம் பட்டதும் பளிங்கு மாளிகையாக அவள் முகம் மாறிவிட்டது என்றும் கூறுகிறான். அதைக் கேட்டதும் அவன் கூறிய கதையை நம்பாத அவன் மனைவிக்கு அவனைப்பற்றிய சந்தேகமும் நீங்குகிறது.’

டிசம்பர் 11ல் புயல்.

‘வேதாரண்யப் புயலால் விளைந்த அழிவைப் பற்றியும் அதில் சிக்கி இறந்த எண்ணற்ற மக்களைப் பற்றியும் அண்ணன், தன் தம்பிக்குக் கடிதம் வாயிலாக விவரிப்பதை இக்கதை சித்திரிக்கிறது.’

(கதைச் சுருக்கம் இடம்பெற்ற நூல் தேசிய நூலகம் வெளியிட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936 – 1960, தொகுதி 1)

கதைச்சுருக்கத்தை மட்டும் வைத்துக் கதைகளின் சிறப்பை உய்த்துணர இயலாது. கதைச்சுருக்கமோ கதைப்பின்னலோ ஏறத்தாழ ஓர் எலும்புக்கூட்டுக்குச் சமம். அந்தக் கூடு எப்படி சதையும் ரத்தமும் ஆகி உயிருள்ள உடம்பாக மாறுகிறது என்பதே வித்தை. கதைச்சுருக்கத்தின் மூலம் புலப்படக்கூடிய முருகு சுப்பிரமணியத்தின் கதைகள் எப்படி அமைந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

முருகு எனும் பெயரில் கதை எழுதிய அ. முருகையன் 1953 மார்ச் 29 முதல் 1955 அக்டோபர் 30 வரை இருபது சிறுகதைகளைப் படைத்துள்ளார். (இக்கட்டுரையில் நான் முருகு என்று குறிப்பிடுவதெல்லாம் முருகு சுப்பிரமணியனையே சுட்டும்.)

முரசில் சிறுகதைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஒரு கட்டத்தில் முருகு சுப்பிரமணியனைச் சார்ந்திருந்தது. கதைகளை எல்லாம் கருத்தூன்றிப் படித்துப் பார்த்த அவர் 1958 மார்ச் 9 முரசு ஞாயிறு மலரில் மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் எனும் தலைப்பில் ஒரு பக்கத்தில் அடங்குமாறு கட்டுரை ஒன்றை வரைந்தார்.

மலாயா வளர்க்கும் சிறுகதை மன்னர்கள் கட்டுரை: முருகு சுப்பிரமணியன் ( 9 மார்ச் 1958 )

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் சிறுகதைகளைப் பற்றி ஒரு விமரிசனக் கட்டுரை எழுத வேண்டுமென நீண்ட நாளாக எண்ணியதுண்டு. அந்த எண்ணம் இப்பொழுதுதான் நிறைவேறுகிறது.

இளம் எழுத்தாளர்களிடம் எனக்குத் தனி அன்பு உண்டு. நான் அவர்களை அநுதாபக் கண்ணோடு நோக்குகிறேன். பெருமைக்காக இவ்வாறு சொல்லிக் கொள்ளவில்லை. பல ‘பெரிய’ எழுத்தாளர்கள் இளம் எழுத்தாளர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்கள் எழுதுவதெல்லாம் ‘குப்பை’ என்பது அந்தப் பெரியவர்களின் கருத்து. இன்னும் சிலருக்கு மறுமலர்ச்சி இலக்கியம் என்றாலே வேப்பங்காய். ‘வள்ளுவனும் கம்பனும் வளர்த்த தமிழை மேலும் வளர்க்க இந்தப் பொடியர்கள் யார்? இவர்களுக்கு என்ன தெரியும்? குறளில் ஒரு வரிக்கு உறைபோடக் காணுமா இவர்களின் எழுத்து?’ என்று பேசும் மெத்தப் படித்தவர்களும் உண்டு. அவர்களுக்குச் சொந்தச் சாகுபடி செய்யத் தெரியாது. யாராவது சங்க இலக்கியமோ தொல்காப்பியமோ இயற்றி வைத்திருந்தால் அதனைப் படித்து உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ‘மனநிறைவு’ கொண்டவர்கள். தமிழ் இலக்கிய வளர்ச்சி கம்பனோடும் சேக்கிழாரோடும் நிலைகுத்தி விட்டதென்பது அவர்களின் அசைக்க முடியாத முடிவு.

இவர்களைப் போல வள்ளுவனும் கம்பனும் எண்ணியிருந்தால் நமக்கு உலகம் போற்றும் திருக்குறளோ, தமிழ்க்கடலான இராமகாதையோ கிடைத்திருக்குமா? புதிதாக ஆக்கவேண்டும் என்னும் துடிப்பு, மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. அந்தத் துடிப்பை மட்டந்தட்டி வீணாக்குவது இலக்கியம் பேண விரும்புகிறவர்களின் பொறுப்புள்ள செயலாகாது.

திருத்த வேண்டும் இளம் எழுத்தாளர்களிடமும் மறுமலச்சி எழுத்தாளர்களிடமும் எவ்வளவோ குறைகள் உண்டு. அக்குறைகளை எடுத்துக் காட்டித் திருத்த வேண்டுமேயொழிய அவர்களைத் தலைதூக்கவிடாமல் அழுத்திவிடக் கூடாது. அவர்களில் பலர் தமிழ்க்கொலை செய்கிறார்கள் என்பது உண்மையே. அந்தக் கொலைகளை எடுத்துக் காட்டி வன்மையாகக் கண்டிப்பது தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத பணி என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயத்தில் அந்த எழுத்தாளர்களிடம் உள்ள படைப்பாற்றலையும் கலையுணர்வையும் எழுத்துத் திறனையும் போற்றி ஊக்குவதும் அவசியமாகும்.

இளம் எழுத்தாளர்களிடம் நான் ‘அனுதாபம்’ காட்டுவதற்கு முதன்மையான காரணம் இதுதான்.

இளம் எழுத்தாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எழுதுவது ‘குப்பை’ என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நூற்றில் ஒருவர் மணியான எழுத்தாளராக எதிர்காலத்தில் வரக்கூடும். குப்பையில் குன்றிமணியாக விளங்கும் அந்த ஒருவரைக் கண்டுபிடித்துக் கைதூக்கிவிடுவது, இளம் எழுத்தாளர்களை ஊக்கினால்தான் நிறைவேறும். இன்று புகழ் படைத்த எழுத்தாளர்களாகத் திகழும் எல்லா எழுத்தாளர்களுமே ஒரு காலத்தில் பத்திரிகை ஆசிரியர்களின் ‘தயவை’ எதிர்பார்த்து ஏங்கிய இளம் எழுத்தாளர்களே. இந்த உண்மையை நினைவிற்கொண்டால் புதிய எழுத்தாளர்களைப் புறக்கணிப்பதில் உள்ள ‘இழப்பை’ப் புரிந்து கொள்ள முடியும்.

மலாயாவில் புதிய எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரிடமே உண்மையான எழுத்தாற்றல் இருக்கிறது. அவர்களிடமும் சுட்டிக்காட்டக்கூடிய குறைகள் இருப்பினும், நான் முன்பு கூறிய படைப்பாற்றலை அவர்களிடம் காண முடிகிறது. பெயர்களைக் குறிப்பிட்டால் பொறாமையும் எரிச்சலும் ஏற்படலாமாதலால், பொதுப்படையாகவே குறை நிறைகளைக் கூற விரும்புகிறேன்.

பெருக வேண்டும் மலாயாவில் தமிழில் எழுதுகின்றவர்களின் தொகை பெருகவேண்டுமென்னும் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் நான் இங்கே சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்பது திண்ணம்.

மலாயாவில் இளம் எழுத்தாளர்கள் எழுதும் பெரும்பாலான கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. காதல் கதைகள் எழுதுவது பாவமான காரியமென்று நான் சொல்லமாட்டேன். எனினும் காதல் இல்லாமல் கதை எழுத முடியாதென்று நினைப்பது தவறு. காதலைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது என்பது உண்மையே. ஆனால் இங்கு எழுதுகிற புதியவர்கள் காதலையே கசக்க வைத்து விட்டார்கள். ஆகவே ஒரு சில ஆண்டுகளுக்காவது காதல் கதைகள் எழுதுவதில்லை என்று நம் எழுத்தாளர்கள் விரதம் பூண்டால் நன்மையாக இருக்கும்.

கைம்பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைப்பது சிறந்த சீர்திருத்தப் பணி. ஆனால் கதைகளில் திரும்பத் திரும்ப விதவைகளின் குமுறலையும் வேதனையையும் அளந்து கொண்டிருப்பது அவசியமா? கைம்பெண் மணத்தை வற்புறுத்தி கதை எழுதுவது பழைய பாணி.

அந்தப் பழைய பாணியிலும் மெருகேற்றிப் புதுமை மிளிரச் செய்வதற்குப் பெருந் திறமை வேண்டும். இளம் எழுத்தாளர்களிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. ஆகவே விதவைகளின் வேதனையைத் தீட்டுவதைச் சிறிது காலம்வரை இளம் எழுத்தாளர்கள் நிறுத்தி வைத்தால் நல்லது.

‘வழுக்கி விழுந்தவள்’ ‘வாழத் தெரியாதவள்’ ‘ஏமாந்தவள்’ – இப்படிச் சில கதைகள். பெண்களிடையே ‘ஒழுக்கக் குறைவு’ எங்கோ எப்பொழுதோ ஏற்படுகிறது. தமிழ்ப் பெண்கள் கற்பைக் காப்பதில் மிக விழிப்பாயுள்ளவர்கள். எளிதில் அவர்கள் வழுக்கி விழுந்து விடுவதில்லை. ஆனால் நம் இளம் எழுத்தாளர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும் யார்க்கும் ‘தமிழ்ப் பெண்கள் எல்லாருமே ஒழுக்கங் கெட்டவர்களோ’ என்று எண்ணவே தோன்றும். பெண்கள் வழுக்கி விழும் சூழ்நிலை அசாதாரணமானது. அதனைக் கையாண்டு சிறுகதை தீட்டுவது கூரிய வாளின் மீது நடப்பது போன்றது. ஆகவே இளம் எழுத்தாளர்கள் ‘விபசாரக்’ கதைகளை எழுதாமல் இருப்பதே மேல்.

விசித்திரக் காதல் மற்றும் சிலர் தமிழ்க் குலத்திற்கே அருவருப்பான சில ‘விசித்திர காதல் முடிச்சு’க்களைத் தங்கள் கதைகளில் நடமாடவிடுகிறார்கள். தாய்க்கும் மகனுக்கும் சரசம் – மாமனாருக்கும் மருமகளுக்கும் நட்பு – அப்பாவுக்கும் மகளுக்கும் உறவு – இப்படிக் கதைகளைக் கற்பனை பண்ணுவது மன்னிக்கமுடியாத குற்றம். இந்தக் கதைகளால் தமிழும் வளராது. எழுத்தாளர்களும் வளர முடியாது. அருவருப்பூட்டும் இத்தகைய ‘அபார’ கற்பனைகளை அள்ளி விடுபவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கே பெருந் தீமை விளைவிக்கிறார்கள். இத்தகைய ‘விசித்திரக் காதல்’ கதைகளை இளம் எழுத்தாளர்கள் எழுதவே கூடாது.

சிறுகதை சமுதாயத்தைப் படம் பிடிப்பதாக இருக்க வேண்டும். மனித உணர்ச்சிகளுக்கு அது உருவம் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்த லட்சியங்களைப் படிப்பவர் உள்ளத்தில் எழுப்ப வேண்டும். மக்களின் சிந்தனையைத் தெளிவடையச் செய்வதையே எழுத்தாளர்கள் நோக்கமாகக் கொள்ள வேண்டும். சிந்தனையைக் குழப்பும் அருவருக்கத்தக்க ஆபாசக் கதைகளைப் புதிய எழுத்தாளர்கள் மறந்தும் எழுதக்கூடாது.

பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரே மாதிரி நடையினையே கையாளுகிறார்கள். ‘அவள் கண்கள் குளமாகின’ என்று சொல்வது ஒரு சமயம் புதுமையாக இருந்தது. இப்போது அது படித்துப் படித்துப் புளித்துப் போய்விட்டது. எழுதும் நடையில், கையாளும் சொற்களில் புதுமை மிளிர வேண்டும். கதை சொல்லும் போக்கிலும் புதுமை காண வேண்டும். புதுமை எழுத்துத் துறைக்கு உயிர் நாடி.

ஒரு முக்கிய எச்சரிக்கை நம் எழுத்தாளர்களுக்கு மற்றொரு யோசனையையும் கூற விரும்புகிறேன். ஏதோ சில பத்திரிகைகளை மட்டும் படித்துவிட்டு எழுத்தாளராகி விடமுடியாது. தேர்ந்தெடுத்த நல்ல நூல்களை நீங்கள் நிறையப் படிக்க வேண்டும். புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் நூல்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். வேற்று மொழி தெரிந்தவர்கள் அம்மொழிகளில் உள்ள சிறுகதை இலக்கியங்களைப் படிக்க வேண்டும். நூறு நல்ல சிறுகதைகள் படித்தீர்களானால் நீங்கள் ஒரு நல்ல கதையை எழுத முடியும். தமிழ் இலக்கியங்களை முறையாகப் பயில வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் தமிழ் நடை வளம் பெறும். சொல்லுக்குப் பஞ்சம் ஏற்படாது.

கடைசியாக ஒரு எச்சரிக்கை. மலாயாவில் பலர் காப்பியடிப்பதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைகளின் பழம் பிரதிகளிலிருந்து அப்படியே எழுத்துக்கு எழுத்து பெயர்த்து எழுதித் தங்கள் பெயரைச் சூட்டிப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். கதைகள் சில சமயம் பத்திரிகைகளிலும் வெளிவந்து விடுகின்றன. ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பது பழமொழி. ஒரு முறை அகப்பட்டுக் கொண்டால் போதும், இந்தக் களவாணிகள் மறுபடி தலைதூக்கவே முடியாது. இளம் எழுத்தாளரிடையே உள்ள ‘நச்சு மரங்கள்’ இவர்கள். இந்தத் திருடர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொடுப்பது வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் தலையாய கடமையாகும்.

1950களில்தான் பலரும் பத்திரிகை படிக்கக்கூடிய பழக்கம் ஓரளவு நிலைபெற்றது. இந்தப் பத்திரிகைகளே இளையர் கூட்டத்தின் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. பத்திரிகையின் பக்கங்களைக் காசு கொடுக்காமல் நிரப்ப முடியும் என்பதைப் பத்திரிகாசிரியர்கள் நன்கு கண்டுகொண்டனர். காசு கொடுத்தால்தானே தரம் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்து கதையை வாங்கிப் போட முடியும். எழுதுவோரும் இதை நம்பி பிழைப்பு நடத்தப் போவதில்லை. சற்றுப் பேரும் புகழும் வந்தால் போதும் என்றுதான் எல்லாருமே எழுதினர். ஏனோ தானோ என்று எழுதப்படும் எழுத்து அது. ஒரு seriousness கிடையாது. எந்தக் கலையையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அது பதராகத்தான் மிதக்கும். கலை பயிற்சியினால் உருவாவது. கடும் பயிற்சிக்குத் தடையாக இருப்பது எழுத்தாளர்களின் சோம்பேறித்தனம். பல நூல்களை வாங்க இயலாத வறுமைத்தனத்தையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். எனவே 1950களிலிருந்து இன்றைய காலம் வரை எழுத்தாளர்கள் பயிற்சி பெறும் மேடைதான் பத்திரிகைகள். அவ்வப்போது சில பரிசுகள் கொடுத்து எழுத்தாளரின் மனக்குறையைச் சிலர் தீர்த்துக் கொண்டனர். இன்று பத்திரிகைகள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனவே. இப்போதாவது எழுத்துக்குக் காசு கொடுக்கக் கூடாதா? காசு இல்லாமல் எழுத மாட்டோம் என்று அடித்துச் சொல்லும் திராணியும், நன்றாகவே சம்பாதிக்கும் எழுத்தாளருக்கு இன்று கூடக் கிடையாது. ஏனெனில் அந்த எழுத்தாளரின் படைப்பு சுமார் என்பது அவருக்கே தெரியும். மட்டச் சரக்கை எப்படி விற்க முடியும்?

கதைகளின் தரம் தாழ்ந்து கிடப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் ‘நீளம்’. மூன்று பத்திக்குமேல் கதை அனுப்பாதே என்று சாரங்கபாணி கட்டளை இட்ட வண்ணம் இருப்பார். மூன்று பத்தியில் சுமார் ஐந்நூறு வார்த்தைகளில் எப்படி உன்னதமான ஒரு சிறுகதையை எழுத முடியும்? பத்திரிகைக் கதைகள் படுமோசமாக இருப்பதற்கு இந்த இரண்டு காரணங்களையும் களைய வேண்டும். ஆனால் விசித்திரமாக அதே இரண்டு காரணங்கள் இன்றைக்கும் மலேசிய சிங்கப்பூர்ப் பத்திரிகைகளை ஆட்டி அலைக்கழிக்கின்றன.

மூன்றாவது காரணமாக, ஓழுங்கான விமர்சனப் போக்கு இல்லாத குறையைக் கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும். ரசனை இல்லாதபோது எப்படி விமர்சனம் பிறக்கும்? விமர்சனத்தின் விளைவு ரசனையா? ரசனையின் விளைவு விமர்சனமா? இன்றைய சூழலில் சிறுகதைக்கே தேவை இல்லாமல் போய்விட்டது. ஆகவே இணையத்தில்தான் கைவரிசையைக் காட்டவேண்டும்.

முருகு சுப்பிரமணியன் தமிழ் நேசனுக்குப் போனதும் பத்திரிகையில் இடம்பெறும் எல்லாப் படைப்புகளுக்கும் காசு கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். சிறுகதைக்கு ஐந்து வெள்ளி வழங்கியது நேசன். அதை எழுத்தாளருக்கு அனுப்பிவைக்க அதைவிட அதிகமாகக்கூடச் செலவு பிடிக்கும் சில நேரங்களில். ஆகவே அந்தத் திட்டம் தானாகவே கைநழுவிப் போனது. பெரிய தொகை என்றால் பிரச்னை இல்லை. அந்த நாளும் எந்த நாளோ?

1960ல் தமிழ் முரசில் கதை எழுதிப் பரிசு வாங்கியபோது முருகு சுப்பிரமணியன் அழைத்து அவர் தங்கியிருந்த 63 Buffalo Road முகவரிக்குப் போனபோது அவர், பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்ற சொன்னதை இராம கண்ணபிரான் நினைவுகூர்ந்தார். அதன் விவரம் கீழே:

http://balabaskaran24.blogspot.com/search?updated-min=2009-01-01T00:00:00%2B08:00&updated-max=2010-01-01T00:00:00%2B08:00&max-results=5

1961ல் தமிழ் நேசனுக்கு ஒரு சோதனை நேரம். அதற்குக் காரணமாக இருந்தவர் துணையாசிரியர் கனகசுந்தரமும் சுயேச்சை நிருபர் கா. அண்ணாமலையும். கு. அழகிரிசாமிக்குப் பிறகு கே. சி. அருண் என்பவர் நேசனுக்கு 1957ல் ஆசிரியராக வந்தார். அருண் சிங்கப்பூர் ஸ்டாண்டர்டில் உதவியாசிரியராவும் ராய்ட்டர் நிருபராகவும் இருந்த பிறகு அப்பத்திரிகை மூடப்பட்டபின் நேசனுக்கு மாறினார். தமிழ்ப் பத்திரிகையில் மாதம் ஆயிரம் வெள்ளி வாங்கிய முதல் ஆசிரியர் அருண். 1961ல் நேசனைப் பினாங்கு ரெங்கசாமி பிள்ளையிடம் ஒரு லட்சம் வெள்ளிக்கு விற்க உரிமையாளர் மலையாண்டி செட்டியார் ஏற்பாடெல்லாம் செய்துவிட்டார். ரெங்கசாமி பிள்ளையோ கோ சாரங்கபாணியின் மிக நெருங்கிய நண்பர். கோ. சா நிர்ப்பந்தம் கொடுக்கவே ரெங்கசாமி நேசனை வாங்காமல் விட்டுவிட்டார். நேசனின் எதிர்காலத்தில் ஐயம் கொண்ட அருண் மலாயாக் கூட்டரசு தகவல் துறையின் உயர் அதிகாரி வேலை கிடைத்தபோது அதற்குத் தாவினார். புதிய ஆசிரியர் நியமிக்கப்படும் வரை கனகசுந்தரம் தலையங்கம் எழுதும் பொறுப்பை ஏற்றார். கா. அண்ணாமலை அடிக்கடி நேசனுக்கு வந்து போவார். கனகசுந்தரமும் அவரும் நெருங்கிய தோழர்கள். ஒரு நாள் தன்னிடம் exclusive செய்தி இருப்பதாகக் கனகசுந்தரத்திடம் கூறினார் அண்ணாமலை. இருவரும் மேல்மாடிக்குப் போய் செய்தியை எழுதிக் கொண்டு வந்து பத்திரிகையில் (12 அக்டோபர் 1961) போட்டுவிட்டனர். ‘ சோஷலிச முன்னணி தடை செய்யப்படும் – அரசாங்கம் முடிவு ’ என்னும் தலைப்புடன் செய்தி வந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சோஷலிச முன்னணி. அன்றைய தினமே பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் செய்தியை மறுத்தார். ஆதாரமற்ற செய்தி வந்ததைக் கண்டித்தார். அதோடு அதைக் கடுமையாகவும் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுதான் மலையாண்டி செட்டியாரின் மகன் நாகப்பன் சிங்கப்பூருக்குச் சென்று முருகு சுப்பிரமணியத்க் கண்டு பேசி அவரை நேசனுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

(வே. விவேகானந்தன். நினைவுச் சுவடியில் சில ஏடுகள். தமிழ் நேசன் 70ஆம் ஆண்டு நிறைவு மலர். 1994)

(பிரதமர் துங்கு அன்றைய தினமே செய்தியை மறுத்ததாக விவேகானந்தன் எழுதியிருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் மலாயாத் தகவல் சேவை இயக்குநர் மொகமட் சோப்பி-யின் பெயரில்தான் அன்றிரவு அறிக்கை வெளியானது. நேசன் வெளியிட்ட செய்தி ஆதாரமற்ற பொய்த்தகவல் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது. அரசாங்கத்தின் மீது வெறுப்பும், ஏளனமும், அவநம்பிக்கையும் உண்டாக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்ட குறும்புத்தனமான செய்தி அது என்று அரசாங்க அறிக்கை வருணித்தது. நேசன் பிரசுரித்த பொய்யான தகவல் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் விசாரணைக்குப் பின் நேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.)

முருகு சுப்பிரமணியன் நேசனின் ஆசிரியப் பொறுப்பை 1961 கடைசியிலோ 1962 ஆரம்பத்திலோ ஏற்றுக்கொண்டிருக்கலாம். முருகு சேர்ந்ததுடன் கனகசுந்தரம் வானொலிக்குச் செல்லவே அவருடைய இடத்தில் விவேகானந்தன் துணையாசிரியராக அமர்ந்தார். விவேகனின் நியமனத்துக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய பள்ளித் தோழரும் நேசனின் துணையாசிரியருமான எம் துரைராஜ். கொஞ்ச நாளில் கனகசுந்தரம் மலாயா வானொலியிலிருந்து சிங்கப்பூர் வானொலிக்கு வந்து சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டுகள் வானொலி தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகளைக் கண்காணித்து ஓய்வு பெற்றபின் 1983 அல்லது 1984ல் தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று காலமானார் கனகு என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த கனகசுந்தரம். திருவாரூரில் படித்த கனகசுந்தரம் மு கருணாநிதியின் பள்ளித் தோழர்.

1963 செப்டம்பரில் மலேசியா உதயம். அப்போது தமிழ் முரசு இல்லை. ஊதிய உயர்வு கேட்டுப் பத்திரிகையை அச்சடித்த ஸ்டார் பிரஸ் ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் முரசு 13 ஜுலை 1963 முதல் 10 ஜுலை 1964 வரை வெளியாகவில்லை. மலேசிய உதயத்தின்போது அரசாங்கத்தின் எண்ணத்தைத் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்ல பத்திரிகை இல்லையே என்ற கவலை மக்கள் செயல் கட்சிக்கு. முரசு சமரசம் காண்பதற்குப் பிடிவாதமாய் மறுத்துவிட்டது. அதோடு, ‘தொழிற்சங்கத்தின் விடாப்பிடித் தனத்தையும் அதன் பொறுப்பற்ற போக்கையும்’ சகிக்க முடியாமல் அச்சகத்தைத் தன்னிச்சையாக மூடிவிடுவதாக நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஊழியர் தரப்பும் முதலாளி தரப்பும் சேர்ந்து பஞ்சாயத்து மன்றத்துக்குப் போகலாம் என்று, ம செ க சட்டமன்ற உறுப்பினர் ஜி கந்தசாமி, தேசியத் தொழிற் சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் சி வி தேவன் நாயர் ஆகியோர் தெரிவித்த யோசனைக்கும் முரசு நிர்வாகம் இணங்கவில்லை. கடைசியாகத் தொழிலாளர் அமைச்சர் Jek Yuen Thong பஞ்சாயத்து மன்றத்துக்குப் போக இருதரப்புக்கும் ஆணையிட வேண்டிய கட்டாயம் உண்டானது. வழக்கு நிர்வாகத்துக்கு சாதகமாக முடிந்தது. முரசிலிருந்து வெளியேறிய தி செல்வகணபதி வெளியார் ஆதரவுடன் தமிழ் மலர் நாளிதழை 1 மார்ச் 1964ல் தொடங்கினார்.

தமிழ் முரசு ஓராண்டு கழித்து மீண்டும் தலைதூக்கியபோதிலும் முன்னிருந்த பொலிவை இழந்து பரிதாபமாகத் தென்பட்டது. கோ சாரங்கபாணியும் (1903 – 1974) காலமாகவே, முரசு நாற்பதாண்டுகளாகக் கட்டிக் காத்துப் பேணி வந்த நோக்கத்தையும் கொள்கையையும் பறிகொடுத்துவிட்டு சமுதாயத்துடன் ஒட்டி வாழ முடியாமல் தத்தளிக்கத் தொடங்கியது.

முரசு இல்லாத காரணத்தால் தமிழ் நேசன் கிடுகிடுவென்று வளர்ந்தது. முருகுவும் வாழ்க்கையில், சமூகத்தில் உயர்ந்தார். இருந்தபோதும் கசப்பான சூழ்நிலையில் அவர் நேசனை விட்டு 1976ல் விலகிக் கொள்ள நேர்ந்தது துர்அதிர்ஷ்டமே. உடல் நலம் குன்றி 1982 ஏப்ரல் 10ஆம் நாள் முருகு காலமானார். 1924 அக்டோபர் 7ஆம் தேதி பிறந்தவர் முருகு சுப்பிரமணியன். ஒரு கால் நூற்றாண்டுக் காலம் சிங்கப்பூர் மலேசியாவில் முதல்தரப் பத்திரிகையாளராகப் பெயர் பதித்ததே அவருடைய திறமைக்குச் சான்று. #


Thursday, December 9, 2010

கந்தசாமி வாத்தியார் ஆகிய சுப நாராயணனும் மலாயாத் தமிழ் எழுத்தாளர்களும்


எழுத்தாளர்களுக்குக் கதைகளின் உத்தி முறையை எடுத்துக் காட்ட இரண்டு நாராயணர்களும் 1950-1951ல் தமிழ் நேசனில் ஏழெட்டு மாதத்திற்கு நடத்தியது கதை வகுப்பு. பெயர்தான் கதை வகுப்பே தவிர கதையோடு மற்ற எல்லா இலக்கிய வடிவங்களும் வகுப்பில் பேசப்பட்டன. வகுப்பை நடத்தியவர் 37 வயது சுப நாராயணன் ஆகிய கந்தசாமி வாத்தியார். அவருக்குத் துணையாக இருந்தவர் 19 வயது பைரோஜி நாராயணன் ஆகிய வானம்பாடி.

தமிழ்நாட்டின் சக்தி இதழில் பணியாற்றிவிட்டு சிங்கப்பூர்-மலாயாவுக்கு வந்தவர் சுபநா. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களான தி ஜ ர, புதுமைப்பித்தன், ரகுநாதன், மஞ்சேரி ஈஸ்வரன், வல்லிக்கண்ணன், லா ச ரா, தேவநேயப் பாவாணர், மு வரதராசன் முதலானோருடன் நேரில் உறவு கொண்டாடியவர் அவர்.

சிங்கப்பூர் வானொலியில் தமிழ்ச் செய்தி வாசித்திருக்கிறார். கோலாலம்பூர் போய் போலீஸ் இலாக்காவில் எழுத்தராகப் பல ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்றவர். சக்தி போன்ற ஒரு சஞ்சிகையில் பணியாற்றுவதற்குரிய ஆற்றல் படைத்தவர். எழுத்துத் துறையில் அனுபவம் வாய்ந்தவர். படைப்பாளி என்பதைவிடவும் ஒரு திறமையான விமர்சகர். தமிழ்நாட்டில் ஆரியப் புல்லுருவி, மதம்பிடித்த மடாதிபதிகள், சீனமும் சீன மக்களும், வாழப்பிறந்தோம் என்ற கட்டுரை நூல்களும், கவிதை, கலை, விமர்சனம் என்ற விமர்சன நூலும், கற்பளித்த கன்னி என்ற நாவலும் அவர் எழுதி வெளிவந்தன. இங்கு வந்த பின்னர் பேசத் தெரியுமா, எண்ணமும் எழுத்தும் என்ற நூல்களைக் கொண்டு வந்தார். 1945ல் வெளிவந்த ஜனநாயகம் நாளிதழில் எண்ணச் சுழலில் எனும் தலைப்பில் செய்திகள் பற்றி விமர்சனம் செய்தார். தைப்பிங்கில் மா செ மாயதேவன் அக்டோபர் 1955ல் கையெழுத்துப் பிரதியாக ஆரம்பித்து ஜுன் 1956ல் அச்சிட்டு வெளிப்படுத்திய திருமுகம் மாத இதழில் மீனாவின் கல்யாணம் நாடகத்தைத் தொடராக எழுதினார்.

வானொலிக்கு நாடகங்கள் அனுப்பியிருக்கிறார். வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக் குறை நிறைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒலிக்கலையில் ஓராண்டு என்ற பெயரில் 1960களின் முற்பகுதியில் வானொலி நடவடிக்கைகளின் ஓராண்டுக் கண்ணோட்டத் தொகுப்பு நிகழ்ச்சி மலேசிய வானொலியில் ஒலியேறிய நேரம். நான் அதை ஒரு முறை தயாரித்தேன். தமிழ் நிகழ்ச்சிகள் அப்போது மத்திம அலை வரிசையிலும் சிற்றலையிலும் போகும். பிற்பகலில் மூன்று மணிக்குப் பிறகும் இரவில் ஏழரை மணிக்குப் பிறகும் சிற்றலையில் மட்டுமே ஒலிபரப்பு. சரியாகக் கேட்க முடியாது. ஒரே ‘கரா முரா” ரீங்காரந்தான். தமிழுக்குக் கிடைத்த மரியாதை அது. ஒரு விடுமுறை தினத்தில் பிற்பகலில் மூன்று மணிக்கு என்று நினைக்கிறேன், ஒலிக்கலையில் ஓராண்டு நிகழ்சசிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஒரு பயலும் அதைக் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. விசையைத் திருப்பி சரியான மீட்டருக்குக் கொண்டு வந்து நிறுத்தி ஆஹா தமிழ் வந்துவிட்டதே என்று சந்தோஷப்பட்டு ரேடியோவை விட்டுக் கொஞ்சம் விலகினால் போதும். மறுபடியும் கரா முரா விவகாரந்தான். ஒலிபரப்பு கேட்கமுடியவில்லை என்ற புகார்க் கடிதங்கள் நிறைய வந்துகொணிடிருந்தன. அப்படியிருந்தும் தமிழ் ஒலிபரப்பை அரை குறையாகக் கேட்டு ரசித்தனர் தமிழ் மக்கள் ! தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சி மேற்பார்வையாளர் மொஹமட் ஹனீப். அவர்தான் நிகழ்ச்சிப் பட்டியலைத் தயாரிப்பார். அது ஒன்றுதான் அவருடைய வேலை. மத்திம அலைக்கு என் நிகழ்ச்சியை மாற்றிவிடுங்களேன் என்றேன். மத்திம அலை ஒலிபரப்பு நேரம் குறைவு. அதுவும் என் நிகழ்ச்சி ஓரு மணி நேரம். அவ்வளவு நேரம் மத்திம அலையில் தர முடியாது என்று மாற்றிவிட மறுத்துவிட்டார். மனக்குறையோடு அவருடைய அறையைவிட்டு வெளியே வந்தேன். ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக உயிரைவிட்டுத் தயாரிக்க வேண்டும். எதைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பது என் பாணி. உருப்படாத spot என்பதற்காக அலட்சியம் செய்யவில்லை. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அற்புதமாகச் செய்து முடித்தேன். எனக்குப் பரம திருப்தி. நிகழ்ச்சியும் ஒலியேறிவிட்டது. சில நாள் கழித்து எனக்கு அலுவலகத்தில் போன் வந்தது. மறுமுனையில் சுப நாராயணன். ‘உன் programme-மை BBCயிலே போடலாம். போ’ என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு மிகக் குறைவாகவே பேசியபின் போனை வைத்துவிட்டார். என்னுடைய ஆத்ம திருப்திக்காக நான் ரசித்துத் தயாரித்த நிகழ்ச்சி அது. மோதிரக் கையால் குட்டா அல்லது வசிஷ்டர் வாயால் பிரமரிஷி பட்டமா?

கவர்ச்சியான பரிசுத்தொகை கொண்ட ஆங்கில நாவல் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறார் சுபநா. மொத்தமே மூன்று பேர்தான் அதற்கு எழுதினர் என்று நினைக்கிறேன்.

கதை வகுப்பு முடிந்துவிட்டதால் மறுபடியும் அதைப்போன்று ஒரு வகுப்பு தமிழ் முரசில் நடத்தவேண்டும் என்ற அரிப்பு கந்தசாமி வாத்தியாரின் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்துள்ளது. பேரா மாகாணத் தோட்டத் தொழிலாளர் சங்கம் 25 டிசம்பர் 1951ல், பண்டிட் எஸ் முத்துசாமி, பண்டிட் கிருஷ்ணதாசன் ஆகியோரை முறையே ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் கொண்டு, ஈப்போவில் தொடங்கிய நாகரிகம் மாத ஏட்டில் அந்த அரிப்பைக் கொட்டியிருக்கிறார் சுபநா. மார்ச் 1952 இதழில் வந்த செய்தி.

மலாயாத் தமிழ் எழுத்தாளர்கட்கு ! உங்களுக்கு ரசிக்கத் தெரியுமா? இதோ அழைக்கிறார் -- கோலாலம்பூர் கந்தசாமி வாத்தியார் ரசிக்க வாரீரோ.

‘மலாயாத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கூட்டுவது சம்பந்தமாக முரசுக்கு எழுதுங்கள். இதற்கிடையில் ரசனை வகுப்பு ஒன்றை முரசில் தொடங்கி நடத்த எனக்கு ஆசை. அதைச் செய்தால் நீங்கள் வகுப்புக்கு ஆஜராகிப் பணி புரிவீர்களா? முரசில் பதில் தாருங்கள்’ என்று வாத்தியார் எழுதினார். கோ சாரங்கபாணியையும் அவருடைய முரசையும் பலபடப் பாராட்டி அவருக்கே கடிதம் அனுப்பினார் வாத்தியார். அதற்குக் கோ சா, ‘பொருத்தமில்லாமல் இருக்கிறது. முரசு எளியவன் பத்திரிகை. இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் அருகனல்ல. நேர் நடையில் விண்ணப்பமாக எழுதியனுப்பினால் தக்கபடி பிரசுரிக்கிறேன்’ என்று மரியாதையுடன் பதில் போட்டார்.

அதன் பிறகுதான் தமிழ் முரசில் 19 ஏப்ரல் 1952 முதல் 28 ஜுன் 1952 வரை ரசனை வகுப்பு தொடங்கினார் சுபநா. கந்தசாமி வாத்தியார் எனும் பெயரிலேயே அதை நடத்தினார். அவருக்குத் துணையாக இருந்தவர் தும்பி எனும் புனைபெயரில் பறந்துகொண்டிருந்த வை திருநாவுக்கரசு. மேற்பார்வை முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி. கதை வகுப்புப் பாணிதான் அது. ஆயினும் போனியாகவில்லை. அண்ணாதுரை அறிஞரா என்ற சர்ச்சை எழுந்தது. வாசகர்கள் அறிஞரே என்று எழுதி விலாசித்தள்ளி விட்டனர். ‘அறிஞர்-மேதை அண்ணாத்துரையின் பக்தர்களுக்கு அடிபணிய வேண்டிய நல்ல காலம் வேறு வந்துவிட்டது. மலைக்காதீர்கள் தம்பி, தங்கைகளே! இந்தப் பிள்ளையாண்டான்கள் கொடுத்த சம்மட்டி அடியில் என் வழுக்கை மண்டை டாராகப் பொளந்து போய் ரத்தம் பீறிட்டு விட்டது. ரத்தம் வழிந்து கண்ணாடியை மறைத்தாலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் உமிழ்ந்துருட்டிவிட்ட கண்ணீரால் கறை விலகி, ஆழ்ந்து தற்சோதனை, படிப்பாராய்வு செய்ய உந்துதல் கிளர்ந்து கொப்பளித்தது. (அண்ணாவின் நூல்களைப் படித்து அவர் மேதையே என்பதை ஒப்புக்கொண்டார்.) வாத்தியாருக்குப் பாடம் கற்பித்த தம்பிகளுக்கு என் – ஆம் பளா பளாவோ !!!’ என்று எழுதிவிட்டு விலகிக் கொண்டார்.

வேறு யாரும் ரசனை வகுப்பை நடத்த முன்வரவில்லை. ஒன்பதாவது வாரத்துடன் அதை முடித்துவிட்டார் கோ சா. அதற்கு மறுவாரத்திலேயே 6-7-1952ல், முரசின் பதினெட்டாம் ஆண்டு ஆரம்பத்தில், எழுத்தாளர் பேரவை தொடங்கியது. சுபநா பதினேழு பதினெட்டு வயதில் எழுதிய மனிதனும் பாம்பும் என்ற மொழிபெயர்ப்புக் கதையை கோ சா 1929ல் தொடங்கப்பட்ட முன்னேற்றம் இதழில் ஏற்கனவே திருத்திப் போட்டிருக்கிறார்.

முரசில் 1951-1952ல் இடம்பெற்ற புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சையின்போது அவர் ஒரு மேதையே என்று வாதிட்ட கந்தசாமி வாத்தியார் இப்படித்தான் தன் கட்டுரையை ஆரம்பித்தார்.

புதுமைப்பித்தன் மேதையா? ஆம் அவர் மேதைதான்.

விபரீத ஆசை (புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை) ஆபாசமானதா? இல்லை. அது தூய்மையான அருமையான சிறுகதைக் காவியம்.

புதுமைப்பித்தனை வெற்றிகரமாகத் தாக்கி வருகிற அன்பர் சபாபதி படித்தவரா? ஆம், அவர் படித்தவர்தான்.

புதுமைப்பித்தனுக்கு வக்காலத்து பேசும் அன்பர்கள் ரசிகர்களா? ஆம், அவர்கள் ரசிக்கத் தெரிந்தவர்கள்தான்.

இந்த மாதிரியான வாக்குவாதம் நல்லதா? ஆம், நல்லதே. விஷயத்தை விளக்க இது தேவைதான்.

தமிழ் முரசு ஆசிரியர் இதில் பங்கெடுத்துக் கொள்வாரா? ஆம். உரிய காலத்தில் கருத்துரைக்கத்தான் செய்வார்.

மேதைகளை எல்லோராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது? எல்லோராலும் ரசிக்க முடியும்; சிலரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஏன் இப்படி? பக்குவப்படி; விளக்க முடியுமா? ஆம், முடியும்.

கேளுங்கள் சொல்கிறேன்.

இப்படி செல்கிறது வாத்தியாரின் விமர்சனம்.

(எம் எஸ் ஸ்ரீலட்சுமி. புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951 – 1952. 2006. பக் 115-6.)

1955ல் கோலாலம்பூரில் தமிழ்க் கலைமன்றத்தாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு 1956 சங்கமணி மே தின மலரில் (பக் 34-36) கந்தசாமி வாத்தியார் மலாயாத் தமிழ் எழுத்தாளர் என்று ஒரு கட்டுரை வரைந்தார். (சுப நாராயணனுக்கும் பைரோஜி நாராயணனுக்கும் மாநாட்டுக்கு அழைப்பில்லை.) சங்கமணி வார ஏடு கோலாலம்பூரில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் குரலாக ஒரு மே தினத்தில் 1 மே 1952ல் தொடங்கியது. ஆசிரியர் பைரோஜி எஸ் நாராயணன். அப்போது அவருக்கு வயது 21. தொழிற்சங்கப் பத்திரிகையாக இருந்தாலும் கலை இலக்கிய இதழாக அது பவனி வந்தது. பைரோஜி 24ஆம் வயதில் 9 டிசம்பர் 1955ல் திருச்சியில் திருமணம் செய்துகொண்ட படம் 27 டிசம்பர் 1955ல் சங்கமணியில் வந்துள்ளது. கவிஞர் கா பெருமாள் அதில் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அவருடைய துயரப்பாதை நாவலும் சங்கமணியில்தான் 1958ல் தொடராக வந்தது.

மலாயாத் தமிழ் எழுத்தாளர் (கந்தசாமி வாத்தியார்)

மலாயாவிலுள்ள ஏழரை லட்சம் இந்தியரில் ஆறு லட்சத்துக்கு மேற்பட்டவர் தமிழர். உலகத் தமிழர் நான்கு கோடிக்கு மேற்பட்டவர். வெளியகத் தமிழர் முப்பது லட்சமிருப்பர். தமிழகத் தமிழர் நான்கு கோடியிருப்பர்.

இது பிழைக்க வந்த நாடு. உலகமெங்கும் பள்ளி, பத்திரிகை, ரேடியோ, சினிமாவில் தமிழ் சீர் குன்றி வருகிறது. தமிழகத்தின் தமிழ் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. மலாயாவில் தமிழ் ஓரளவு வாழ்வது மலாயாத் தமிழ் எழுத்தாளரிடமே.

மலாயாவில் தமிழ் எழுத்தாளர் இல்லையென்ற கருத்துப்பட முன்னாள் தமிழ் நேசன் ஆசிரியர் ஆதி நாகப்பன் 1949 வாக்கில் தலையங்கமெழுதினார். அவர் லண்டன் சென்ற பிறகு நானும் வானம்பாடியுஞ் சேர்ந்து 1950-51ல் எழுத்தாளர் வகுப்பு நடத்தி மணியான எழுத்தாளர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். வகுப்புத் தொடங்கிய பொழுது தமிழ் முரசு தலையங்கமெழுதி (7 ஜனவரி 1951), மலாயாவில் எழுத்தாளர் இல்லையென்ற கருத்துப்பட நையாண்டி செய்தது.

எழுத்தாளர் மாநாடு கூட்ட அன்று முயன்றது கைகூடவில்லை. அப்பொழுது தட்டிக் கழித்த தமிழ் முரசு ஆசிரியர் கோ சாரங்கபாணி 1955ல் கோலாலம்பூரில் நடந்த எழுத்தாளர் மாநாட்டிற் கலந்து கொண்டார். மாநாட்டில் தலைமையுரையாற்றிய சி வீ குப்புசாமி தமிழ் நேசன், கந்தசாமி வாத்தியார், வானம்பாடியின் தொண்டை மறைத்தார். மாநாட்டுப் பேச்சளார் சிலர் நினைவுபடுத்திப் பேசிய பேச்சுக்களைத் தமிழ் முரசு மறைத்தது.

மறைப்பவர், மறப்பவர், மறுப்பவர் சிலர் இன்னும் இருந்து வந்தாலும் மலாயாவில் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர் மிகப் பலர் உள்ளனர் என்பது உண்மையாகும்.

சுங்ஙய் சிப்புட் அ இராமனாதன் (இப்பொழுது ஈப்போவில்), தஞ்சமாலிம் கிருஷ்ணதாசன், காஜாங் சி மாரியப்பன் மூவரும் மேதை எழுத்தாளராகத் தேறியவராவர். பரீட்சை எழுதியவர் 72 பேர் என ஞாபகம். 30 பேர் போற்சிறந்த எழுத்தாளராகத் தேறினர். 20 பேர் போல் நல்ல எழுத்தாளராகவும் மீதிப் பேர் ஆர்வ எழுத்தாளராகவுந் தேறினர். இப்பொழுது அனைவரும் படி உயர்ந்திருக்கின்றனர்.

சிறந்த எழுத்தாளராகத் தேறிய ஒருவர், தமிழ் சரிவர எழுதத் தெரியாத மலையாள அறிஞர் – கிருஷ்ணன் நாயர், நாட்டுப்புறம்.

விஷய அறிவும் விஷயத்தை வேண்டியபடி எழுதத் தெரிகிற அறிவுமே மிக முக்கியமாம். எழுத்து, இலக்கணப் பிழையிராமலிருப்பது நல்லதுதான். தமிழ்நாட்டுப் ப்ரபலப் பெரும் எழுத்தாளர் பலரிடம் விஷய, எழுத்து, இலக்கணப் பிழைகள் நிறையவிருக்கின்றன.

எலிசபெத் அரசியாரது முடிசூட்டு விழாப்பற்றி முன்னாள் தமிழ் நேசன் ஆசிரியர் ரா வேங்கடராஜுலு லண்டனிலிருந்து எழுதி மலாயாத் தமிழ்ப் பத்ரிகைகளில் வெளிவந்த கட்டுரை உயர்தரமானதன்று. இந்நாள் தமிழ் நேசன் ஆசிரியரென்று கருதப்படுகிற கு அழகிரிசாமி மேற்படி முடிசூட்டு விழாவைச் சிறப்பிக்க எழுதி ரேடியோவில் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அசல் நாடகமன்று, சிறப்புடையதன்று. ‘கைப்பாடை’, ‘கணவனைச் சாகக் கொடுத்த விதவை மகுடாபிஷேகஞ் செய்துகொள்வது’ என்ற அமங்கலச் சொல்லையுங் கருத்தையும் முறையே மேற்கண்ட எழுத்தாளர்கள் கையாண்டிருந்தது மிகவும் வருந்தத்தக்கதாம். இவ்விருவரும் மலாயாத் தமிழ் எழுத்தாளரைக் கூசாமற் குறைகூறி வந்தனர். முன்னாள் ஆசிரியர் தமிழகத்துக்குத் திரும்பியுள்ளார். இந்நாள் ஆசிரியர் இன்னும் இங்கிருக்கிறார். உள்ளூரார்மேற் குறை காணும் இத்தகையவர்க்குத் தமது குறைபாடுகள் தெரியாமலிரா. மமதையில் மூடி மறைக்கிறார்கள். இருவர்க்கும் பத்ரிகைத் தொழில் சரிவரத் தெரியாது, மொழிபெயர்க்கச் சரியாய் வராது, செறிவாக எழுத வராது, கவிதை மாற்றறியத் தெரியாது.

நம் நாட்டின் திறமை மிக்க எழுத்தாளர் பெயர்களை இதோ பாருங்கள். ஞாபகம் வந்தவரைதான் சொல்லுகிறேன். எனக்குத் தெரிந்தவரைதான் சொல்லுகிறேன். சில பேர் மாதிரி, எல்லாந் தெரிந்ததாகப் பாவனை பண்ணவில்லை. பெயரையடுத்துப் பிறைக் குறிக்குள் அவரவரது தனித்துறைத் திறமைகளைக் குறிக்கிறேன். வரிசைக் கிரமம் பார்க்காதீர்கள். ஞாபகத்துக்கு வந்தபடி சொல்கிறேன். குறிக்கத் தவறிய பலருள்ளனர்:-

1. அ. இராமனாதன், தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர், ஈப்போ (தமிழ்ப் புலவர், கட்டுரை, பாடப் புத்தகம் எழுத வல்லவர், சிறந்த சொற்பொழிவாளர்)

2. கிருஷ்ணதாசன் என்ற பண்டிட் ஆறுமுகம், தஞ்சமாலிம் (கவிதை, கட்டுரை,கதை, நாவல்)

3. சி. மாரியப்பன், தமிழாசிரியர், காஜாங் (மேற்படி போல்)

4. சி. கோன், கோலாலம்பூர், ஓவியர், தமிழாசிரியர் (கதை, நாவல், நாடகம், ஓவியம்)

5. மா. செ. மாயதேவன், ஆசிரியர் திருமுகம், போண்டோக் தஞ்சம், தைப்பிங் (கட்டுரை, கதை, பத்திரிகைத் தொழில்)

6. மா. ராமையா, எண்டாவ், மெர்ஸிங் (கதை, கவிதை, கட்டுரை)

7. சி. வடிவேல், தமிழாசிரியர், கோல சிலாங்கூர் (கதை, கட்டுரை)

8. சிவசுப்பிரமணியம், தமிழாசிரியர், தம்பின் (கவிதை, கட்டுரை)

9. ந. கரீம், பினாங்கு (கட்டுரை, கவிதை)

10. கலைதாசன், பினாங்கு (நாடகம், கட்டுரை)

11. புதுமைதாசன், சிங்கய் (கதை)

12. ர. வெற்றிவேல் (கட்டுரை, கதை, பத்திரிகைத் தொழில்)

13. நிமரன் என்ற ரமணி, மனோகரன் ஆசிரியர், சிங்கய் (கதை, கட்டுரை)

14. ஷண்முகம், மனோகரனில், சிங்கய் (கட்டுரை)

15. சை. சு. முஹ்தீன், ஆசிரியர் மலாயா நண்பன், சிங்கய் (தலையங்கம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, அரபு கற்றவர்)

16. எச். ஏ. ரஹீம், மலாயா நண்பனில், சிங்கய் (கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு)

17. செ. குணசேகர், கோலாலம்பூர் (கதை)

18. மு. அப்துல் லத்தீப், ஆசிரியர் மாணவர் பூங்கா, கோலாலம்பூர் (பத்திரிகைத் தொழில், கட்டுரை, கதை)

19. ந. பழனிவேல், ரேடியோ மலாயா, சிங்கய் (கதை, கட்டுரை)

20. ரத்னமணி, மேற்படி, சிங்கய் (கட்டுரை, மொழிபெயர்ப்பு)

21. ராமையா, மேற்படி, மேற்படி, (கதை, கட்டுரை)

22. மெ. திருநாவுக்கரசு, மேற்படி, மேற்படி, (தமிழ்ப் புலவர், கட்டுரை, பாட நூல்)

23. கமலா துரை, மேற்படி, மேற்படி (கட்டுரை)

24. ஹனீப், மேற்படி, பினாங்கு (கட்டுரை, மொழி பெயர்ப்பு, கல்வி)

25. வி. ரோச், ரிடிஃப்யூஷன், கோலாலும்பூர் (கட்டுரை, மொழி பெயர்ப்பு)

26. பைரோஜி ஸ்ரீ நாராயணன், ஆசிரியர் சங்கமணி, கோலாலும்பூர் (கட்டுரை, கவிதை, கதை, நாடகம், பத்ரிகைத் தொழில், தலையங்கம்)

27. தி. சு. சண்முகம், செய்தி ஆசிரியர், மேற்படி, மேற்படி (கட்டுரை, கவிதை, கதை, மொழி பெயர்ப்பு, தலையங்கம், பத்ரிகைத் தொழில்)

28. தங்கக்காளீஸ்வரன், சங்கமணி (கட்டுரை, பேச்சாளர்)

29. கோ. சாரங்கபாணி, ஆசிரியர் தமிழ் முரசு, சிங்கை (கட்டுரை, தலையங்கம், மொழிபெயர்ப்பு, பத்ரிகைத் தொழில், பேச்சாளர்)

30. வை. திருநாவுக்கரசு, உதவி ஆசிரியர், மேற்படி (கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

31. முருகு சுப்பிரமணியன், மேற்படி (கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

32. அ. முருகையன், மேற்படி (கதை, கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

33. மெ. சிதம்பரம், மேற்படி (தமிழ்ப் புலவர், கட்டுரை, பத்ரிகைத் தொழில், மொழிபெயர்ப்பு)

34. சி. வீ. குப்புசாமி, கோலாலும்பூர் (கட்டுரை, மொழிபெயர்ப்பு, பத்ரிகைத் தொழில்)

35. கு. அழகிரிசாமி, தமிழ் நேசன் ஆசிரியர், கோலாலும்பூர் (தமிழ்ப் புலவர், கட்டுரை, கதை, கவிதை, நாடகம்)

36. சு. நடராஜன், தமிழ் நேசன் மானேஜர், மேற்படி (கட்டுரை, பேச்சாளர், மொழிபெயர்ப்பு)

37. புலவர் சேதுராமன், தமிழ் நேசன் மேற்படி (தமிழ்ப் புலவர், கட்டுரை, பேச்சாளர்)

38. சு. நாராயணன் (கந்தசாமி வாத்தியார்), கோலாலும்பூர் (தமிழ்ப் புலவர், கட்டுரை, கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, பத்ரிகைத் தொழில்)

39. வ. சோதிலிங்கம், கோலாலம்பூர் (கட்டுரை)

40. அ. கி. அறிவானந்தன், மூவாறு (கதை, கட்டுரை)

41. சோமசன்மா, மூவாறு (கவிதை, கட்டுரை)

42. கா. அண்ணாமலை, கோலாலும்பூர் (கட்டுரை, பத்திரிகை நிருபம்)

43. ராஜ இளவழகன், மேற்படி (கட்டுரை, கதை)

44. கா. பெருமாள், மேற்படி, (கவிதை, கட்டுரை, கதை)

45. பனைக்குளம் மு அப்துல் மஜீது, பினாங்கு (கட்டுரை, கவிதை, தமிழ்ப் புலவர்)

46. மா. மரகதம், தமிழாசிரியை, தைப்பிங் (கட்டுரை, கல்வி)

47. போ. பெரியசாமிப் பண்டிதர், தமிழ் முரசு, சிங்கய் (தமிழ்ப் புலவர், கட்டுரை, கல்வி)

48. மா. பொன்னுசாமி, தஞ்சரம்புத்தான், தமிழாசிரியர் (கட்டுரை, கவிதை, கல்வி)

49. மு. ராமசாமி செட்டியார், ஈப்போ (தமிழ்ப் புலவர், கட்டுரை)

50. சுப. மருதப்பன், துரோலோ (கதை, கட்டுரை)

51. சி. ஆர். நரசிம்மராஜ், கோலாலும்பூர், ஆங்கில ஆசிரியர் (கட்டுரை, பேச்சாளர், நாடகம்)

52. தமிழாசிரியர் பொன்னையா, ஈப்போ (கதை, கட்டுரை, கல்வி)

53. கனகசுந்தரம், சேவிகா ஆசிரியர் (பத்ரிகைத் தொழில், கட்டுரை, மொழிபெயர்ப்பு)

சிங்லன் (கட்டுரை, கதை), லோகநாதன், ரா நாகய்யன், கவிஞர் முகிலன், சிவராமன், பெ மு இளம்பருதி, நாயர், எஸ் வேலுசாமி, ச மா வாசகம் ….. மற்றும் பெயர் தெரியாத மேலும் 50 பேர்.

மேற்கண்ட நூற்றொருவருஞ் சேர்ந்து முயன்றால் இவரை வெல்லத் தமிழ் நாட்டில் ஆள் (எந்த ஆளும் !) இல்லையென்று உத்தரவாதமளிக்கிறேன். இதைப் பார்க்கும் தமிழ் நாட்டார் எங்களுடன் எத்துறையிலும் போட்டிக்கு வரலாம். மலைநாட்டுத் தமிழ் மேலானது என்று நிரூபிக்க முடியும் – நிரூபித்திருக்கிறோம்.

நம் பத்ரிகைகளும் தமிழ் நாட்டுப் பத்ரிகைகள்போல் எழுத்தாளருக்குத் தம்மாலியன்ற வெளியீட்டுக் கைம்மாறு அளிக்க வேண்டும். பிழைப்புத் தரும் நாட்டில் வாழ்வு நடத்தத் தீர்மானித்து வாழ்வு சுவைக்க எழுதுவோமாக. மே தினம் நமக்கு மேன்மை தருமாக.

பேசுவது போலவே எழுதவேண்டும் என்பது வாத்தியாரின் விருப்பம். அதன் விளைவுதான் சிங்கய், பத்ரிகை. 1954ல் வெளியிட்ட பேசத் தெரியுமா நூலின் சாரம் இதுதான். கன்தஸாமி வாத்தியார் என்றே தம் பெயரை அதில் போட்டிருந்தார்.

தமிழ்நாட்டை எத்துறையிலும் வெல்ல முடியும் என்பது அபத்தமானது இல்லையா? காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது எவ்வளவுதான் உண்மை என்றாலும் வாத்தியார் மிகைப்பட வீறாப்புடன் கூறுவதை ஜீரணிப்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே கஷ்டம்.

கந்தசாமி வாத்தியார் நையாண்டி செய்த தமிழ் முரசின் தலையங்கம் 7 ஜனவரி 1951 ஞாயிற்றுக்கிழமை வந்தது. எதிரொலி என்ற தலையங்கப் பகுதியில் மூன்றாவது விஷயமாக இடம்பெற்றது ‘சிறுகதைகள்’ துணைத் தலையங்கம். அது கூறுவது இதுதான்:

“ சிறுகதைகள் ”

தமிழ் முரசு ஞாயிறு பதிப்பில் வாரந்தோறும் சிறுகதைகள் பிரசுரிக்கும்படி வாசகர்கள் பலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வாரந்தோறும் சிறுகதைகள் பிரசுரிப்பது நமக்கும் சுலபமான காரியந்தான். இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளில் ஒன்றை வாரந்தோறும் கத்தரித்து கம்பாசிட்டரிடம் கொடுத்தால் கதையாகிவிடும். இரண்டொரு பிளாக்கும் செய்து போட்டுவிடலாம். ஆனால் சிறுகதைகள் சமூகத்தில் நிலவும் கோளாறுகளை சித்திரித்துக் காட்டி சிந்தனையைக் கிளறிவிடக் கூடியதாய் இருக்கவேண்டுமென்பது நமது ஆசை. அந்த ஆசையை நமது நண்பர் திரு சா. குருசாமி பீ ஏ அவர்கள் சிறிது காலம் நிறைவேற்றித் தந்தார்கள். அவரின் கதைகளுக்கேற்ற சித்திரங்களும் சென்னையிலேயே தயாரிக்கப்பட்டு வந்து பிரசுரித்து வந்தோம். அன்னாருக்கு ஓய்வு இல்லாததால் படிப்பவர் மனதைத் தொட்டிழுக்கும் அன்னவரின் கதைகள் நின்றுவிட்டன. பின்னர் சிறுகதை போட்டி ஆரம்பித்து மலாயாவிலுள்ள எழுத்தாளர்களுக்குக் கதை எழுத சந்தர்ப்பமளித்தோம். பல கதைகளுக்குப் பரிசு வழங்கினோம். சென்ற மாதப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ஒன்றை இன்றைய பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறோம். போட்டிக்குக் கதை எழுதுகிறவர்கள் சிலர் முயற்சி எடுத்து எழுதுகிறார்கள். சிலர் கதையா, கட்டுரையா, கடிதமா என்பது கூடத் தெரிந்துகொள்ள முடியாத தோரணையில் எழுதியனுப்புகிறார்கள். அவை யாவற்றையும் படித்துப் பார்த்துப் பரிசீலனை செய்யப்படுகிறது. சிலர் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளைக் காப்பியடித்து அனுப்பி விடுகிறார்கள் என்றாலும் சிறுகதைப் போட்டியை நாம் தொடர்ந்தே நடத்தி வருகிறோம். சிறுகதைகள் எப்படியிருந்தால் ஜன சமுகத்திற்கு நன்றாக இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணங்காட்ட இதே பத்திரிகையில் நண்பர் சா. குருசாமி அவர்கள் எழுதிய பஸ் கண்டக்டர் கதை ஒன்றைப் பிரசுரித்திருக்கிறோம். சிறுகதை எழுத விரும்புகிறவர்கள் தமிழ் முரசில் ஏற்கனவே வெளியான நண்பர் சா. குருசாமி அவர்களின் கதைகளைப் பலமுறை படிக்க வேண்டுகிறோம். தமாஷா கதை எழுத விரும்புகிறவர்கள் கலைமகள், விகடன், கல்கி முதலான இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகளைப் படித்துக் கதைகள் சித்திரிக்க முயற்சிக்கலாம். வாசகர்களின் ஆசையைத் தீர்க்க சில காலத்திற்குக் கத்தரிப்பு மேஸ்திரி வேலையை மேற்போட்டுக் கொள்கிறோம்.

சா குருசாமி சாரங்கபாணியின் பள்ளித் தோழர். கோ சா-வின் மற்றொரு பள்ளித் தோழர் ரா வேங்கடராஜுலு நாயுடு. மூவரும் திருவாரூர் Board High Schoolல் ஒன்றாகப் படித்தவர்கள். வேங்கடராஜுலு நாயுடு தமிழ்நாட்டில் டாக்டர் வரதராஜுலு நாயுடு நடத்திய தமிழ்நாடு பத்திரிகையிலும் தி சு சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த தினமணி நாளிதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றிவிட்டு 1952ல் கோலாலம்பூர் தமிழ் நேசன் பத்திரிகைக்குத் தலைமை ஆசிரியராக வந்தவர். நேசனின் ஞாயிறு பக்கங்களை கவனித்துக்கொள்ள அவருடன் வந்தவர்தாம் கு அழகிரிசாமி. 1951ல் சா குருசாமியைத் தமிழ் முரசுக்கு வருமாறு அழைத்தார் கோ சா. அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தவரே, சேலத்தில் 1947ல் பூந்தோட்டம் இதழைச் சொந்தமாக நடத்தியபின், சி பா ஆதித்தன் சேலத்தில் ஆரம்பித்த தினத்தாள் பத்திரிகையிலும் பெரியாரின் விடுதலை பத்திரிகையிலும் துணையாசிரியாகப் பணியாற்றிய வை திருநாவுக்கரசு.

முரசின் தலையங்கம் குறிப்பிட்ட சா குருசாமியின் பஸ் கண்டக்டர் கதை 7 ஜனவரியில் இடம்பெற்றது. ஆசிரியர் ஒருவர் போராட்டத்தில் கலந்துகொண்டு வேலை நிறுத்தம் செய்யும் தருணத்தில் அரசாங்கத்தின் சீற்றத்திற்கு ஆளாகி வேலையை இழந்து விடுகிறார். வறுமை தொடர்கிறது. மனைவியும் சாகிறாள். பிறகு பஸ் கண்டக்டர் வேலைக்குப் போகிறார். சமூகத்தையும் அரசாங்கத்தையும் கொஞ்சம் சீண்டிவிட்டுக் கிண்டல் செய்து பார்க்கும் கதை அது. இந்தக் கதை இதே தலைப்பில் ஏற்கனவே 6 பிப்ரவரி 1949ல் வந்துள்ளது.

1949ல் சா குருசாமியின் 6 கதைகள் முரசில் வந்தன. அவற்றுள் ஒன்றுதான் மீண்டும் பிரசுரமான பஸ் கண்டக்டர். 21 மார்ச் 1950ல் முரசு சிறுகதைப் போட்டிக்குக் குறிப்புகள் தரும்போது ‘கதைகள் மலாயா நாட்டுப் பழக்க வழக்கங்களையும் சுற்றுச் சார்புகளையும் அடிப்படையாகக் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கதைகள் சமூக சீர்திருத்த நோக்கங்களையும் கருத்துகளையும் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னாளில் குத்தூசி குருசாமி என்று பிரபலம் அடைந்த சா குருசாமியின் கதைகள் முரசின் கதை இலக்கணத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்தன. குருசாமி 1947ல் 15 கதைகளும், 1948ல் 4 கதைகளும் முரசில் எழுதினார். 1949க்குப் பிறகு அவருடைய கதைகள் முரசில் இடம்பெறக் காணோம்.

சீர்திருத்தக் கதைகளை சா குருசாமிக்கு முன்னதாகத் தமிழில் மிக ஆரம்பக் கட்டத்திலேயே எழுதிய ந பழனிவேல் 1936ல் 14 கதைகளை வரைந்து தள்ளினார். அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில் வருஷத்துக்கு ஒரு கதையாக எழுதிய அவர் 1952ல் 8 கதைகளை எழுதிவிட்டு, 1955ல் ஒரு கதை மட்டுமே புனைந்தார்.

1952க்குப் பிறகு சிறுகதையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் இரண்டு பேர். வல்லிக்கண்ணன் 1952 முதல் 1955 வரை மொத்தம் 67 கதைகள் எழுதினார் முரசில். அவற்றுள் 33 கதைகள் ஒரே ஆண்டில் 1953ல் இடம்பெற்றன. முருகு என்ற புனைபெயரில் 1953 முதல் 20 கதைகள் எழுதியவர் முரசின் உதவி ஆசிரியர் அ முருகையன்.

கந்தசாமி வாத்தியாரின் விதவையின் காதல் சிறுகதை முரசில் 23 ஜனவரி 1949ல் வந்தது. ‘செல்வச் செழிப்பில் வளர்ந்த பெண்ணொருத்தி இளம் வயதிலேயே தன் கணவனை இழந்து விதவையாகிறாள். அதனால், அவள் இன்பம் கனவாகிறது. பிறகு அவள் முஸ்தபா என்ற இளைஞனைப் பார்த்ததும் துயரத்தை மறந்து நெருங்கிப் பழகுகிறாள். ஆரம்பத்தில் அதை எதிர்த்த தந்தை பின்னர்ச் சம்மதிக்கிறார். இறுதியில், அவருடைய ஆசியினால் விதவையின் காதல் மலர்ந்து மணம் வீசுகிறது.’ (இந்தக் கதைச்சுருக்கம் இடம்பெற்ற நூல் தேசிய நூலகம் 2009ல் வெளியிட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936-1960, தொகுதி I பக்கம் 33.)

கந்தசாமி வாத்தியார் ஒரு தேர்ந்த விமர்சகரே தவிர கற்பனை மிக்க படைப்பாளி அல்லர். தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டித் தொடரில் 1958 மார்ச் மாதத் தலைப்பு விளையாட்டு பொம்மை. காமம், காதல் இல்லாமல் மலாயாச் சூழ்நிலையில் கதை இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கிணங்க ரெ கார்த்திகேசு முதற்பரிசாக 25 வெள்ளியைத் தட்டிச் சென்றார். அலோர் ஸ்டார் ச சாந்தினிக்கு இரண்டாம் பரிசு 15 வெள்ளி. முல்லை எனும் புனைபெயரைக் கொண்ட பினாங்கு ம முருகையனுக்கு மூன்றாம் பரிசு 10 வெள்ளி. இப்போட்டியில் சு நாராயணன் எனும் பெயரில் பங்கேற்ற கந்தசாமி வாத்தியாருக்கு ஆறுதல் தகுதியே கிடைத்தது. #