Wednesday, September 16, 2009

சந்திப்பு 5 : இராம கண்ணபிரான் (Rama Kannapiran)


எழுத்தாளர் இராம கண்ணபிரானை நான் சந்தித்த தினம் 1982 மே 4. அவர் குடியிருந்த தோ பாயோ வீட்டில் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டரை மணி வரை நாங்கள் பேசினோம்.
மேலும் சில விளக்கம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை அவரை மறுபடியும் சந்தித்தேன். மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஏழே கால் மணி வரை உரையாடல் நீடித்தது.
(புதிய தகவல்களை அடைப்புக்குறிக்குள் சேர்த்திருக்கிறேன்.)



.. எது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்?

இந்நாட்டுப் பிரச்னைகளைத் தொட்டு எழுதக்கூடியது. இந்த இடம் இந்திய, தமிழ், சீன, மலாய் மக்கள் வாழும் இடம். இவற்றை யார் வேண்டுமானாலும் எழுதலாம். உதாரணத்திற்கு அகிலன். மலேசிய சிங்கப்பூர் வட்டாரம் பற்றிக் கதை, நாவல் எழுதியிருக்கிறார். நெஞ்சினலைகள், பால்மரக்காட்டினிலே நாவல்களைச் சொல்லலாம்.

இங்கே உள்ளவர்தான் எழுதவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இங்குள்ள பிரச்னைகளை நேரில் உணர்ந்து எழுதினால் நல்லது. மற்றவர்கள் எழுதினாலும் பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து விஷயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்டு எழுதவேண்டும்.

(மலேசியாவுக்கு வராமலேயே அகிலன் நெஞ்சினலைகள் எழுதினார். குறிப்புகள் சேகரித்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நாவல் அது. மலேசியா சிங்கப்பூருக்கு வந்துவிட்டுப் போனபின் பால்மரக் காட்டினிலே நாவலை கலைமகள் இதழில் தொடராக எழுதினார். அதில் சில factual errors இடம்பெற்றது உண்மைதான்.

கறுப்புத்துரை என்ற சிறுகதை அவர் இங்கேயே எழுதி உதயம் இதழுக்கு அனுப்பியது.

அந்தக் கதைக்கு அகிலன் முதலில் வைத்த பெயர் வேறு. கந்தசாமியின் மகன் என்று ஏதோ ஒரு பெயர் என நினைக்கிறேன். அதைவிட கறுப்புத்துரை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னவர் நா. கோவிந்தசாமி. வெள்ளைத்துரையைப் போலவே நம் கறுப்புத்துரைகள் மலேசியத் தோட்டங்களில் எப்படி அட்டகாசம் செய்தார்கள் என்பதை கோவிந்தசாமி எடுத்துச் சொன்னார். அகிலன் உடனே பழைய தலைப்பை அடித்துவிட்டுக் கறுப்புத்துரை என்று எழுதியதை நானே கோவிந்தசாமி வீட்டில் என் கண்ணால் பார்த்தேன்.

அகிலன் இங்கு வருவதற்குமுன் இங்கு வெளிவந்திருக்கும் இலக்கியத்தைப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று விடாப்பிடியாகச் சொல்லிவிட்டார். பல நூல்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றுள் மலபார் குமாரின் குறுநாவல் செம்மண்ணும் நீலமலர்களும் அகிலனை அதிகமாகக் கவர்ந்தது.
(இந்த நாவலுக்கு உண்மைச் சூழலை அறிய குமாரும் நானும் (பாலபாஸ்கரன்) தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஒரு ரப்பர்த் தோட்டத்திற்குச் சென்று இரண்டு நாள் தங்கியது ஞாபகத்திற்கு வருகிறது.)


மலேசிய சிங்கப்பூர்க் கதைகளைப் படித்துவிட்டு அகிலன் தமிழ்நாட்டிலேயே ஒரு இதழில் ரசனையோடு விமர்சனம் எழுதியிருந்தார். அதிகக் குறை சொல்லாமல் positive ஆகவே கருத்தைக் கூறியிருந்தார். நம் எழுத்தாளர்கள் அதை மிகவும் பாராட்டி வரவேற்றார்கள்.

என்னுடைய சிறுகதைத் தொகுப்புகள் தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளிவருவதற்கு அகிலனே காரணம்.

அகிலனுடைய கதைகளைக் குறை சொல்பவரும் உண்டு. தி. ஜானகிராமன் இங்கு வந்திருந்தபோது அகிலன் மாதிரி தம்மால் அவசரமாக எழுத முடியாது என்று சொன்னார். தவம் பண்ணினால்தான் கதை வரும் என்பது ஜானகிராமனின் தத்துவம்.

அகிலன் ஊர் திரும்பும்போது வி. டி. அரசு ஆங்கிலத்தில் வெளிவந்த சிங்கப்பூர் மலேசியா தொடர்பான மிகச் சிறந்த ஐந்தாறு சமூக, வரலாற்று நூல்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.)


.. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்?

அளவில் அதிகமாக எழுதுவோர்
மா. இளங்கண்ணன், சே. வெ. சண்முகம்.

தரத்தைக் கருத்தில் கொண்டு எழுதுவோர்
மு. தங்கராசன் (இன்றைய நிலையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமாக மொத்தம் 20 நூல்கள் போட்டிருக்கிறார்),

க. இளங்கோவன் (சிறுகதை, புதுக்கவிதை, உருவகக்கதை),

உதுமான் கனி (இளையவன்),

நா. கோவிந்தசாமி (மதிப்பீடுகள், ஒட்டுண்ணிகள் கதைகள் நன்று),

பொன் சுந்தரராசன் (என்னதான் செய்வது பவுன் பரிசுக் கதை),

மு. சு. குருசாமி,

ந. பழநிவேலு.


.. சிங்கப்பூர்த் தமிழர்கள்?

1. ஆங்கிலத் தமிழர்கள்.. ஆங்கிலம் படித்துவிட்டு அரசாங்க வேலையில் இருப்பவர்கள். தமிழ் தெரியாது. ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். நிறைய பேருக்கு அப்படி ஒன்றும் பெரிய படிப்பு இருக்காது. அதிக பட்சமாக O Level, A Level படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.

2. தமிழ்த் தமிழர்கள்.. தமிழ் மட்டுமே பேசுபவர்கள். தமிழ் மட்டுமே படித்தவர்கள். குறைந்த வருமானம் கொண்டவர்கள். சிங்கப்பூர்த் தமிழரில் பெரும்பான்மையோர் இவர்களே.

3. பயணத் தமிழர்கள்..
கோ. சாரங்கபாணி ஒரு தமிழ் முரசு தலையங்கத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். இவர்களுக்குக் குடும்பம் ஊரில் இருக்கும். (கடுதாசி மூலம்தான் குடும்பமே நடக்கும். கடுதாசி வாழ்க்கை எனலாம். குழந்தை பிறப்பு, நல்லது கெட்டது எல்லாம் பல நாள் கழித்துக் கடிதத்தில்தான் வரும். ஊருக்குப் போகிறவரிடம் சாமான்கள் கொடுத்து வீட்டில் தரச்சொல்வது. ஊரிலிருந்து ஆள் வந்தால் அவரைப் பார்த்து மணிக்கணக்காக ஊர் விஷயங்களை விசாரிப்பது. இவர்களைக் காலி ஆட்கள் என்றுகூடச் சொல்வார்கள். உள்ளூர்க்காரர்கள் இவர்களை ஊர்க்குடுமிகள் என்று கேலி செய்வதுமுண்டு. பதிலுக்கு நாட்டான் என்று உள்ளூர்க்காரர்களைக் கேலிசெய்வர் பயணத்தமிழர். முருகு சுப்பிரமணியம், வி. டி. அரசு போன்றவர்கள் ஆரம்பத்தில் பயணத் தமிழர்களே. முருகு Buffalo Road-ல் குடியிருந்தார்.)

தமிழ்த் தமிழர்களுக்குத்தான் நாம் எழுதவேண்டும். அவர்கள்தாம் அதிகம்.

(ஆங்கிலம் படித்தவர்களுக்கும் தமிழ் படித்தவர்களுக்கும் இடையில் நிலவுகின்ற பிளவைக் காட்டும் கதைதான் நாடோடிகள்.)

(இப்பொழுது தமிழர்களில் புது வகையினரைப் பார்க்கிறோம். New Arrivals என்கிற புது வரவுகள். இவர்கள் bilingual. மற்றொரு வகையினர் contract workers என்கிற ஒப்பந்த ஊழியர்கள்.)


.. அண்மையில் கல்விக் கழகத்தில் (I.E) எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சி நடப்பதாக நா. கோ சொன்னார். அவர் பாடத்தில் ஒரு பகுதியாகவே கதைக் கலையைக் கற்றுத் தருகிறார். ஆசிரியப் பயிற்சி பெறும் 20, 22 வயது கொண்ட இளையர் 30 கதைகளை எழுதினர். அவற்றில் நமக்குச் சம்பந்தமில்லாத இடங்கள் வருகின்றன. குமுதம் ஆனந்தவிகடன் போலவே கதைகள் தென்படுகின்றன. பிரச்னை இல்லை. ஓரிரு கதை மட்டும் பரவாயில்லை.


.. புது எழுத்தாளர்கள்?

. இரா. துரைமாணிக்கம். தமிழ் ஆசிரியர். சிறுகதை எழுதுகிறார். (இப்பொழுது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் போட்டிருக்கிறார்.)

. மசூது. தமிழ் ஆசிரியர். (இப்பொழுது கவிதை பக்கம் போய்விட்டார்.)

. பி. சிவசாமி. ஆசிரியர். (பின்னர் ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்தது.)

. ஸ்ரீதேவி.

. சங்கையா. (பின்னர் அகரம் வெளியீட்டாக விடுதலை சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தார். இவ்வாண்டு காலமானார்.)

. வீரப்பன் லட்சுமி. தமிழ் ஆசிரியை. Potential Writer. Mesage, Form இரண்டும் இணைந்து வருது. சமீபத்தில் நாடகம் நிறைய எழுதுகிறார்.

. RTS-ல் செ. ப. பன்னீர்ச்செல்வம், வி. கலைச்செல்வன், மூர்த்தி முதலானோர்.


.. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என்று நாடுகள் தனித்தனியாக இருந்தாலும் பொதுவாக இந்த நாடுகளின் இலக்கியத்தை Overseas Tamil Literature அயலகத் தமிழ் இலக்கியம் என்ற கோணத்தில் பார்க்கவேண்டும்.

தமிழ்க் கதைகள் ஆங்கிலத்தில் வரும்போதுதான் நல்ல திறனாய்வு கிடைக்கும். Favourable, sharp criticism வரும்.
(இழப்புக்கள் கதை ஓர் அனைத்துலக theme. அதனால் மற்ற நாட்டு வாசகர் சிலர் அதனைத் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர்.)


.. சுமார் 55 கவிஞர்கள் இருக்கிறார்கள்.
கவிக்குலம் போற்றும் தமிழவேள் எனும் கவிதை நூல் வரப்போகிறது. (இப்போது வந்துவிட்டது.)
தமிழவேள் நாடக மன்றத்தின் வெளியீடு அது.

.. புனைகதை எழுத்தாளர்கள் 100 பேர் இருப்பார்கள். இவர்களைப் பிரதிநிதிக்க ஒரு சங்கம் உண்டா? சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பத்தில் கவிஞர்களே நிறைய இருந்தார்கள். புனைகதைப் படைப்பாளர்கள் அதிகம் கிடையாது.

.. எழுத்தாளர் கழகம் கவிதை/கதை தொகுப்புகள் போடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிறுகதைப் பொறுப்பு என்னிடம். தமிழ் முரசு, தமிழ் மலரில் விளம்பரம் கொடுத்தோம். பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. சுமார் இருபது கதைகளே வந்தன. 10, 12 கதைகளைத் தொகுத்து நூலாகப் போடலாம் என்று எண்ணம். என் வேலை முடிந்தது.

ஆங்கில இலக்கியம் படிக்கும் ஒருவர் TV படங்களைப் போல எழுதணும் என்றார். நான்கு கதைகளை அனுப்பினார். ஒன்றுகூடத் தேறவில்லை.

(கதை நூல் வரவேயில்லை. என்னுடன் சே. வெ. சண்முகம், நா. கோவிந்தசாமி ஆகியோர் நீதிபதிகள். நீதிபதிகளின் கதைகளும் உத்தேசத் தொகுப்பில் இருந்தன. நீதிபதிகளின் கதைகளை எப்படி போடுவது என்று சிலர் பிரச்னையை எழுப்பித் தகராறு செய்தனர். ஆகவே நூல் திட்டம் கைவிடப்பட்டது. கவிதைத் தொகுப்புக்கு முல்லைவாணன் பொறுப்பேற்றிருந்தார். அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.)


... எழுதுவோருக்கு எங்கே இடம்?

. RTS. எம். கே. நாராயணன் வந்த பிறகு சிங்கப்பூர்க் கதைகளை ஊக்குவித்தார். ஒரு கதைக்கு 55 வெள்ளி கொடுத்தது வானொலி.

. நாடகம், தொடர் நாடகம், இலக்கிய நாடகம் என்று நிறைய வந்தன. எஸ். எஸ். சர்மா, சே. வெ. சண்முகம் போன்றோர் காசுக்காகவே எழுதினர்.

. நா. கோவிந்தசாமி 40, 45 தனிநாடகங்களும் 3, 4 தொடர் நாடகங்களும் எழுதினார்.

. தமிழ் முரசில் எழுதினால் instant writer திடீர் எழுத்தாளர் ஆகலாம். ஒப்பந்த, பயணத் தமிழர்கள் மட்டுமே முரசில் அதிகமாக எழுதினார்கள். அரசாங்க, சமூக மக்களின் குரலாக முரசு ஒலிக்கவில்லை. சென்னைக் கடிதம், ஜோசியம் படிக்கும் வாசகர்கள் அதிகம். வி இக்குவனம் பொறுப்பாசிரியராக இருந்தபோது சிங்கை சாந்தி, பழனிவேலன் போன்றோர் அதிகம் எழுதினார்கள். வனம் போய்விட்டால் வேறு ஒருவர் வரும்போது அவருடைய போக்கே செயல்படும். முரசுக்கென்று தனித்தன்மை கிடையாது.

. ஏ வீரமணி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் உருவாகி செழிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். He was obsessed with Singapore Tamil Literature.

. Singa இதழும் இந்தியன் மூவி நியூசும் சிங்கப்பூரிலிருந்து வெளியாகின. மூவி நியூசின் தமிழ்ப் பகுதிக்கு சர்மா பொறுப்பாக இருந்தார். வேல் எனும் பெயரில் ஓர் இதழ் நடத்தினார் அவர். பால் உணர்வுக் கதைகள் எழுதி தம் இலக்கிய அரிப்பைத் தீர்த்துக் கொண்டார் சர்மா.


. மலேசியத் தமிழ் இலக்கியம்?

ஒரு காலத்தில் தமிழ் நேசனில் கதை வந்தால்தான் பெருமை என்ற நிலை இருந்தது. காரைக்கிழார் கவர்ச்சியாகக் கதைகளைப் பிரசுரித்தார். முருகு, பரிதாமணாளன் இருந்த வரை அதிக கவர்ச்சி இருக்காது.

ஒரு சிலர் மலேசியர்கள் நம்மைப் புறக்கணிப்பதாகச் சொல்வார்கள். நம்மை அவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பர்.

பவுன் பரிசு கிடைக்கவில்லை என்று மா. இளங்கண்ணன் திட்டிக்கொண்டிருக்கிறார்.

நம் கதைகளில் தமிழ்நாட்டு சாயலும் செல்வாக்கும் அதிகம்.

நம் எழுத்தாளர்களின் intellectual background மிகவும் குறைவு. அதிக பட்ச கல்வித் தகுதி O Level அல்லது A Level தான்.

இதெல்லாம் சேர்ந்து creativity-யை (படைப்பாற்றலை) பாதிக்குது. புதுச்சரக்கு இல்லை. எழுதுபவருக்கு சொந்த philosophy (வாழ்க்கை நோக்கு) இல்லை.

Not all writers are thinkers. Ma Ilankannan is not a thinker.


(எனக்குப் பவுன் பரிசு கிடைத்த பிறகு சிலர் எதிர்ப்புக் காட்டினர். அர்த்தமில்லாத எதிர்ப்பு அது.)

இலக்கியக் களத்தில் சிங்கப்பூர்க் கதைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பது இளங்கண்ணனின் வாதம். மலேசியாவைச் சேர்த்தால்தான் களம் இன்னும் விரிவாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

உலகம் முழுக்க உள்ள தமிழர் பிரச்னையே முக்கியம். அதற்காகத்தான் நாடடோடிகள் எழுதினேன்.


என் வளர்ச்சி

பத்து வயதில் சிங்கப்பூருக்கு வந்தேன். தகப்பனார் ராமசாமி முதலியார் கடை வைத்திருந்தார். தந்தை 1922ல் சிராங்கூன் ரோடில் Sri Ratha Rukmani Vilas புத்தகக் கடை ஆரம்பித்தவர். அந்தக் கடைக்கு எதிரிலே 64 சிராங்கூன் ரோடிலும் மற்றொரு கடை இருந்தது. இதுதான் வாசு வளையல் மண்டி. அப்பா நன்றாகப் பாடுவார். தெருக்கூத்தில் நடித்தவர். மலேசியாவுக்குக் கோயில் விழாக்களின்போது சென்று புத்தகக் கடை போட்டுப் பாட்டுப்பாடி விற்பார். அவருடைய சகோதரர்தான் கோலாலம்பூரில் மனோன்மணி விலாச புத்தகசாலை வைத்திருந்தவர்.

போகப் போகப் புத்தகக் கடையோடு மற்ற சில்லறை சாமான்களும் விற்கப்பட்டன. 1940களின் பிற்பகுதியில் கடை ஜவுளிக் கடையாக மாறியது. ஒரு கட்டத்தில் 1950களில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து கடை நடைபெற்றது. அப்போதுதான் நான் வந்தேன்.

அந்த நேரத்தில் கடைக்கு மேலே எஸ். நாராயணன் B.Sc (செட்டியார்) தங்கியிருந்தார். பார்லிமெண்ட் நாராயணன் என்று பெயர் பெற்ற அவர் நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். அவர் நிறைய கதைகள் படிப்பவர். ஆனந்தவிகடன், குமுதம் வாங்கிப் படித்தார்.

தகப்பனார் அவ்வப்போது ஊருக்குப் போய்வரக் கூடியவர். தாயார் இங்கு இல்லை. என் தனிமைத் துயரத்தைப் போக்க நாராயணனின் நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகங்கள் எல்லாம் எனக்குப் புரியுமா என்று நாராயணன் கேட்பார். கல்கியின் அலை ஓசை நாவல் அவரிடம் இருந்தது.

சிவகாமியின் சபதம் நாவலை 1956ல் படித்தேன். வயது 13 தான். Norris Road-ல் ராமகிருஷ்ணா மடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் மேல் மாடியில் நூலகம் உண்டு. அங்குதான் அந்த நாவலை இரவல் வாங்கினேன். தமிழ் நேசன், தமிழ் முரசு ஏடுகளும் அங்கிருந்தன.

அதே போல Race Course Lane-ல் இருந்த Gandhi Memorial Hall-ல் தமிழ் நேசன், தமிழ் முரசு பத்திரிகைகள் இருக்கும். அவற்றைப் படிப்பேன்.

என் எழுத்து முதலில் அச்சில் வந்தது 1955ல். அப்போது எனக்கு வயது 12. கண்ணன் சிறுவர் இதழில் ஒரு விமரசனக் கட்டுரை எழுதினேன். முந்தைய இரண்டு இதழ்களைப் படித்துவிட்டு விமர்சன ரீதியில் எழுதவேண்டும். இதழ் ஆசிரியர் திருத்திப் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். உள்ளக் கண்ணாடி என்ற தலைப்பில் வெளிவந்தது அது.

ஆர்வி பச்சை மையில் எழுதி கடிதம் அனுப்பினார். பரிசுப் பணம் 5 ரூபாயை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பது சிரமமான காரியம் என்றும் அதற்கு ஈடாக ஓர் ஆண்டுக்கு கண்ணன் இதழ் sea mail-ல் இலவசமாக அனுப்பப்படும் என்றும் அவருடைய கடிதம் தெரிவித்தது. இது எனக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.

1958 ஏப்ரலில் தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மூத்த பிள்ளை கதையை அனுப்பினேன். காதல் இல்லாத கதை எழுதவேண்டும் என்பது விதி. எனக்கு வயது 15தான். காதல் எனக்குப் புதிது. தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அதனால் ஒரு பாதிப்பு எனலாம். போட்டிக்கு வந்த 96 கதைகளில் என் கதைக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுத் தொகையை அனுப்பி கோ. சாரங்கபாணி கடிதமும் எழுதியிருந்தார்.

பிறகு இருண்ட வீடு கதைப் போட்டியில் மீண்டும் எனக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுப் பணத்தை அனுப்பி முருகு சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.

1960ல் அமைதி பிறந்தது கதை எழுதியபோது முருகு என்னைக் கூப்பிட்டு சின்ன வயதில் எப்படி கதை எழுதினாய் என்று கேட்டார். அரைக்கால் சட்டை அணிந்த நிலையில் முருகுவைச் சந்தித்தேன். Buffalo Road-டில் முருகு தங்கியிருந்த நேரம் அது. முரசின் அச்சுக்கோப்பாளர் பொன்னழகை என்னிடம் அனுப்பி ஒரு photo-வும் வாங்கி வரச் சொன்னார். அந்தக் கதையைப் பிரசுரித்து என் படத்தையும் போட்டு எழுத்தாளர் அறிமுகம் செய்தார் முருகு.

63, Buffalo ரோட்டில் முருகுவைப் பார்க்கப் போனபோது அகிலன் கதையைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்த கதை அது. Trunk பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்றார்.

அகிலன் எழுதிய வாழ்வில் இன்பம் நாடக நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். TKS சகோதரர்கள் போட்ட நாடகம் அது. காதல் விரசம் இல்லாத ஒரு கதை.

நான் சொந்தமாக சிறுகதைத் தொகுப்பு போட்டபோது முருகுவிடந்தான் முன்னுரை வாங்கவேண்டும் என்ற ஆசை. அதற்குள் அவர் காலமாகிவிட்டார்.

1961ல் Senior Cambridge தேர்வு வந்தது. கதையின் பக்கம் போகவில்லை.

1965ல் 22 வயதுக்குள் நான் எழுதிய கதைகள் 7.

1966-1969 வரை ஆசிரியப் பயிற்சி. வேலை செய்து கொண்டே பகுதி நேரமாகப் பயிலும் திட்டம் அது. நான் ஆங்கில ஆசிரியர் பயிற்சி பெற்றபோது நா. கோவிந்தசாமி அங்குத் தமிழாசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அவரை நான் tuck shop-ல் சந்தித்ததுண்டு. 1974க்குப் பிறகு அவருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

1968ல் மகள் பிறந்தாள். மனைவியும் சிங்கப்பூருக்கு வந்தார். அந்த ஆண்டில்தான் தமிழ் நேசனுக்கு அவர் பங்கு கதையை அனுப்பினேன். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்குப் பிறகு இரண்டாம் பிரவேசம் எழுத்துத் துறையில்.

தீபம் பொங்கல் மலரில் பிரதிபலிப்பு கதை இடம்பெற்றது. தீபத்தில் 1978ல் இழப்புக்கள் கதை வந்தது. இழப்புக்கள் கதையை ஒரு குறுநாவலாக விரித்து எழுதித் தருமாறு திருமலை கேட்டுக்கொண்டார். அதைச் செய்யவில்லை.


சிறுகதை structure எப்படி வந்தது?

கலைமகள் கதைகள் என்னைக் கவர்ந்தன. நா. கோ கூட சொல்வார் என் கதைகள் கலைமகள் கதையைப் போலவே இருக்கிறது என்று.

அகிலன் கதைகளைப் படித்தேன்.

நா. பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன் முதலியவர்கள் கதைகளையும் வாசித்தேன்.

டாக்டர் மு. வ-வின் நெஞ்சில் ஒரு முள் நாவல்
என்னை ரொம்பவே பாதித்தது.

மொத்தம் 100 ஆங்கிலப் புத்தகங்கள், 200 தமிழ் நூல்கள் படித்திருப்பேன்.

சிறுகதையில் திடீர்த் திருப்பம், suspense வரணும் என்று முதலில் நினைத்திருந்தேன். அவை எல்லாம் அவசியமில்லை என்று இப்போது புரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் moral themes முனைப்பாகத் தெரிகிறது. 4, 5 சம்பவங்களை வைத்து கதையை build up பண்ணுவது வழக்கம். தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று அடிநாதமாக இருக்கும் தொடர்பு climax-ல் புலப்படும்.

கதையின் தலைப்பு theme-ஐ ஒட்டியே வரும்.

object of reading changes over time.

ஆங்கில ஆசிரியர். ஆங்கிலம் பிழைப்பு மொழி. தமிழ்தான் இயல்பு.

ஜெயகாந்தனை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தார். 1969ல் ஆனந்தவிகடனில் வந்த சட்டை கதை.

ந. பழனிவேலு தீபத்தை அறிமுகம் செய்தார். தீபம் இதழ்களை bind பண்ணி வைத்திருந்தார். எல்லா இதழ்களையும் படித்தேன். அந்த binding-கை வேறு யாருக்கோ கொடுத்து அது திரும்பி வராமல் போனதாகவும் பழனிவேலு கூறியிருக்கிறார்.

க. இளங்கோவன் நா. கோ வீட்டுக்கு வருவார். அவர் மூலமாகத்தான் இளங்கோவன் எனக்கு அறிமுகம்.

கற்பனைக்கு அப்பால், கலை வடிவைவிட வாழ்க்கையில் உணர்ந்ததை சாதாரணமாகச் சொல்லணும் என்று ஆசை. திடீர்த் திருப்பம் இருக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். இது நிச்சயம் ஜெயகாந்தனின் பாதிப்பு என்பதில் சந்தேகமில்லை.

தாமரை, செம்மலர் இதழ்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கக்கூடாது என்று அகிலன்தான் சொன்னார். உத்தியோகம் முக்கியமா தாமரை முக்கியமா என்று அவர் கேட்டார். அதிலிருந்து அவற்றை வாங்குவதை நிறுத்திவிட்டேன். அவை இரண்டும் பொதுவுடைமைப் போக்கு கொண்டவை என்பதே அதற்குக் காரணம்.

Serious books, light books என differentiate பண்ணினேன். சிவசங்கரி, சுஜாதாவிலிருந்து தகழிக்குத் தீவிரமாக மாறினேன்.

டாக்டர் தண்டாயுதம், டாக்டர் மா. ராமலிங்கம் என் இலக்கிய விமர்சன குருமார். நா. கோ கூட சொல்வார் நான் ராமலிங்கம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்க்கவேண்டும் என்று.

சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. புதுமைப்பித்தன் கதைகளில் உத்தி முறைகள் நிறைய உள்ளன என்பது தெரிகிறது.

Stream of Consciousness (நனவோடை உத்தி) பாணி என்று நினைத்துக் கொண்டு ஒரு கதை எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். நினைவோட்டம் என்பது நான் கொடுத்த தலைப்பு. நேசனில் கதைகளுக்குப் பொறுப்பாக இருந்த பரிதாமணாளன் தலைப்பை மாற்றி 25 ஆண்டுகள் என்று போட்டார். பவுன் பரிசு வாங்கிய கதை அது.

அவர் அப்படி செய்ததும் நல்லதாகப் போய்விட்டது. நான் எழுதியது நனவோடை உத்தி அல்ல என்பதை James Joyce-சைப் பிறகு படித்து உணர்ந்து கொண்டேன்.

சிறுகதை பற்றிய concept முக்கியமாக moral values கொஞ்சம்கூட மாறவில்லை.

கதையே இல்லாத ஒருகதையாக அமைந்ததுதான் தானாமேரா டையரி. கதையம்சம் இல்லை என்று தண்டாயுதம்கூட சொன்னார். #

No comments: